
இந்தியாவில் தற்போது நாடாளுமன்றம் இயங்கி வரும் கட்டடத்தின் வயது கிட்டத்தட்ட 100 ஆண்டுகளை நெருங்குகிறது. ஆதலால், இந்த நாடாளுமன்றக் கட்டடத்திற்குப் பதிலாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டது. இப்புதிய நாடாளுமன்றக் கட்டடம் அதிகமான உறுப்பினர்கள் அமரும் வகையில் நான்கு தளங்களோடு கட்டப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவதற்கு பிரதமர் மோடி கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் அடிக்கல் நாட்டினார். டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடேட் உருவாக்கும் புதிய நாடாளுமன்றக் கட்டடம் அரசியலமைப்பு மண்டபம், எம்.பிக்களின் ஓய்வு அறைகள், நூலகம், நிலைக்குழு அறைகள், சாப்பிடும் பகுதி மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றைக் கொண்டது. இதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், இன்று திடீரென புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நாடாளுமன்றக் கட்டடத்தில் முடிக்கப்பட்ட பணிகளையும், செய்யப்பட்டுள்ள புதிய வசதிகளையும், இரு அவைகளையும் ஆய்வு செய்தார். அவருடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிரகாஷ் பிர்லா மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோர் இருந்தனர்.