
ஐதராபாத்தில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்று (27/12/2020) வெளியிட்ட அறிக்கையில், 'நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக கடந்த டிசம்பர் 25- ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரின் ரத்த அழுத்த மாறுபாடு சீராகி, உடல்நிலைத் தேறியுள்ளது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.
உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவர் ஒரு வார காலம் ஓய்வெடுக்க வேண்டும். கரோனா தொற்று ஏற்படக் கூடிய சூழல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், மன அழுத்தத்தைத் தவிர்த்து மிகக் குறைந்தபட்சப் பணிகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும் ரஜினிகாந்திற்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆனார் நடிகர் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் உடல்நலம் பெறவேண்டும் என திரைப்பிரபலங்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 'தளபதி' படத்தில் ரஜினியுடன் நண்பனாக நடித்த கேரள நடிகர் மம்முட்டி 'சீக்கிரம் நலம் பெறு சூர்யா-அன்புடன் தேவா' என தளபதி படத்தில் ரஜினி நடித்த கதாபாத்திரத்தினை நினைவுபடுத்தும்படி ட்வீட் செய்துள்ளார்.