Skip to main content

ஆளுநரா? முதல்வரா? - எரிக்கப்படும் அவசர சட்ட நகல்

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

Arvind Kejriwal burnt a copy of the central government's emergency law

 

டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதையும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றவும் நியமிக்கவும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்பதையும் எதிர்த்து டெல்லி ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

 

வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, ‘ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்திற்கு ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழுமையான அதிகாரம் உள்ளது. அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழங்கப்படாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகிவிடும்’ என்று தெரிவித்தனர். ‘அன்றாட நிர்வாகங்கள் அனைத்தையும் மேற்கொள்ள துணைநிலை ஆளுநரை விட முதலமைச்சருக்குத்தான் அதிகாரம் உள்ளது. எனவே ஆளுநர் மாநில அமைச்சரவையின் பரிந்துரைப்படி தான் செயல்பட வேண்டும். அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர்’ என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 

 

ஆனால் டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் மாநில அரசுக்கே முழு அதிகாரம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யும் வகையில், நிர்வாக விவகாரங்களில் துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் என குடியரசு தலைவர் ஒப்புதலுடன் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை புறக்கணிக்கும் வகையில் மத்திய அரசு அவசரம் சட்டம் கொண்டுவந்துள்ளதாக  டெல்லி ஆம் ஆத்மி அரசு கடுமையாக விமர்சித்து வருகிறது. 

 

இந்த நிலையில் மத்திய அரசின் அவசர சட்டத்தின் நகலை டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகத்தில் வைத்து ஜூலை 3 ஆம் தேதி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எரிக்கவுள்ளதாக அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் சேர்ந்து அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் அவசர சட்டத்தின் நகலை எரிப்பார்கள் என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்