
காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு எதிரே பிரபல ரவுடியை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது.
புதுச்சேரி மாநிலம், கருவடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சரத் என்கிற பொடி மாஸ். ரவுடியான இவர், அரியாங்குப்பத்தில் உள்ள தெற்கு காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள தனது தங்கை வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, வீட்டிற்குள் நுழைந்த ஒரு கும்பல், சரத்தின் கழுத்து, தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
படுகாயமடைந்த சரத், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சரத்தின் தங்கை கணவர் அளித்த புகாரில் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்டவரின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது.
கொலை செய்யப்பட்ட சரத் மீது வெடிகுண்டு வீச்சு, கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் இருந்த சரத், சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்து தன் தங்கை வீட்டில் தங்கியிருந்த போது, கொலை செய்யப்பட்டுள்ளார்.
காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள வீட்டிலேயே கொலை நடந்திருப்பது புதுச்சேரி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.