Skip to main content

பெண்களின் வாக்குகளை கவர  8 ஆயிரம் கோடி கடன்கள் தள்ளுபடியா? - எடப்பாடியின் அடுத்த பாய்ச்சல்! 

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

ddd

 

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதிய புதிய அறிவிப்புகளை செய்து வருகிறார். ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள அனைத்து தரப்பு மக்களைக் கவரும் வகையில் என்னென்ன புதிய அறிவிப்புகள், சலுகைகள் வழங்கலாம் என அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அதற்கேற்ப திட்டமிட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

 

தமிழக விவசாயிகளின் ஆதரவைப் பெறுவதற்காக, கூட்டுறவு வங்கிகளில் அவர்கள் பெற்ற பயிர்க் கடன்கள் முழுவதையும் சமீபத்தில் ரத்து செய்தார். அந்த வகையில், 16 கோடியே 43 லட்சம் விவசாயிகள் வாங்கிய 12,110 கோடி ரூபாய் கடன்கள் ரத்து செய்யப்பட்டன.

 

விவசாயிகளை தேர்தலில் கவர்வதற்காக அவர்களின் பயிர்க் கடன்களை ரத்து செய்த எடப்பாடி பழனிசாமி, பெண்களின் ஆதரவைப் பெறுவதற்காக அடுத்து ஒரு புதிய அறிவிப்பை செய்யவிருக்கிறாராம்.

 

தமிழகத்தில் தற்போது 4 லட்சத்து 30,000 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இருக்கின்றன. 20 நபர்களைக் கொண்டு இயங்கும் இந்தக் குழுக்களில் ஏழை மற்றும் நடத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள்தான் இருக்கின்றனர். ஒரு குழுவுக்கு அதிகப்பட்சமாக 10 லட்சம் ரூபாயை 11 சதவீத வட்டியுடன் வழங்கி வருகிறது கூட்டுறவு வங்கிகள். கடனை திருப்பிச் செலுத்தினால் மீண்டும் கடன் வழங்கப்படும். 

 

அந்த வகையில்,  கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை தற்போது சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கிறது. மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்று, கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலுவைத் தொகையாக இருக்கும் இந்த 8 ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்தால், ஏழை மற்றும் நடுத்தர வர்க்க பெண்களின் குடும்பத்தின் ஆதரவை சட்டமன்றத் தேர்தலில் பெறமுடியும் என எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

 

இதுகுறித்து உயரதிகாரிகளுடன் விவாதித்துள்ள எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு கூட்டுறவு வங்கிகளிலும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு எவ்வளவு கடன்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது? என்ற புள்ளிவிபரங்களைச் சேகரிக்கச் சொல்லியிருக்கிறார். விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்தது போல, மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்யவும் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்திருப்பதாகவும், இடைக்கால பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வரலாம் என்றும் கூட்டுறவுத் துறை வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.