!['Plaster of Paris Ganesha idols cannot be allowed' - Supreme Court dismisses petition](http://image.nakkheeran.in/cdn/farfuture/2oibn1KV9H9_Cf1KndWffOP1aHdwFY4kVXzgX6O1UD4/1695036901/sites/default/files/inline-images/a1513_0.jpg)
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை வைக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 74 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் நெல்லையில் வட மாநிலத்தவர் ஒருவர் செய்த விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் இரசாயனங்கள் வைத்துத் தயாரிக்கப்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில், அந்த சிலை தயாரிக்கும் இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் மாவட்ட அதிகாரிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இருந்த அரங்கத்தை மூடி சீல் வைத்தனர்.
இதனால் அந்த சிலையை உற்பத்தி செய்த வடமாநில குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதனர். இந்நிலையில் விநாயகர் சிலையை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரி ராஜஸ்தானை சேர்ந்த பிரகாஷ் என்ற அந்த நபர் உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ‘மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உச்சநீதிமன்றம் மற்றும் மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ஏற்கனவே தாமிரபரணி ஆறு மாசடைந்துள்ளது. இந்நிலையில் கெமிக்கல் கலந்த சிலைகளை நீர்நிலையில் கரைக்கக் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது. சிலைகளை விற்பனை செய்யலாம். ஆனால் அந்த சிலைகளை ஆற்றில் கரைக்கக் கூடாது. அவரிடம் இருந்து யார் யாரெல்லாம் சிலைகள் வாங்கினார்கள் என்பது தொடர்பான முழு முகவரிகளை வாங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் சிலைகளைக் கரைக்க எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது.’ என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
!['Plaster of Paris Ganesha idols cannot be allowed' - Supreme Court dismisses petition](http://image.nakkheeran.in/cdn/farfuture/1NwgGKYTEGaYHj7KiJv4MFVrjH3evL_3ERUwPuMp6ug/1695036941/sites/default/files/inline-images/n54.jpg)
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கில் 'எந்த வகையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்தாலும் அந்த விநாயகர் சிலை அனுமதிக்கப்படாது. வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு இத்தகைய சிலைகளை தயாரிப்பதற்கான அனுமதி கூட கிடையாது' என தமிழக அரசு பதிலளித்தது. அதனைத் தொடர்ந்து 'பொது நீர்நிலைகளில் ரசாயனம் கலந்த சிலைகள் கரைக்க அனுமதிக்க முடியாது என்பது சரியானதுதான்' என கருத்து தெரிவித்து மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், விநாயகர் சிலைகள் தொடர்பான விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளது.