Skip to main content

தாய்க்கு பணம் கொடுக்கிறார் என கணவர் மீது மனைவி புகார்; மும்பை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Mumbai court sensational verdict for Wife complains about husband giving money to mother

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள தலைமைச் செயலகத்தில் உதவியாளராக 43 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தனது கணவர் மற்றும் மாமியார் மீது வழக்கு தொடர்ந்தார்.

அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, ‘என் கணவர் கடந்த 1993ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2004ஆம் ஆண்டு டிசம்பர் வரை வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அந்த நேரத்தில் விடுமுறை நாட்களில் அவ்வப்போது இந்தியா வருவார். அப்போது, இங்கு வரும்போதெல்லாம் அவர் அவரது தாயுடன் தான் அதிக நேரத்தை செலவிடுவார். அவரது தாய்க்கு ஆண்டுதோறும் ரூ.10,000 பணம் கொடுப்பார். மேலும், அவரது கண் சிகிச்சைக்கும் என் கணவர் தான் முழு பணத்தை செலவழித்தார். எனது மாமியார் மனம் நலம் சரியில்லாதவர். அதை மறைத்து என் கணவர் என்னை திருமணம் செய்துவிட்டார். என் மாமியாரும், என் கணவரின் உறவினர்களும் என்னை மிகவும் கொடுமைப்படுத்துகின்றனர். எனவே, எனக்கு பாதுகாப்பு வழங்கி உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு நேற்று (14-02-24) மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனைவி வைத்த குற்றச்சாட்டை மறுத்த கணவர், “என்னை கணவராக என் மனைவி ஏற்றுக் கொண்டதில்லை. எனது என்.ஆர்.ஐ வங்கி கணக்கில் இருந்து எனக்கு தெரியாமல் ரூ.21.68 லட்சம் பணம் எடுத்து வீடு வாங்கி உள்ளார். அவரிடமிருந்து விவகாரத்து பெற குடும்ப நல நீதிமன்றத்தை நான் அணுகினேன். அதன் காரணமாகவே, எனக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்” என்று கூறினார்.

இதனையடுத்து, இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த கூடுதல் அமர்வு நீதிபதி ஆஷிஷ் அயோசித் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், ‘தனது தாய்க்காக பணத்தையும், நேரத்தையும் செலவிடுவதை குடும்ப வன்முறையாக கருத முடியாது. மனுதாரர் தனக்கு நேர்ந்ததாக கூறப்படும் பாதிப்புகளை நிரூபிக்க தவறவிட்டார். மேலும், மனுதாரர் வேலை பார்த்தும், மாத ஊதியமும் பெற்று வருகிறார். எனவே, அவர் எந்த நிவாரணமும் பெற சட்டப்படி உரிமையில்லை’ எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

சார்ந்த செய்திகள்