லாவலின் ஊழல் வழக்கில் பினராயி விஜயன் மீது குற்றமில்லை: கேரள உயர்நீதிமன்றம்
லாவலின் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக, எந்த சாட்சியங்களும் நிரூபிக்கப்படவில்லை என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1996 முதல் 1998 வரை கேரள மாநிலத்தின் மின் துறை அமைச்சராக இருந்தவர் பினராயி விஜயன். 1997-ஆம் ஆண்டு கேரளாவின் நீர்மின்நிலையங்களில் மூன்று திட்டங்களுக்கான ஒப்பந்தத்தை எஸ்.வி.எல். லாவலின் என்ற கனடா நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திற்கு வழங்கியதாக தெரிகிறது. இதனால், அரசுக்கு ரூ.345 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பினராயி விஜயன் மற்றும் 6 அரசு அதிகாரிகளின் மீது வழக்குப் பதியப்பட்டிருந்தது.
இந்த வழக்கு குறித்த விசாரணையை சிபிஐ நடத்திவந்தது. கடந்த 2013-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தின் சிறப்பு நீதிமன்றம் பினராயி விஜயன் மற்றும் ஆறுபேர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என அவர்களை விடுவித்தது.
இந்த வழக்கை சிபிஐ மேல்முறையீடு செய்த நிலையில், இன்று கேரள உயர்நீதிமன்றம் திருவனந்தபுரம் சிறப்புநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உறுதி செய்து, பினராயி விஜயனை வழக்கிலிருந்து விடுவித்துள்ளது.
இருந்தபோதிலும், அரசு அதிகாரிகள் ஆறு பேரில் 3 பேர் வழக்கு விசாரணையில் கலந்துகொள்ளவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
- ச.ப.மதிவாணன்