இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலிக்கு பீட்டா அமைப்பு சார்பாக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பாக அறியப்படும் பீட்டா அமைப்பு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பிரபலமானது. இந்த அமைப்பிற்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல பிரபலங்கள் தூதர்களாகவும், தன்னார்வலர்களாகவும் உள்ளனர். இப்படிப்பட்ட பீட்டா அமைப்பு 2019ஆம் ஆண்டின் சிறந்த நபராக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை தேர்ந்தெடுத்துள்ளது.
அண்மையில் ராஜஸ்தானின் அமர் கோட்டையில் ஒரு யானையை 8 பேர் துன்புறுத்துவதைப் பார்த்து, அதனை தடுக்குமாறு வலியுறுத்தியதற்காகவும், விலங்குகளை விலைக்கு வாங்குவதற்கு பதிலாக அதனை தத்தெடுக்க வேண்டும் எனவும் ரசிகர்களை வலியுறுத்தியதற்காகவும் விராட் கோலிக்கு இந்த 'சிறந்த மனிதர்' விருதை பீட்டா அமைப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக அனுஷ்கா சர்மா, நடிகர் மாதவன், ஹேமமாலினி உள்ளிட்டோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.