
அதானி குழுமத்தின் சொத்துமதிப்பு கடந்த சில வருடங்களாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பிறகே அதானியின் சொத்துமதிப்பு மிகப்பெருமளவில் உயர்ந்துள்ளதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இருப்பினும் அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு தாறுமாறாக வளர்ச்சி அடைந்ததை அடுத்து உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார். கடந்த சில நாட்களாக அதானி குழுமம் பங்கு சரிந்துள்ளதால் சிறிய வித்தியாசத்தில் இரண்டாம் இடத்திலிருந்து மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் புகழ்பெற்ற அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், இந்தியாவின் அதானி குழுமம் பங்குச்சந்தையில் ஏராளமான மோசடிகளைச் செய்துள்ளதாகவும், அக்குழுமத்திற்கு பெருமளவில் கடன் உள்ளதாகவும் கூறி 106 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையை தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்கு மெருமளவில் சரிந்துள்ளது. இதனையடுத்து தீங்கு இழைக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை ஆதரமற்றது என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளோம் எனத் தெரிவித்தது.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஹிண்டன்பர்க், அறிக்கையின் முடிவில் 88 கேள்விகளை முன்வைத்துள்ளோம். ஆனால் எந்த கேள்விக்கும் பதிலளிக்காத அதானி குழுமம் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது. நாங்கள் வெளியிட்ட அறிக்கையில் உறுதியாக இருக்கிறோம். இதுகுறித்த ஆவணங்கள் தொடர்பான நீண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது என தடாலடியாக கூறியுள்ளது.