கடந்த 2007- ம் ஆண்டு, ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அதில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தரப்பில் விசாரணைகளுக்கு ப.சிதம்பரம் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என வாதிட்டனர். இதனையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறையினர் ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லாத நிலையில், அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர். இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறியுள்ள பிரியங்கா காந்தி, "அரசின் தோல்விகளை வெளிப்படுத்தியதால் ப.சிதம்பரம் வேட்டையாடப்படுகிறார். நாட்டிற்காக எப்போதுமே விசுவாசமாக பணியாற்றியவர் ப.சிதம்பரம். பாஜக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியவர் அவர். அதற்காகவே இப்போது பழிவாங்கப்படுகிறார். " என தெரிவித்துள்ளார்.