
கேரள மாநிலம் குருவாயூர் கோவிலில் திருமண போட்டோசூட்டிற்கு இடையே, திடீரென மிரண்ட யானை தும்பிக்கையால் பாகனைத் தாக்கி தலைகீழாக தூக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் குருவாயூர் கோவிலில் கடந்த 10ம் தேதி ஒரு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின் கோவில் வளாகத்தில் வைத்தே போட்டோசூட் நடைபெற்றது. அதே நேரத்தில் கோவிலுக்குச் சொந்தமான தாமோதரன் தாஸ் என்ற யானையை யானைப்பாகன்கள் அழைத்து வந்துள்ளனர்.
திடீரென மிரண்ட யானை, உடன் வந்த யானைப்பாகனை தலைகீழாக தனது தும்பிக்கையால் தூக்கியுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அந்த பாகன் அப்பகுதியில் இருந்து ஓடிவிட்டார். யானையின் போக்கினை பார்த்த மக்கள் ஒரு பகுதியில் கும்பலாக ஒதுங்கிவிட்டனர். போட்டோசூட்டில் இருந்த மணமக்களும் அப்பகுதியில் இருந்து ஓடிவிட்டனர்.
யானையின் மேல் இருந்த மற்றொரு பாகன் துரிதமாகச் செயல்பட்டு யானையின் போக்கினை கட்டுக்குள் கொண்டு வந்தார். இக்காட்சிகள் அனைத்தும் திருமண போட்டோசூட்டிற்கு வந்த புகைப்படக்காரர்களால் படம்பிடிக்கப்பட்டுள்ளது. புகைப்படக்காரர்கள் இந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது இது வைரலாகி வருகிறது.