
பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 25 பேர் பலியாகி உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா என்ற பகுதியில் உள்ள சம்ருத்தி மகாமார்க் விரைவுச் சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாகப் பேருந்தின் டயர் வெடித்ததில் பேருந்து ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் பேருந்து சாலையில் கவிழ்ந்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்து அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
புல்தானா மாவட்ட எஸ்பி சுனில் கடசனே இந்த விபத்து குறித்து தெரிவிக்கையில், “தீ விபத்தில் சிக்கிய பேருந்தில் மொத்தம் 33 பேர் பயணம் செய்தனர். அதில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்தின் டயர் வெடித்ததில் பஸ் கவிழ்ந்து தீப்பிடித்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.