Skip to main content

மணிப்பூர் வீடியோ விவகாரம்; குற்றவாளியின் வீட்டிற்கு தீ வைப்பு 

Published on 21/07/2023 | Edited on 21/07/2023

 

Manipur Video Affair home fire issue

 

மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கொலை, கடத்தல், கூட்டுப்பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட முக்கிய நபர்களில் ஒருவரான ஹேராதாஸ் என்பவர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்திருப்பதாக மணிப்பூர் காவல்துறை தரப்பில் இருந்து தகவல் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுமட்டுமின்றி மணிப்பூர் கலவரத்தில் ஈடுபட்ட 657 பேரை இதுவரை கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கலவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக 129 இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியான ஹுய்ரெம் மைத்தேயி (வயது 32) என்பவர் வீடு நோங்க்பாக் என்ற இடத்தில் உள்ளது. இவரது வீட்டை சொந்த கிராமத்தை சேர்ந்த மைத்தேயி இன பெண்களே அடித்து நொறுக்கி தீ வைத்தனர். மேலும் ஹுய்ரெம் மைத்தேயி செயலால் தங்களுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக மைத்தேயி இன பெண்கள் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்