உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோ பகுதியின் லாலுளாய் கிராமத்தைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர், நேற்று அதிகாலை நேரத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். வெளியே சென்ற சிறுமி, வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர்.
அப்போது, சின்ஹாட் சாலையில், கை கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு மோசமான நிலைமையில் சிறுமி கிடந்துள்ளார். இதனை கண்ட பெற்றோர், சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமையை செய்திருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், அதிகாலை நேரத்தில் தனியாக வீட்டை விட்டு வெளியே வந்த சிறுமியை கண்ட அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 3 பேர், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் சிறுமி மயக்கமடைந்துள்ளார். சிறுமி இறந்துவிட்டதாக எண்ணிய அந்த இளைஞர்கள், சிறுமியின் கை கால்களை கயிற்றால் கட்டி சாலையில் வீசிச் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, இளைஞர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.