3 வயது சிறுமி கழுத்து நெறிக்கப்பட்ட சம்பவத்தில் 13 வயது சிறுவனைக் காவல்துறை கைது செய்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா அருகில் உள்ளது பிஸ்ராக் பகுதி. இங்குள்ள கோவிலுக்கு அருகில் மறைவான இடத்தில் 3 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. சிறுமியின் கழுத்துப் பகுதியில் காயங்கள் இருந்துள்ளன. மேலும், சிறுமியுடைய காலின் ஒருபகுதியை அங்குள்ள மிருகங்கள் கடித்துத் தின்றுள்ளன.
இந்தக் கொலையில் முன்விரோதம் காரணமா? பாலியல் வன்புணர்வா? என பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணை நடத்திவந்தது. உயிரிழந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். சம்பவம் நடந்த தினத்தன்று சிறுமியை 13 வயது சிறுவன் அழைத்துச்செல்வது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளன. இந்நிலையில், சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவன்தான் குற்றவாளி என்பது நிரூபணமாகி உள்ளது.
குற்றவாளியான சிறுவன் தனது மாமாவின் செல்போனில் ஆபாச படத்தைப் பார்த்துள்ளான். இதனால் சலனம் ஏற்பட சிறுமியை தனியாக அழைத்துச்சென்ற வன்புணர்வு செய்ய முயற்சித்துள்ளான். ஆனால், சிறுமி அதற்கு அனுமதிக்காத நிலையில், அவளது கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளான். தற்போது சிறுவன் சிறார் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.