Skip to main content

தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்த கேப்டன் அமரீந்தர் சிங்!

Published on 30/09/2021 | Edited on 30/09/2021

 

amarinder singh

 

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் தொடர்ந்துவருகிறது. அண்மையில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், அமரீந்தர் சிங்கிற்கும் இடையே நடைபெற்று வந்த மோதலை நிறுத்த, சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸின் தலைவராக்கப்பட்டார்.

 

இருப்பினும் கோஷ்டி பூசல் தீரவில்லை. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து கேப்டன் அமரீந்தர் சிங், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து காங்கிரஸ் மத்திய தலைமை, சரண்ஜித் சிங் சன்னியை முதல்வராக நியமித்தது. இதனையடுத்து சரண்ஜித் சிங் சன்னி இரண்டு துணை முதல்வர்களோடு பதவியேற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து பஞ்சாபின் புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது.

 

இதனையடுத்து திடீர் திருப்பமாக  நவ்ஜோத் சிங் சித்து, தனது பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பஞ்சாப் அமைச்சரவையில் சிலர் சேர்க்கப்பட்டது குறித்து சித்து அதிருப்தி அடைந்ததாகவும், அதனால் அவர் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது.

 

இதற்கிடையே முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கேப்டன் அமரீந்தர் சிங், பாஜக தேசிய தலைவர் நட்டாவையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்கவுள்ளதாகவும், இதனால் அவர் பாஜகவில் இணைவது குறித்து ஆலோசிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்தச் சூழலில் நேற்று (29.09.2021) கேப்டன் அமரீந்தர் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

 

இது பஞ்சாப் மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமித்ஷாவுடனான இந்தச் சந்திப்பின்போது வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியதாக கேப்டன் அமரீந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இந்தநிலையில் கேப்டன் அமரீந்தர் சிங் இன்று, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்தார். இந்த சந்திப்பிற்கான காரணம் குறித்து தகவல்கள் வெளிவராத நிலையில், கேப்டன் அமரீந்தர் சிங் இன்று பிரதமர் மோடியையும் சந்திக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்