Skip to main content

'மருத்துவம் தவிர பிற காரணங்களுக்காக தமிழகத்திலிருந்து வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்'- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி!

Published on 17/06/2020 | Edited on 17/06/2020

 

coronavirus lockdown puducherry cm narayanasamy


புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நேற்று (16/06/2020) செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: "இந்திய பிரதமர் நரேந்திரமோடி மாநில முதல்வர்களுடன் காணொளிக் காட்சி மூலமாகப் பேசினார். மத்திய அரசு கருத்துகளைக் கேட்கிறதே தவிர மாநில அரசுகள் வைக்கின்ற கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுவதில்லை.  

 

குறிப்பாக கரோனா சம்மந்தமான கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்கிறார்களே தவிர தேவையான நிதியுதவி பற்றி மத்திய அரசிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. ஆனால் இந்த முறை நிதிப்பற்றாக்குறையை பிரதமர் கவனத்தில் எடுத்துக்கொண்டு புதுச்சேரி மாநிலத்திற்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. புதுச்சேரியில் கரோனா பரவுவதற்குக் காரணம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளிருந்து புதுச்சேரிக்கு மருத்துவத்திற்காக வருவர்களாலும், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு வருபவர்களாலுமே பரவுகிறது.  

 

ஏற்கனவே கோயம்பேட்டிலிருந்து வந்தவர்களால் புதுச்சேரியில் கரோனா தொற்று வந்தது. ஆகையால் முழுமையாக எல்லைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இ-பாஸ் வைத்திருந்தாலும் கூட மாநில அரசின் அனுமதியின்றி சென்னையிலிருந்து வருபவர்கள் யாரையும் உள்ளே விடக்கூடாது. அவர்கள் அப்படி வந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 

 

அதேபோல் கடலூர், விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளிலிருந்து மருத்துவத்திற்காக வருகிறவர்கள், குறிப்பாக, டயாலிசிஸ் நோயாளிகள் மற்றும் பிரசவத்திற்குத் தவிர மற்ற யாரையும் உள்ளே விடக்கூடாது என மிகத் தெளிவாகக் கட்டளையிடப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் வரும்போது நோய்த் தொற்று இல்லை எனச் சான்றிதழுடன் வந்தால் தான் புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

 

புதுச்சேரியில் கடைகள், மதுக்கடைகள், ஓட்டல்கள் திறக்கின்ற நேரம் மாறி இருக்கிறது என்பதால் பலர் அதைக் காரணம் காட்டி வெளியே சுற்றுகின்றனர். எல்லாவற்றுக்கும் ஒரே நேரம் இருக்கவேண்டும் எனக் கருத்துக் கூறப்பட்டது. ஆகையால் கடைகள் நேரங்களைக் குறைப்பது குறித்து வியாபாரிகளிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். எல்லைப் பகுதிகளை மூடி வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் இருந்தால் கரோனா கட்டுப்படுத்தப்படும்.
 

http://onelink.to/nknapp


அதேபோல் சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை என்றால் அதிக அபராதம் விதிக்கப்படும். முகக்கவசம் அணியவில்லை என்றால் இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும்". இவ்வாறு புதுச்சேரி முதல்வர் கூறினார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.