கல்லூரி தேர்வுகளில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க உலகம் முழுவதும் உள்ள கல்லூரிகள் பல்வேறு புதிய புதிய வழிகளை கண்டுபிடித்து பின்பற்றி வருகின்றன. அந்த வகையில் கர்நாடக மாநிலம் ஹவேரி பகுதியில் இயங்கி வரும் பிரபல கல்லூரியான பகத் பி.யூ கல்லூரி நிர்வாகத்தினர், மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்க புதிய வழி ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி, பகத் பி.யூ கல்லூரி மாணவர்கள் தங்களது இடைக்கால பருவத் தேர்வுக்கு வந்தபோது, தலையை மறைப்பதற்காக சிறப்பாக செய்யப்பட்ட அட்டைப்பெட்டிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. அட்டைப்பெட்டிகள் ஒரு பக்கத்தில் மட்டும் திறப்பைக் கொண்டிருந்தன. இதனை மாணவர்கள் தலையில் போட்டுக்கொண்டபின் மாணவர்களால் முன்னால் மட்டுமே பார்க்கக்கூடிய வகையில் அது அமைக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் தலையில் அட்டைபெட்டியை அணிந்தவாறு தேர்வு எழுதும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பலரும் அந்த மாணவர்களின் நிலையையும், கல்லூரி நிர்வாகத்தின் முடிவையும் சமூகவலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.