Skip to main content

செய்தியாளர்களைத் தாக்கிய காவல்துறையினர் மீது புகார்! -தமிழகம் முழுவதும் கண்டனக் குரல்கள்! 

Published on 14/02/2019 | Edited on 14/02/2019


 

 

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக நிர்மலாதேவியை அழைத்துவந்தபோது, நீதிமன்ற வளாகத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளர்கள்,  ஃபோட்டோகிராபர்கள் மற்றும்  சேனல் செய்தியாளர்களைப்  பணியாற்ற விடாமல், அராஜகத் தாக்குதல் நடத்தியது காவல்துறை.


நக்கீரன் நிருபர் ராமகிருஷ்ணன், தினகரன் நிருபர் ராகுல், தந்தி டிவி நிருபர் செந்தில், ராஜ் டிவி நிருபர் கார்த்திக் ஆகியோரிடம் நீதிமன்ற வளாகத்திலேயே காவல்துறையினர் வன்முறையைப் பிரயோகித்தனர். இதன் உச்சக்கட்டமாக சன் டிவி நிருபர் மணிகண்டன் காவல்துறையினரின் கடும்  தாக்குதலுக்கு ஆளானதால், அவரது வலதுகை புஜம் இறங்கிவிட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.


செய்தியாளர் மணிகண்டன், சின்னதுரை என்ற போலீஸ்காரர் மீது புகார் அளித்ததைத் தொடர்ந்து,  ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்நிலையத்தில் மனு ரசீது தரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் விருதுநகர் மாவட்ட செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். 


கண்மூடித்தனமாக செய்தியாளர்களைத் தாக்கிய காவல்துறையினர் மீது புகார் பதிவானதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராசராசன், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்திலுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார்.

 
அடுத்தகட்டமாக விருதுநகர் மாவட்ட செய்தியாளர்கள், நடந்த அராஜகத்தை ஆதாரங்களுடன், மாநில மனித உரிமை கமிஷனுக்கு புகாராக அனுப்புவதென்று முடிவெடுத்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களைத் தாக்கிய காவல்துறையினருக்கு எதிராக, தமிழகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் அமைப்புகள் தொடர்ந்து  கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றன. 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பட்டியலினத்தைச் சேர்ந்தவருக்கு நிலத்தை விற்கமாட்டோம்!’  - தம்பதியர் மீது வழக்கு 

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
 case was filed against a couple who sold land due to caste differences

அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் தமிழ்ச்செல்வன். ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்துவரும் இவர், நில புரோக்கர்கள்  மூலம், அதே ஊரைச் சேர்ந்த வீரமணி மற்றும் அவருடைய மனைவி சொர்ணலதா ஆகியோருக்குச் சொந்தமான 5 சென்ட் நிலத்தை ரூ.44 லட்சத்துக்கு கிரயம் பேசி முடிப்பதற்காக, ரூ.21000 முன்பணம் கொடுத்துள்ளார்.

அதன்பிறகு, கிரயப்பத்திரம் உள்ளிட்ட அனைத்துப் புதிய ஆவணங்களையும் தயார் செய்து, நில புரோக்கர்களுடன் வீரமணி தம்பதியர்  வீட்டுக்குச் சென்று, பத்திரப் பதிவு செய்துகொள்கிறோம் என்று கூறியபோது, “நீங்க என்ன ஜாதி?” என்று தமிழ்ச்செல்வனைப் பார்த்துக் கேட்டுள்ளனர். தான் இந்து பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று தமிழ்ச்செல்வன் சொன்னதும் “நாங்க உயர்ந்த ஜாதி. தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த உங்களுக்கு இடத்தை விற்கமாட்டோம். வெளியே போ.” என்று வீரமணி தம்பதியர் விரட்டியிருக்கின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் காவல்நிலையம் சென்ற தமிழ்ச்செல்வன், தன்னை ஜாதியைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதாக புகாரளிக்க, வீரமணி மற்றும் சொர்ணலதா மீது  வழக்கு பதிவாகியுள்ளது.

Next Story

செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம்; கைது செய்யப்பட்ட 2 பேருக்கு கால் முறிவு!

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
2 persons arrested in the case of attack on the journalist suffered a broken leg

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் நேசபிரபு. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் வழக்கம்போல் கடந்த 24 ஆம் தேதி செய்தி சேகரித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதத்தால் நேசபிரபுவை சரமாரியாக வெட்டி தப்பி ஓடியுள்ளனர்.

இதில் நேசபிரபு படுகாயமடைந்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த நேசபிரபுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலைத் தேடி வந்த போலீஸார், 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 2 பேருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது தடுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்த பிறகு இன்று நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.