Skip to main content

ஹத்ராஸ் செல்ல திட்டமிட்ட பிரியங்கா காந்தி... 144 தடை உத்தரவு பிறப்பித்த அரசு...

Published on 01/10/2020 | Edited on 01/10/2020

 

144 implemented in hathras

 

ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க பிரியங்கா காந்தி செல்லவிருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் கடந்த 14 -ஆம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். நாக்கு வெட்டப்பட்டு, முதுகெலும்பு முறிந்த நிலையில் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்த அந்த பெண், சிகிச்சைக்காக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த பெண் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

 

இதனையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, கொலை சம்பவத்தில் ஈடுபடல் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பெண்ணின் உடலை போலீஸார் கட்டாயப்படுத்தி இரவோடு இரவாக தகனம் செய்ய வைத்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத். இந்நிலையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் பிரியங்கா காந்தி பேசினார் என்றும், அவர்களிடம் அவர்கள் வீட்டிற்கு வருவதாக உறுதியளித்தார் எனவும் தகவல் வெளியானது. இதனையடுத்து பிரியங்கா காந்தி இன்று ஹத்ராஸ் செல்லலாம் எனத் தகவல்கள் வெளியான நிலையில், ஹத்ராஸில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு எல்லைப்பகுதிகள் மூடப்பட்டுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்