Skip to main content

இந்தியாவில் நிறுவப்பட்ட உணவு தானிய ஏ.டி.எம்!

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

FOOD GRAIN ATM

 

இந்தியாவிலேயே முதன்முறையாக உணவு தானியங்களை வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தை ஹரியானா அரசு குருகிராமில் சோதனை முயற்சியாக நிறுவியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ‘உலகளாவிய உணவுத் திட்ட’த்தின் ஒரு பகுதியாக இந்த உணவு தானிய ஏ.டி.எம் நிறுவப்பட்டுள்ள நிலையில், இந்த முயற்சி வெற்றிபெற்றால் மாநிலம் முழுவதுமுள்ள நியாய விலைக் கடைகளில் உணவு தானிய ஏ.டி.எம்-மை நிறுவ ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது.

 

நியாய விலைக் கடைகளில் கூட்டத்தைத் தவிர்க்கவும், பொதுமக்களுக்கு எளிதாக உணவு தானியங்களை வழங்கவும் இந்த உணவு தானிய ஏ.டி.எம் நிறுவப்பட்டுள்ளது. உணவு தானிய ஏ.டி.எம் குறித்து துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா தனது ட்விட்டர் பக்கத்தில், “நாட்டின் முதல் உணவு தானிய ஏ.டி..எம் 'அன்னபூர்த்தி' ஹரியானாவின் குருகிராம் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது என்பதைப் பெருமையுடன் அறிவிக்கிறேன். அரசாங்கத்தால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் தானியங்களை எளிதாகவும், சிக்கலில்லாமலும் விநியோகிப்பதே இந்த ஏ.டிஎம்-மின் நோக்கம்" என தெரிவித்துள்ளார்.

 

மேலும், இந்த உணவு தானிய ஏ.டி.எம். குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையில் துஷ்யந்த் சவுதாலா, "உணவு தானிய ஏ.டி.எம். வங்கி ஏ.டி.எம். போலவே செயல்படும். இந்த உணவு தானிய ஏ.டி.எம்-மில் தானியங்களை எடையிடுவதில் ஏற்படும் பிழை குறைவாகவே இருக்கும். இதில் தொடுதிரையுடன் கூடிய பயோமெட்ரிக் முறையும் உள்ளது. பயனர்கள், தங்கள் ஆதார் அல்லது ரேஷன் கார்டு எண்ணைக் கொண்டு தங்களுக்கான உணவு தானியங்களைப் பெற வேண்டும்" என தெரிவித்துள்ளார். இந்த ஏ.டி.எம் 5 - 7 நிமிடங்களில் 70 கிலோ உணவு தானியங்களை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பா.ஜ.க.வில் இருந்து குடும்பத்துடன் விலகிய முன்னாள் ஒன்றிய அமைச்சர்!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Former Union Minister who left BJP with his family in haryana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இதற்கிடையில், பா.ஜ.க கட்சியில் இருக்கும் முக்கிய தலைவர்கள், அக்கட்சியின் மீது அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைவதும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பா.ஜ.கவில் இணைவதும் என மாறி மாறி கட்சி மாறி வருகின்றனர்.

இந்த நிலையில், பா.ஜ.க.வில் இருந்து முன்னாள் ஒன்றிய அமைச்சர் அக்கட்சியில் இருந்து அதிரடியாக விலகி காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார். இது பா.ஜ.க மேலிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சராக இருந்த பிரேந்தர் சிங், ஹிசார் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் இவர், உயிரியல் பன்முகத்தன்மை (திருத்தம்) மசோதா, 2021 மீதான கூட்டுக் குழு மற்றும் மனுக்களுக்கான குழு ஆகியவற்றின் உறுப்பினராகவும் உள்ளார். 

இந்நிலையில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரேந்தர் சிங், பா.ஜ.க.வில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “பாஜகவின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் ஜே.பி நட்டாவுக்கு அனுப்பியுள்ளேன். 2014-19ம் ஆண்டு பாஜக எம்.எல்.ஏவாக இருந்த எனது மனைவி பிரேம் லதாவும் கட்சியில் இருந்து விலகியுள்ளார். நாளை காங்கிரசில் இணைவோம்” என்று கூறினார். 

காங்கிரஸுடன், 40 ஆண்டுகால நீடித்த உறவுக்குப் பிறகு, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரேந்தர் சிங் பா.ஜ.கவில் சேர்ந்தார். கடந்த மார்ச் 10ஆம் தேதி அன்று பிரந்தர் சிங்கின் மகன் பா.ஜ.கவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.