
தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இது போன்ற சூழலில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களும் தற்போது அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு அருகே நேற்று (18.03.2025) மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, மீனவர்கள் 3 பேரைச் சுற்றிவளைத்து படகுடன் சிறை பிடித்து அழைத்துச் சென்றது. அதன் பின்னர் மீனவர்கள் 3 பேரும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர். இவர்களை விசாரித்த நீதிபதி வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி (01.04.2025) வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து 3 மீனவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த பிரச்சனை தொடர்பாக வலுவான தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.
இத்தகைய சூழலில் தான் தமிழக மீனவர்களையும் விசைப்படகுகளையும் மீட்க மத்திய மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (19.03.2025) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்நிலையில் தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக் கூறி 11 தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதோடு 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது எனவும் கூறப்படுகிறது.