![Karnataka government has canceled 4 percent reservation for muslims](http://image.nakkheeran.in/cdn/farfuture/8EURX8OVNonGawrTNX4xHrmimy1HnIQipcuEQ0yu7OM/1679708162/sites/default/files/inline-images/th-1_3727.jpg)
கர்நாடக மாநிலத்தில் சிறுபான்மையினருக்கான 4 சதவீத இடஓதுக்கீட்டை பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு ரத்து செய்துள்ளது .
கர்நாடக மாநிலத்தில் விரைவில் தேர்தல் வரவுள்ளதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனிடையே பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு மக்களுக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் இதுவரை சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இடஓதுக்கீட்டை ரத்து செய்து, அவர்களை 10 சதவீத இடஓதுக்கீட்டு பிரிவுக்கு மாற்றியுள்ளது. அதாவது, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதற்கு பதிலாக அவர்கள் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவு (இ.டபிள்யூ.எஸ்.) இட ஒதுக்கீட்டிற்கு மாற்றப்பட்டுள்ளனர். அதில் 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கிறது. மேலும் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இட ஒதுக்கீடு இனி ஒக்கலிகர்கள் மற்றும் லிங்காயத் சமூகத்தினருக்கும் கூடுதலாக தலா 2 சதவீதம் பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் பசவராஜ் பொம்மை அரசு அறிவித்துள்ளது.