
ஜம்மு காஷ்மீரில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, நடத்தப்பட்ட முதல் சட்டமன்றத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதன்படி, அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கக்கூடிய உமர் அப்துல்லா முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
அதே சமயத்தில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளில் நாட்டின் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், மூன்று வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் ஜூதானா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக நாட்டின் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இந்த தாக்குதலில், 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில், பாதுகாப்பு படையினரும் போலீசாரும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.