Skip to main content

அ.ம.மு.க. - அ.தி.மு.க. இணையும்! கார்த்தி சிதம்பரம் பேட்டி!

Published on 29/07/2020 | Edited on 29/07/2020

 

Karti Chidambaram Interview - Dindigul

 

திண்டுக்கல்லுக்கு சிவகங்கை எம்.பி. கார்த்திக் சிதம்பரம் வருகை தந்தவர் நாகல்நகர் அருகே உள்ள பயணியர் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது அவர், இந்தியாவில் கரோனா வேகமாக பரவி வருகிறது. மத்திய மாநில அரசுகளிடம் தடுக்க யுக்திகள் இல்லை. உலக அளவில் மருந்து வந்தால் தான் தீர்வு ஏற்படும். ஊரடங்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்பு மின்சாரம் என்றால் பயமாக இருக்கும். ஆனால் தற்பொழுது மின்சாரக் கட்டணத்தை பார்த்தால் ஷாக் அடிக்குது. விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தொடர்ந்து தர வேண்டும். 

 

தமிழகத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஆனால் பாஜக மட்டும் அதனை விரும்பவில்லை. அதிமுகவில் ஒற்றைத் தலைமை இல்லை. சசிகலா சிறையில் இருந்து வந்தவுடன் அமமுக, அதிமுக ஒன்றிணைந்து செயல்படுவார்கள். இந்தியாவிற்க்கு புதிதாக கோவில்கள் தேவையில்லை, நான் கடவுள் நம்பிக்கை உடையவன்.

 

இந்தியாவிற்கு மருத்துவமனை, கல்லூரி, பள்ளிகள் தான் தேவை. பாஜக முத்திரை பதிக்க கோயில்கள் கட்டுகின்றனர். கறுப்பர் கூட்டத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். பெரியார் அவமதிப்பு செய்தவர்களைக் கண்டிக்கிறேன். தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் எடப்பாடி அரசு, ஒரு விபத்தில் உருவான அரசாங்கம். இந்த ஆட்சிக்கு ஆறு மாதத்தில் நல்ல தீர்வு கிடைக்கும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்துக்கு நல்ல முடிவு கிடைக்கும். திமுக காங்கிரஸ் கூட்டணி பொதுத் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். அடுத்த ஆண்டு தேர்தல் கண்டிப்பாக நடைபெறும். அடுத்த ஆண்டு எங்கள் கூட்டணி வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் ஆட்சியில் அமருவார். 

 

பாராளுமன்றம் நடைபெறாத சமயத்தில் சுற்றுச்சூழல் சம்பந்தமான அவசர சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களையோ உள்ளாட்சி அமைப்புகளையோ உள்ளூர் மக்களையோ கலந்து ஆலோசிக்காமல் நிறைவேற்றப்பட்டது. இது சுற்றுச்சூழலுக்கு விரோதமானது மட்டுமல்லாமல் ஜனநாயக விரோதமானது கூட. ஒவ்வொரு தனிநபருக்கும் ரூபாய் 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. ஆனால் ஆயிரம் ரூபாயைக் கொடுத்து அதிமுக அரசு மக்களை ஏமாற்றியுள்ளது. சிறு குறு தொழில் அதிபர்கள் கடன் வழங்குவதற்காக 20 லட்சம் கோடி ஒதுக்கியதாக மத்திய அரசாங்கம் அறிவித்தது. ஆனால் எந்த வங்கியிலும் செயல்படாத நிலையில் கரோனா காலத்தில் பயனாளிகளுக்கு கடன் கிடைப்பது சாத்தியமில்லை என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.