Skip to main content

ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
TN Legislative Assembly session begins with Governor speech
 கோப்புப்படம்

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் இன்று (12.02.2023) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதனையொட்டி சபாநாயகர் அப்பாவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து சட்டப்பேரவையில் உரையாற்ற வரும்படி ஏற்கெனவே முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி இன்று காலை சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்ற உள்ளார். ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு பேரவையில் வாசிப்பார்.

இந்த உரை முடிந்தவுடன் இன்று பிற்பகல் சபாநாயகர் அப்பாவு அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் ஆளுநர் உரை மீதான விவாதம் நடத்துவதற்காக எத்தனை நாட்கள் அவையை நடத்துவது, எத்தனை நாட்கள் கூட்டத்தொடரை நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்பட உள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 3 நாட்களுக்கு நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்க உள்ளது. அன்றைய தினமே தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த கூட்டத்தொடரில் சட்டம் - ஒழுங்கு, தொழில் முதலீடுகள் ஈர்ப்பு, மழை வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூடிய போது ஆளுநர் உரையின் போது தமிழக அரசு தயாரித்து அளித்திருந்த சில வரிகளை தவிர்த்தும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும் ஆளுநர் ஆர்.என். ரவி அவையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்க இருப்பதால், சட்டப்பேரவையில் உள்ள கணினி, ஒலிபெருக்கி மற்றும் இருக்கைகள் சரியாக உள்ளனவா என்பதை சபாநாயகர் அப்பாவு இரண்டாவது முறையாக நேற்று (11.02.2024) தலைமைச் செயலகத்தில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது, சட்டமன்றப்பேரவை முதன்மைச் செயலாளர் சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.