டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இன்று மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாய் உடல்நிலை குறித்து விசாரித்தார். அவர் விரைவில் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திப்பதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள கெஜ்ரிவால், தனது 50வது பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் ரத்து செய்துள்ளார்.
இதுதொடர்பாக கெஜ்ரிவாலின் ஊடக ஆலோசகர் நாகேந்தர் ஷர்மா கூறுகையில், வாஜ்பாயின் உடல்நிலை மோசமடைந்துள்ள இந்த சூழலில், தனது பிறந்தநாளை தொண்டர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக வீட்டிற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் தொண்டர்களை கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.