Skip to main content

உன் சாதி என்ன? கடைசி பெஞ்சுக்கு போ! - சாதியம் வளர்க்கும் ஆசிரியர்

Published on 25/04/2018 | Edited on 25/04/2018

பள்ளி மாணவியின் சாதியைக் காரணம்காட்டி, பின் பெஞ்சுக்கு அனுப்பிய ஆசிரியருக்கு கண்டனங்கள் குவிந்துள்ளன.

 

Caste

 

உத்தரப்பிரதேசம் மாநிலம் முஷாப்பர்நகரில் உள்ள பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கிறாள் 13 வயது சிறுமி. சக மாணவிகளுடன் முதல் வரிசையில் இருந்த அந்த மாணவியை எழுப்பிய ஆசிரியர், உன் சாதி என்ன? என சக மாணவ, மாணவிகளின் மத்தியில் கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி தயங்கியபடியே வால்மீகி என பதிலளித்துள்ளார். வால்மீகி சமுதாயம் தாழ்த்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வரக்கூடியது. மாணவியின் சாதியை அறிந்துகொண்ட ஆசிரியர், அவரை கடைசி பெஞ்சுக்கு அனுப்பி அமரவைத்துள்ளார். 

 

இதனால் மனமுடைந்த மாணவி வீட்டிற்கு சென்றதும் பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதையறிந்து ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர் பள்ளியை முற்றுகையிட்டு, சம்மந்தப்பட்ட ஆசிரியரைக் கைதுசெய்யுமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பள்ளியின் தலைமையாசிரியர் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மாணவி சக மாணவியுடன் பேசியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விளக்கியுள்ளார்.

 

இருப்பினும், சிறுமியின் பெற்றோர் அதை ஏற்காத நிலையில், காவல்துறையினர் சம்மந்தப்பட்ட ஆசிரியரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சாதிய ரீதியிலான ஒடுக்குமுறைகளைக் களைய வேண்டிய கல்விச்சூழலே, அதை வளர்க்கும் கூடாரமாக மாறிவருவது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'வி.பி.சிங்கின் துணிச்சலை முதல்வரும் வெளிப்படுத்த வேண்டும்'-ராமதாஸ் வலியுறுத்தல்   

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

'The Chief Minister should also show the bravery of VP Singh'- Ramadoss emphasized

 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பதினைந்தாம் ஆண்டு நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படவுள்ள நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதே அவருக்கு செலுத்தும் மரியாதை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியாவின்  முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பதினைந்தாம் ஆண்டு நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் அவரது திருவுருவச் சிலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது. இது சமூகநீதிக் காவலருக்கு செய்யப்படும் மிகப்பெரிய மரியாதை ஆகும். இது வரவேற்கத்தக்கது.

 

அதேநேரத்தில், வி.பி.சிங் அவர்களின் கனவான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது  தான் அவருக்கு தமிழக அரசு செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும். வி.பி.சிங் அவர்கள்  பிரதமர் பதவியில் இருந்த போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பெரிய அளவில் எழுப்பப்படவில்லை. எனினும், அவரது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தேவை எழுந்த போது, அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 2006 & ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில்  நான் வலியுறுத்தியதன் பயனாக, அதே ஆண்டில் அதற்கான சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி 27% இட ஒதுக்கீட்டை செயல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. அக்கோரிக்கையை வி.பி.சிங் ஆதரித்தார்.

 

2007  ஆம் ஆண்டில் கடுமையான உடல்நலக் குறைவால் வி.பி.சிங் பாதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரகக் குறைபாட்டுக்காக ஒருநாள் விட்டு ஒருநாள் குருதி சுத்திகரிப்பு செய்ய வேண்டியிருந்தது. அத்தகைய சூழலிலும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை மேற்கொண்ட வி.பி.சிங், பிரண்ட் லைன் ஆங்கில இதழுக்கு  அளித்த நேர்காணலில்,‘‘ மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் நான் 27% இட ஒதுக்கீடு கொண்டு வந்த போது சாதிவாரி கணக்கெடுப்புக் குறித்து உச்சநீதிமன்றம் வினா எழுப்பவில்லை. ஆனால், இப்போது வினா எழுப்பும் நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியம். அதை ஓராண்டுக்குள் செய்யவேண்டும்’’ என்று வலியுறுத்தினார். அதை தேசிய அளவில் செயல்படுத்த வாய்ப்பற்ற நிலையில், மாநில அளவில் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி முதல்வர் செய்ய வேண்டும்.

 

இந்தியாவின் சமூகநீதிக் காவலர் என்று வி.பி.சிங் போற்றப்படுவதற்கு காரணம் மிகக் கடுமையான அரசியல் எதிர்ப்புகளையும் மீறி மண்டல் ஆணையப் பரிந்துரைகளை செயல்படுத்தியது தான். அதனால்,  அவர் ஆட்சியை இழந்தார்; அதன்பின் வந்த தேர்தல்களில் உயர்சாதி வாக்குவங்கியை இழந்தார்; பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயமும் அவரை முழுமையாக ஆதரிக்கவில்லை. அதனால், அவரது அரசியல் எதிர்காலம் முடிவுக்கு வந்தது. ஆனாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல், தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

 

‘‘மண்டல் ஆணைய அறிக்கையை செயல்படுத்துவதற்கு முன்பாக நான் செய்த அனைத்து செயல்களும் சிறப்பானவை என்று பாராட்டப்பட்டன. மண்டல் அறிக்கையை செயல்படுத்திய பிறகு நான் செய்த ஒவ்வொன்றும் நாட்டிற்கு இழைக்கப்பட்ட தீமையாக பார்க்கப்பட்டன. இந்த ஆட்டத்தில் எனது கால் உடைந்தாலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்ற கோலை (நிளிகிலி) அடித்து விட்டேன். அந்த விஷயத்தில் மகிழ்ச்சி. எந்த ஒரு பொருளுக்கும் ஒரு விலை உண்டு. அந்த விலையை நீங்கள்  செலுத்தி தான் ஆக வேண்டும். ஒரு செயலை செய்துவிட்டு, அதற்கு இப்படி ஒரு விலை கொடுக்க வேண்டியதாகிவிட்டதே என வருத்தப்படக் கூடாது. நான் கொடுத்த விலை மண்டல் ஆணையத்தின் அறிக்கையை செயல்படுத்தியதற்கானது ஆகும்’’ என்று கூறி தமது அரசியல் துணிச்சலை வி.பி.சிங் வெளிப்படுத்தினார்.

 

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு இருந்த அரசியல் துணிச்சல் இப்போது தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்பது தான் எனது எதிர்பார்ப்பு ஆகும். 27 விழுக்காடு  இட ஒதுக்கீட்டை வி.பி.சிங் செயல்படுத்திய போது அவருக்கு அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஆனால், இப்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் எந்த எதிர்ப்பும் இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கும் கட்சிகள் தமிழக அரசியலில் துடைத்து எறியப்படும் என்பதால் எவரும் எதிர்க்க மாட்டார்கள்.  ஓபிசி மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு கொடுத்து சமூக நீதி வழங்குவதற்கு வி.பி.சிங்கிற்கு எதிராக இருந்த சூழல், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி சமுகநீதி வழங்குவதில் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது. ஆனாலும், தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவும், அது குறித்து பேசவும் மு.க.ஸ்டாலின் அஞ்சுவது ஏன்? எனத் தெரியவில்லை.

 

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், எவ்வளவு இழப்புகள் ஏற்பட்டாலும் அதை தாங்கிக் கொண்டு சமூக நீதியை செயல்படுத்துவது தான் சமூகநீதி அரசியல் தலைவர்களுக்கு அழகு. ஆனால், எந்த இழப்பும், எந்த எதிர்ப்பும் இல்லாமல், நற்பெயரைப் பெற்றுக் கொடுத்து, வரலாற்றில் இடமளிக்கக் கூடிய சாதிவாரி  மக்கள்தொகை கணக்கெடுப்பை மாநில அரசின் சார்பில் நடத்த அஞ்சுவது அழகல்ல. எனவே, அனைத்து அச்சம் மற்றும் தயக்கங்களை தகர்த்தெறிந்து தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு  நடத்த வேண்டும். அதற்கான அறிவிப்பை வி.பி.சிங் அவர்களின் சிலைத் திறப்பு விழாவில் வெளியிடுவதன் மூலம் வி.பி.சிங் அவர்களுக்கு உண்மையான மரியாதையை மு.க.ஸ்டாலின் அவர்கள் செலுத்த வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

Next Story

'தீண்டாமை வேலியை ஏற்க முடியாது' - நீதிமன்றம் கருத்து 

Published on 09/11/2023 | Edited on 09/11/2023

 

'Fence of untouchability is unacceptable'-Court opined

 

'தீண்டாமை வேலி போன்ற குற்றச் சம்பவங்களை ஏற்க முடியாது' என உயர்நீதிமன்ற கிளை மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

 

அண்மையில் கரூர் மாவட்டம் கடவூர் பகுதியைச் சேர்ந்த சின்னமுத்து என்பவர் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட நிலையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்பொழுது ஊரைச் சேர்ந்தவர்கள் அவர்கள் ஊருக்குள் வரக்கூடாது எனத் தீண்டாமை வேலி அமைத்ததாகக் கூறப்படுகிறது. இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சின்னமுத்து சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

அதில், வேறு சமூகத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொண்டதால் தீண்டாமை வேலி அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று நடைபெற்ற விசாரணையில், தீண்டாமை வேலி போன்ற குற்றச் சம்பவங்களை சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதி இளங்கோ, அந்தப் பகுதியில் ஏதேனும் தீண்டாமை வேலி இருக்கிறதா என கரூர் ஆட்சியர், பாலவிடுதி காவல் ஆய்வாளர் ஆகியோர் ஆய்வு செய்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.