ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ சந்தா கோச்சாருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
![chanda kochar](http://image.nakkheeran.in/cdn/farfuture/NbpFVEn2nPqySN6rvpJUtMhCtHIfy3Jux2wpAMqm2xQ/1550846448/sites/default/files/inline-images/chanda-kochar_0.jpg)
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான சந்தா கோச்சாரின் கணவர் தீபக் நடத்திவந்த நிறுவனத்தில் வீடியோகான் குழுமம் முதலீடு செய்தது.
அதற்காக வீடியோகான் நிறுவனத்திற்கு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் இருந்து ரூ. 3,250 கோடி கடன் அளிக்கப்பட்டிருந்தது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து சந்தா கொச்சார், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது பதவியில் இருந்து விலகினார்.
அதன்பின் சந்தா கோச்சார், அவரது கணவர் மற்றும் வீடியோகான் நிறுவன அதிபர் வி.என்.தூத் ஆகியோர் மீது கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி அன்று சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்துவந்த சிபிஐ அதிகாரி சுதான்ஷு தார்மிஷ்ரா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவு சிபிஐ கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் மற்றும் வி.என்.தூத் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து சிபிஐ லுக் அவுட் நோட்டிஸை இன்று பிறப்பித்துள்ளது. மேலும் இந்த நோட்டிஸ் அனைத்து விமான நிலையங்கள் மற்றும் இமிக்ரேஷன் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.