
தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்திற்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க மத்திய அரசு முயல்வதாகக் கூறி எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் தமிழகத்தில் இரு மொழி கொள்கை மட்டுமே; மத்திய அரசு இந்தியை திணிக்கக் கூடாது என்று கண்டனங்களையும், கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மராத்திய இலக்கிய மாநாட்டில் பேசிய துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் “ஒரு நிலத்தைக் கைப்பற்ற அதன் மொழியை அழிப்பதே சிறந்த வழி எனத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மத்திய அரசு மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியது. இதனைக் கொண்டாடும் வகையில் டெல்லியில் 96வது அகில இந்திய மராத்திய இலக்கிய மாநாடு நேற்று(20.2.2025) தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் கலந்துகொண்ட துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர், “ஒரு நிலத்தை கைப்பற்றுவதற்கு அதன் கலாச்சாரத்தை பின்னுக்குத் தள்ளி, மொழியை அழிப்பதே சிறந்த வழி” என்று கடந்த காலங்களில் இந்தியா மீது நடந்த படையெடுப்புகளைப் பற்றிப் பேசிய அவர், “அவர்கள் நம் மொழிக்காக நம் கலாச்சாரத்திற்காக நம் மத இடத்திற்காக மிகவும் கொடூரமான அடக்குமுறைகளை கையாண்டு நம்மைக் காயப்படுத்த நம் மத இடத்திற்கு மேலாக தங்கள் இடத்தை உருவாக்கினர்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்தியா மீது படையெடுத்தவர்கள் செய்ததை போல் தான் தற்போது தமிழகத்தின் மீது மத்திய அரசும் அடக்குமுறை செய்துகொண்டிருப்பதாகக் குடியரசு துணைத் தலைவரின் கருத்தைக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.