Skip to main content

ஞானவாபி மசூதி வழக்கில் பரபரப்பு தீர்ப்பளித்த நீதிபதிக்கு உயர் பதவி

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
High rank for the judge who decided the riot for Gnanawabi Masjid Affair

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி அருகே காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி என்னும் இஸ்லாமிய வழிபாட்டுத்தலம் ஒன்று உள்ளது. இங்கு இந்து மதக் கடவுளான சிவலிங்கம் ஒன்று கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மசூதியில் கண்டறியப்பட்ட லிங்க வடிவிலான பொருளின் காலத்தைக் கண்டுபிடிக்கத் தடயவியல் பரிசோதனை செய்ய அனுமதிக்கக்கோரி 5 பெண்கள் சார்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த மனுவை விசாரித்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளித்து இருந்தது. அதன்படி காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே தொல்லியல் நிறுவனம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்துள்ள நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் தொழுகை நடத்த எந்தத் தடையும் இதனால் ஏற்படக்கூடாது எனத் தெரிவித்து இருந்தது. மசூதி முழுவதிலும் ஆய்வு மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருந்தது. மேலும், தடய அறிவியல் ஆய்வறிக்கையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு முன் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து, ஞானவாபி மசூதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் துறைக்கு இடைக்காலத்தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மேலும், வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் மனுதாரர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், ஞானவாபி மசூதியில் ஆய்வுக்கு அனுமதிக்கக் கூடாது என்று இஸ்லாமிய அமைப்பின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்ததுடன், மசூதியில் ஆய்வுக்கு அனுமதிக்கக் கூடாது என்ற இஸ்லாமிய அமைப்பு கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனிடையே, ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த தொல்லியல் துறைக்கு அனுமதி அளித்ததன் அடிப்படையில், தொல்லியல் துறை ஆய்வாளர்கள் வாரணாசி நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில், ஞானவாபி மசூதியில் 55 இந்து தெய்வ சிற்பங்கள் கண்டறியப்பட்டதாக விவரிக்கப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து, இது தொடர்பான வழக்கு கடந்த மாதம் 31ஆம் தேதி அன்று, வாரணாசி மாவட்ட நீதிபதி அஜய கிருஷ்ண விஷ்வேஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்தலாம் என அதிரடி உத்தரவை பிறப்பித்தார். மேலும், அங்கு வழிபாடு நடத்துவதற்காக அர்ச்சகரை நியமிக்க காசி விஸ்வநாதர் அறக்கட்டளைக்கு உத்தரவிட்டார். வாரணாசி நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஞானவாபி மசூதி நிர்வாகம் சார்பில், அலகாபாத்  நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த 26ஆம் தேதி நீதிபதி ரஞ்சன் அகர்வால் முன்பு வந்தது. அப்போது, ஞானவாபி மசூதி நிர்வாகம் அளித்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, பாதாள அறையில் இந்துக்கள் தொடர்ந்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த சூழ்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி அன்று ஞானவாபி மசூதிக்குள் இந்துக்கள் வழிபட அனுமதியளித்த வாரணாசி மாவட்ட நீதிபதிக்கு, மாநில அரசு அதிகாரியாக உத்திரப்பிரதேச அரசு பணி நியமனம் வழங்கியுள்ளது. வாரணாசி மாவட்ட நீதிபதியாக அஜய கிருஷ்ண விஷ்வேஷா பொறுப்பு வகித்து வந்தார். இவர், ஓய்வு பெறும் கடைசி நாளில்தான், ஞானவாபி மசூதிக்குள் இந்துக்கள் வழிபாடு செய்யலாம் என்ற பரபரப்பு தீர்ப்பை வழங்கியிருந்தார். இந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி அஜய கிருஷ்ண விஷ்வேஷா, உத்தரபிரதேச மாநில அரசின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகத்தின் குறைதீர் அதிகாரியாக (ombudsman) நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

உ.பி.யில் பரபரப்பு; பாஜக வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவியே போட்டி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

பாஜக எம்.பியை எதிர்த்து அவரது மனைவியே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் இட்டாவா நாடாளுமன்ற உறுப்பினராக ராம்சங்கர் கத்தேரியா இருந்து வருகிறார். இவர் தற்போது நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் பாஜக சார்பில் இட்டாவா தொகுதியில் போட்டியிடுகிறார். இட்டாவா தொகுதிக்கு நான்காவது கட்டமாக மே 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து அவரது மனைவி மிருதுளா கத்தேரியா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிருதுளா, அவரது கணவர் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். பின்பு தனது வேட்புமனுவை வாபஸும் பெற்றார். இதனைத் தொடர்ந்து ராம்சங்கர் 64,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் தான் தற்போது மிருதுளா கத்தேரியா மீண்டும் வேட்புமனுவை தாக்கல்செய்துள்ளார்.

wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மிருதுளா, “வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இந்த முறை வேட்புமனுவை திரும்ப பெற மாட்டேன். தேர்தலில் போட்டியிடுவது எனது ஜனநாயக உரிமை என்று தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு முறையும் வேட்புமனுவை தாக்கல் செய்து பின்பு அதனை வாபஸ் பெறுகிறார். தேர்தலில் போட்டியிடுவது அவரது முடிவு” என்று மிருதுளாவின் கணவர் ராம்சங்கர் கத்தேரி தெரிவித்துள்ளார்.

ஆனால் பாஜக வேட்பாளர் ராம்சங்கரின் வேட்புமனுவில் ஏதாவது சிக்கல் இருந்து அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், பாஜக ஆதரவுடன் ராம்சங்கர் கத்தேரியின் மனைவி மிருதுளா பாஜகவில் போட்டியிட இந்த வேட்புமனு உதவியாக இருக்கும். அதனால் தான் மிருதுளா கத்தேரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.