Skip to main content

அதிமுகவுக்கு சவப்பெட்டி செய்து ஆணி அடித்த எடப்பாடி பழனிசாமி, பொன்விழா கொண்டாட என்ன இருக்கிறது..!! - அரசியல் விமர்சகர் காந்தராஜ்!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

கதர

 

 

அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டங்கள் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். அதில் சந்தேகத்திற்கே இடமில்லை, அம்மா ஆட்சி விரைவில் அமையும்" என்று கூறியிருந்தார். அதே நேரத்தில் சசிகலா, அதிமுக பொதுச்செயலாளர் நான்தான் என்ற பொருள்படும்படி கல்வெட்டைத் திறப்பது, அதிமுக கொடியைப் பயன்படுத்துவது என தனி ரூட்டில் சென்றுகொண்டிருக்கிறார். அதிமுகவில் நடப்பது என்ன, அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பன போன்ற கேள்விகளை மருத்துவரும், அரசியல் விமர்சகருமான காந்தராஜ் அவர்களிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

அதிமுகவின் பொன்விழா ஆண்டு கடந்த சில நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொண்டாடப்பட்டது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? அதிமுகவின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறீர்களா? 

 

ஓ.. எனக் கதறி அழ வேண்டும் போல் இருக்கிறது. எம்ஜிஆர் இந்த இயக்கத்தை எப்படி உருவாக்கினார். மக்கள் செல்வாக்கில் அதிமுகவை முதலிடத்திற்கு கொண்டு சென்றார். மக்கள் கூட்டம் என்று கூட சொல்லக் கூடாது. மக்கள் வெள்ளத்தை அதிமுகவுக்கு கொண்டு வந்தார். ஆனால் இந்த இயக்கம் தற்போது எப்படி இருக்கிறது. ஜெயலலிதா அதிமுகவை பாதி அழித்தார், எடப்பாடி பழனிசாமி சவப்பெட்டி வாங்கி தற்போது ஆணி அடித்துள்ளார். பொன்விழாவில் என்ன இருந்தது, ஒன்றுமில்லை. பொன் மட்டும்தான் அவர்களிடம் இருக்கிறது, விழாவைக் காணோம். 

 

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் அதிமுகவுக்கு எதிர்காலம் இனி இல்லை என்று தெரிவித்துள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

அவர் உண்மையைத்தான் கூறியிருக்கிறார். இனி எப்படி அதிமுகவுக்கு எதிர்காலம் இருக்கப்போகிறது. அதற்கான வாய்ப்புகள் கண்ணுக்குத் தெரிந்தவரை ஏதாவது இருக்கிறதா என்றால், அப்படி எதுவும் இல்லை. தமிழகத்தில் நடைபெறுகின்ற எந்தப் பிரச்சனைகளுக்காவது எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளாரா? நீங்கள் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் நேராக அண்ணாமலையிடம்தானே செல்கிறீர்கள். அண்ணாமலை நீண்டகாலமாக அரசியலில் இருக்கிறாரா என்ன? இப்போதுதானே 4 பேர் அந்தக் கட்சியிலிருந்து சட்டமன்றத்திற்குச் சென்றுள்ளார்கள்.  செந்தில் பாலாஜி மீது எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமிதானே கூற வேண்டும், வழக்கு தொடுக்க வேண்டும். ஆனால் அண்ணாமலைதானே அனைத்திற்கும் பதில் சொல்கிறார், கருத்து தெரிவிக்கிறார். நிலைமை அப்படியிருந்தால் அதிமுகவுக்கு எங்கே எதிர்காலம் இருக்கப் போகிறது என்பதே என்னைப் போன்றோரின் கேள்வியாக இருக்கிறது. 

 

அதிமுகவை இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒழித்துக்கட்டிவிட்டார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவை மறந்து நீண்டநாட்களாக பாஜக சாயலில் அனைவரும் செயல்பட்டு வருகிறார்கள். அதிமுகவின் எம்.பி. ரவீந்திரநாத் லெட்டர் பேடில் யார் படம் இருக்கிறது, எம்ஜிஆர், ஜெயலலிதா படமா இருக்கிறது, மோடி படம் இருக்கிறது, இவர்கள்தான் அதிமுகவை வாழவைப்பவர்களா? அதிமுகவுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இல்லாத அதிமுகவுக்கு என்ன பொன்விழா வேண்டி கிடக்கிறது. நான்கு மாதத்திற்கு முன்புவரை இவர்கள் ஆளுங்கட்சியாக இருந்தவர்கள். உள்ளாட்சித் தேர்தலில் என்ன வெற்றி பெற்றார்கள், மிக கேவலமான தோல்வியைப் பெற்றுள்ளார்கள். 60 எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறுகிறீர்கள், அந்த எம்எல்ஏக்கள் பின்னணியில் தற்போது மக்கள் இருக்கிறார்களா? வென்ற அனைத்து எம்எல்ஏக்களும் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இருந்து வெற்றிபெற்றார்களா? கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் என்று குறிப்பிட்ட பகுதியில் வென்றவர்கள்தானே இவர்கள் அனைவரும். பிறகு எப்படி அதிமுகவுக்கு இன்றளவும் செல்வாக்கு இருப்பதாக நம்புவது? 

 

எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு எப்போதோ சவப்பெட்டி செய்து ஆணி அடித்துவிட்டார். இந்த ஜெயக்குமார் போன்றவர்கள் பார்த்துப் பேச வேண்டும். தங்களுக்கென்று கொள்கை இருக்கு, நாங்கள் என்ன குழந்தைகளா என்று கேள்வி கேட்பது அமித்ஷாவுக்கு தெரிந்தால் ஜெயக்குமார் அவ்வளவுதான். திமுக ரெய்டை கூட சமாளித்துவிடலாம், ஆனால் இவர்கள் கையில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை என பல அயிட்டங்களை வைத்துள்ளார்கள், எனவே ஜெயக்குமார் கட்சிக்கு விரோதமாக, பாஜகவுக்கு எதிராக பேசக்கூடாது, அவர் நல்லதுக்காக! சசிகலா, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட யாரும் அதிமுக தலைவர்கள் இல்லை. இவர்கள் அனைவருக்கும் தலைவர் அமித்ஷா, அவர் என்ன சொல்கிறாரோ அதன்படி இங்கு நடப்பார்கள். முதலில் பன்னீர்செல்வத்தை பயன்படுத்திப் பார்த்தார்கள், பிறகு எடப்பாடி பழனிசாமியை பயன்படுத்தினார்கள். ஆனாலும் ஒன்றும் தேறவில்லை என்பதால் தற்போது சசிகலாவை பயன்படுத்தி பாஜகவுக்கு லாபம் கிடைக்குமா என்று கணக்கு போடுகிறார்கள். என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.