Skip to main content

ஆஜராக உத்தரவிடும் நீதிமன்றங்கள்; அவகாசம் கோரும் கெஜ்ரிவால்

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
Courts requesting attendance; Kejriwal seeking time

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.

இந்த சூழலில் கடந்த 02-02-2024 அன்று விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஐந்தாவது முறையாக சம்மன் அனுப்பியது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்தார். 5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணையை பிப்ரவரி 7 ஆம் தேதியான இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பிப்ரவரி 17 ஆம் தேதி டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கடந்த 2018, மே 6 ஆம் தேதி யூ டியூபர் துருவ் ரவி என்பவர் பாஜகவுக்கு எதிராக வெளியிட்ட வீடியோவை அர்விந்த் கெஜ்ரிவால் பகிர்ந்திருந்தார். தவறான தகவல்களை சித்தரித்து வீடியோ வெளியிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்து கெஜ்ரிவால் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஆஜராக கொடுத்த உத்தரவை எதிர்த்து கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் அவர் பிப்.29 ஆம் தேதி ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் பணிகள் இருப்பதால் வேறு தேதியில் ஆஜராக அவகாசம் கோரி கெஜ்ரிவால் தரப்பு வாதங்களை வைத்து வருகிறது.

அண்மையில் நடந்த பள்ளி திறப்பு விழா ஒன்றில், 'பாஜகவிற்கு அடிபணியமாட்டேன், பாஜகவில் சேரமாட்டேன்' என அர்விந்த் கெஜ்ரிவால் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்