Skip to main content

ஆசிரியையின் கொடூர டார்ச்சர் - மண்டை வெடிக்கப் பலியான மாணவி!

Published on 03/12/2017 | Edited on 03/12/2017
ஆசிரியையின் கொடூர டார்ச்சர் -
மண்டை வெடிக்கப் பலியான மாணவி!



கடந்த 20.10.2017 அன்று கேரளாவின் கொல்லம் நகரில் நடந்த கொடூரம், அந்த மாவட்டத்தையே பதை பதைக்க வைத்து விட்டது.

கொல்லம் டவுணில் டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்தும் பிரசன்னன் தன் மகள்கள் கௌரி நேகா, மீரா கல்யாணி, இருவரையும் அங்குள்ள ட்ரினிட்டி லைசியும் (TRINITY LYCEUM) ஆங்கில மேல் நிலைப் பள்ளியில் படிக்க வைத்திருக்கிறார். கொல்லம் கடற்கரையில் அமைந்திருக்கும் அந்தப் பள்ளியில், மூத்தவள் கௌரி நேகா 10ம் வகுப்பு ’ஏ’ பிரிவிலும், தங்கை மீரா கல்யாணி 8ம் வகுப்பு ’பி’பிரிவிலும் படிப்பவர்கள்.

மாணவி மீரா கல்யாணி, வகுப்பில் சக மாணவியிடம் பேசினார் என்பதற்காக கண்கள் சிவந்த வகுப்பாசிரியை சிந்து போள் அதற்குத் தண்டனையாக அவளை, மாணவர்கள் அமரும் பென்ஜின் மீது நிற்க வைத்திருக்கிறார். அப்படி தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் இரண்டு நாட்களாக நின்ற மீரா கல்யாணி அவமானப்பட்டாள். அதை ஆசிரியையிடம் சொல்லியும். எதுத்தா பேசற, வார்த்தைகளைக் கொட்டிய ஆசிரியை வக்கிரத்தனமாகிப், பெண் பி்ள்ளை என்று கூடக் கருணை காட்டாமல், அவளை மாணவர்கள் அமரும் பெஞ்சிலேயே உட்கார வைத்துத் தண்டனையை அதிகப்படுத்தியிருக்கிறார்.

வயதுப் பருவம். மாணவர்களோடு அமர வைக்கப்பட்டதால், நெளிந்திருக்கிறாள் மீரா. அது மட்டுமல்லாமல் அருகிலுள்ள மாணவர்களின் சீண்டலாலும் அவளது அங்கங்கள் அவர்களோடு உரசுகிற போதும், கூனிக் கூசி நெளிந்த மீரா, மனச் சித்ரவதைகளை அனுபவித்திருக்கிறாள். தன் பெற்றோர்களிடம், ஆசிரியையின் தண்டனைக் கொடூரம் பற்றிச் சொல்லிக் கதறியழ, அதிர்ந்து போன தந்தை பிரசன்னன், தன் மகளோடு பள்ளிக்குச் சென்று முதல்வர் ஜோனிடம் தன் மகளுக்கு நடந்த கொடுமையை, நெஞ்சில் ஈரமில்லா வகுப்பு ஆசிரியை சிந்து போளின் டார்ச்சர் பற்றியும் முறையிட்டவர், போலீசிடம் புகார் தரப்போவதாகச் சொல்லியிருக்கிறார்.


புகார் தர வேண்டாம். நான் ஆசிரியையைக் கண்டிக்கிறேன். இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்று அவரைச் சமாதானப்படுத்தி அனுப்பியிருக்கிறார் பிரின்சிபல் ஜோன்.

பெற்றோரின் புகாரால் ஆத்திரமான ஆசிரியை, பழிவாங்கும் வகையில் மீராவை மாணவ மாணவியிரிடமிருந்து தனிமைப்படுத்திக் கைதி போன்று கார்னரில் வைத்து விட்டார். மன உளைச்சலால் படிப்பில் நாட்டமில்லாமல் தவித்த மீரா, அந்தத் தண்டனையை இரண்டு நாட்கள் தாங்கியும் முடிவுக்கு வராமல் போகவே, தான் பழிவாங்கப்படுவதைப் பெற்றோர்களிடம் சொல்லியழ, தந்தையோ, முத்தவள், கௌரியிடம்,


நீயும் அந்தக் ஸ்கூல்ல தான படிக்க. அவ கிளாஸ் டீச்சர்ட்ட அவ படுதபாட்டச் சொல்லு என்று அனுப்பியிருக்கிறார்.

கடந்த 20.10.2017 அன்று கௌரி, தன் தங்கையைப் பார்ப்பதற்காக அவளது கிளாஸ் ரூமிற்குள் போன போது அவள் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தைக் கண்டு டீச்சரிடம், அவளை மன்னிச்சிடுங்க டீச்சர், ப்ளீஸ் என்று கெஞ்ச. ஆத்திரமான டீச்சர் சிந்து போள்,

என் அனுமதியில்லாமல், எப்படி நீ, இந்தக் க்ளாஸ்ல நுழையலாம் என்றவர், கௌரியை இழுத்துக் கொண்டு தனியாறைக்குப் போனவர் அவளைக் கொச்சைத்தனமான வார்த்தைகளால் திட்டி அனுப்பியதோடு, அவளின் க்ளாஸ் டீச்சர் கிரசன்ட்டிடமும் சொல்லி விட்டார்.

அனுமதி வாங்காம ஏம் அந்தக் க்ளாசுக்குப் போன, வார்த்தைகளை விட்ட கிளாஸ் டீச்சர் கிரசண்ட், மாணவ மாணவிகளின் முன்னால் ஆவேசமாகக் கௌரியைத் திட்டியவர், கெட் அவுட் என்று விரட்டினார். பிரின்சிபாலைப் பார்த்து விட்டு வா, கத்தினார் டீச்சர் கிரசன்ட்.



இரண்டு ஆசிரியைகளின் கொடூரமான, பச்சையான திட்டுக்களால் மனம் உடைந்து போன கௌரி, மதியம் சாப்பாட்டு வேளையில் டிபன் பாக்ஸைத் திறந்தவள், மனம் உடைந்த நிலையில் தனிமையில் கேவி அழுதவள் அதைச் சாப்பிடாமல் அப்படியே வைத்து விட்டு, கொட்டிய கண்ணீரைத் துடைத்தவள், மாடியின் மூன்றாவது ப்ளோரிலிருந்து அப்படியே குதித்து விட்டாள்.

வகுப்பறையில் கௌரி இல்லாததைக் கண்ட டீச்சர் கிரசண்ட், அவளைத் தேடும்படி சில மாணவிகளை அனுப்ப.

ஐயோ டீச்சர் கௌரி. மாடியிலிருந்து குதிச்சி மண்டை ஒடைஞ்சி கீழ, ப்ரைமரி வகுப்பு முன்னால கெடக்கா. நெஞ்சிலடித்துக் கொண்டு கதறியபடி சொல்யிருக்கிறார்கள் மாணவிகள்.

மேலேயிருந்து குதித்ததால், தரையில் மோதிய கௌரியின் தோள் பட்டை, மற்றும் கழுத்து எலும்புகளும் மண்டையும் உடைந்து ரத்தம் கொப்பளிக்கத் துடி துடித்துக் கொண்டிருந்த பயங்கரம், பள்ளி மாணவ மாணவிகளை உலுக்கியிருக்கிறது. கதறியபடி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கௌரியை பள்ளிய நிர்வாகத்திற்குச் சொந்தமான பென்சிஜர் மருத்துவமனைக்குக் கொண்டு போயிருக்கிறார்கள்.

கண்ணீரும், கம்பலையுமாகப் பெற்றோர்களும். உறவினர்களும் மருத்துவமனைக்கு ஒடியிருக்கிறார்கள். மூன்று மணி நேரம் அந்த மருத்துவமனையில் ஏனோ தானோ சிகிச்சை நடந்ததைக் கண்டு கொதித்துப் போன் பெற்றோர் உறவினர்களின் போராட்டத்தால் 5 மணிக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு போக. சிகிச்சை பலனளிக்காமல் அங்கே கௌரியின் உயிர் பறந்திருக்கிறது. நிலைமை பதட்டமாக பள்ளியும் கால வரையின்றி மூடப்பட்டது.

பள்ளி ஆசிரியைகளின் கொடூரமான தண்டனை, வார்த்தை டார்ச்சரால், கோரமான வகையில் கௌரி மண்டை பிளக்க தற்கொலை செய்து கொண்டதைத் தாங்க மட்டாமல் பொது மக்களோடு, எஸ்.எப்.ஐ, மற்றும் கேரள ஸ்டூடன்ட் யூனியன் (SKSU) அமைப்பினரும் திரண்டு வந்து கௌரியின் சாவுக்கு நியாயம் கேட்டுப் போராடியதுடன், சம்பந்தப்பட்ட ஆசிரியைகளான சிந்து போள், கிரசண்ட் இருவரையும் கைது செய்யும்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆக்ரோஷத்தோடு நடந்த அந்தப் போராட்டத்தின் ரூட் மாறியது. கலவரச் சூழல் காரணமாக கல்வீச்சு நடந்ததால் அதைக் கட்டுப்படுத்த போலீஸ் லத்தி சார்ஜ் நடத்தியதோடு கண்ணீர்ப் புகைகுண்டு வீச்சும் நடத்திக் கண்ட்ரோலுக்குள் கொண்டு வந்தது. கல் வீச்சு சம்பவத்தில் பத்திரிகையாளர்கள் உட்பட சிலர் காயம்பட்டனர். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட ஆசிரியைகள் தலைமறைவானதோடு, முன் ஜாமீனுக்காகவும் மூவ் செய்திருக்கிறார்கள்.

வகுப்பறையில் மாணவிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தை கொல்லம் நகர போலீஸ் துணை கமிசனரிடம் ஒப்புக் கொண்டார் பள்ளியின் பிரின்சிபல் ஜோன்.



நாங்கள் அந்த ஆசிரியைகளை வார்ன் பண்ணினோம். அன் எக்ஸ்பெட்டடா நடந்திருச்சி ஆசிரியைகள் இருவரையும் சஸ்பெண்ட் செய்திருக்கிறோம் என்றார் பிரின்சிபல்.

மகளைப் பறிகொடுத்த வேதனையிலிருந்த பிரசன்னன் மனக் கொதிப்பை அடக்கிக் கொண்டு பேசினார். நாங்கள் பல தடவை முறையிட்டும் ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டவில்லை. எங்கள் மகளின் கொடூரச் சாவுக்கு நியாயம் வேண்டும் அதற்கு காரணமான ஆசிரியைகள் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றவரின் உடல் துடித்தது.

கொல்லம் மேற்குக் காவல் நிலையம் இரண்டு ஆசிரியைகளின் மீதும், தற்கொலைக்குக் காரணமானவர்கள் என வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடத் தொடங்கியிருக்கிறது.

ஏனோ தெரியவில்லை. பணக்கட்டுகளை எண்ணும் பள்ளிகள், வளரும் மாணவ மாணவிகளின் மனோபாவத்தை எண்ணிப் பார்க்கத் தவறி விடுகின்றன.

போலீசின் சொதப்பல். தப்பிய ஆசிரியைகள்

மாணவியின் சாவுக்குக் காரணமாக ஆசிரியைகள் சிந்துபோள், கிரசன்ட் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது ஐ.பி.சி. 305 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த கொல்லம் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷாகு, அவர்களை கைது செய்வதற்காகத் தேடிய போது அவர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். அதோடு அவர்கள் கொல்லம் மாவட்ட உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு அபிடவிட் தாக்கல் செய்திருந்தனர்.

இதனிடையே போலீசாரின் வழக்கு ஒட்டையைப் பயன்படுத்திக் கொண்ட ஆசிரியைகளின் வழக்கறிஞர்கள், அவர்களுக்குச் சட்டப் பாடமெடுத்து விசாரணையின் போது சொல்ல வேண்டியதையும் கற்றுக் கொடுக்க, அவர்களின் முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது கொந்தளிப்பான இந்த வழக்கில் அவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்.

அதோடு உயர்நீதிமன்றம் போலீசாரின் விசாரணை நடவடிக்கையையும் கண்டித்திருக்கிறது மாணவியின் சாவுக்கு காரணமானவர்கள் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அதற்கான சாட்சிகளின் விபரம் சொல்லப்படவில்லை நீ, செத்துப்போ, என்று ஆசிரியைகள் சொன்னார்கள் என்று உள்ளதா. எனவும் சுட்டிக் காட்டப்படவில்லை.  மேலும், நடந்தவைகள் ஆசிரியை, மற்றும் மாணவிக்கு மட்டுமே தெரிந்த விஷயம். அதன் பிறகு தான் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள் என்கிற சந்தேகத்தின் அடிப்படையைச் சுட்டிக்காட்டியிருக்கிறது உயர்நீதிமன்றம்.

ஆனால் கொல்லம் மேற்கு காவல் நிலைய அதிகாரிகளோ குற்றப் பத்திரிகையில் நாங்கள் எவரையும் தப்ப விடமாட்டோம் என்கிறார்கள்.

-பரமசிவன்

படங்கள்: ப.இராம்குமார்

சார்ந்த செய்திகள்