Skip to main content

''எங்க ஊருக்கு அரசு கல்லூரி வேண்டும்...'' -டிரெண்டாகும் கோஷங்கள்!

Published on 18/09/2020 | Edited on 18/09/2020

 

We needs a government college ... Trendy slogans ...!

 

மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரி வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மறுமலர்ச்சி தி.மு.க தோழர்களால் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மறுமலர்ச்சி தி.மு.க தேர்தல் பணிச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தமிழக முதல்வருக்கு செப்டம்பர்  13- ஆம் நாள் மின்னஞ்சலில் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். மேலும், மணப்பாறையில் அரசு கல்லூரி வேண்டும் என்று முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் வலியுறுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

 

We needs a government college ... Trendy slogans ...!


இதனைத் தொடர்ந்து முகநூல், வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மணப்பாறை தொகுதியைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், பெண்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலதரப்பினரும் மணப்பாறைக்கு அரசு கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கை அட்டையுடன் பதிவிட்டு வருகின்றனர்.சமூக வலைத்தளங்களில் கடந்த ஐந்து நாட்களாக இந்தக் கோரிக்கை வலுத்து வருகிறது.

இது குறித்து மறுமலர்ச்சி தி.மு.க தேர்தல் பணிச்செயலாளர் மணவை தமிழ்மாணிக்கத்திடம் பேசினோம், அவர் நம்மிடம், "திருச்சி மாவட்டத்தில் முறுக்குக்கும், மாட்டுக்கும் பெயர் போன ஊர் மணப்பாறை. 'மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி வயல் காட்டை உழுது போடு செல்லக் கண்ணு' என்ற மருதகாசியின் பழம் பெருமை பாடலுக்கு உயிரூட்டும் ஊர் மணப்பாறை.

 

We needs a government college ... Trendy slogans ...!


மணப்பாறை மாட்டுச் சந்தை செவ்வாய்க் கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை பகல் வரை நடைபெறும். தமிழகம் முழுவதிலும் இருந்து இந்தச் சந்தைக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் வருவார்கள். தமிழ்நாடு முழுவதும் முறுக்கு கிடைக்கும் என்றாலும், மணப்பாறை முறுக்கு உலகத் தரம் வாய்ந்தது. அதற்குக் காரணம் இந்த மண்ணில் கிடைக்கும் உப்பு நீரும், கை பக்குவமும் தான். இத்தகைய சிறப்பு மிக்க மணப்பாறையில் பெரிய தொழில் சாலைகளோ, வணிக நிறுவனங்களோ இல்லை. ஆற்று வளம், ஊற்று வளம் இல்லாத வானம் பார்த்த பூமியாகும். பெருமழை காலங்களில்தான் இங்கு விவசாயம் சாத்தியம்.

 

பெரும்பாலும் கிராமங்களின் வாழ்வாதாரம் கால்நடை வளர்ப்பதில் இருக்கிறது. பள்ளிப் படிப்புடன் நிறுத்திய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கட்டட வேலை பார்ப்பதற்காக திருச்சி, கோவை ஆகிய பெருநகரங்களுக்குச் செல்கின்றனர். இந்நிலையில், கிராமப்புற ஏழை மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்காக திருச்சிக்குத் தான் போகவேண்டும். மணப்பாறை சட்டமன்றத் தொகுதியின் விளிம்பு  ஒரு கிராமத்திலிருந்து திருச்சிக்குச் செல்ல 90 கி.மீ பயணிக்க வேண்டும். இதனால், இப்பகுதி மாணவர்களின் கல்லூரிக் கனவு கானல் நீராய்ப் போய் முடிகிறது.

 

Ad


மணப்பாறை நகரத்தைச் சுற்றி உள்ள ஓரளவு வசதியான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே திருச்சிக்குச் சென்று படிக்கின்றனர். எனவேதான், இப்பகுதி மக்கள் மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரி வேண்டும் என்று பல வருடங்களாக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மணப்பாறை சட்டமன்றத் தொகுதியாக உள்ள இந்தப் பகுதிக்கு உள்பட்ட முந்தைய மருங்காபுரி தொகுதியிலிருந்து 1991 - 96 களில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பேராசிரியர் க.பொன்னுசாமி கல்வி அமைச்சராகவும், அதன்பின்பு 1996 - 2001 கால கட்டத்தில் வெற்றி பெற்ற புலவர் செங்குட்டுவன் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளனர்.

 

We needs a government college ... Trendy slogans ...!


இருமுறை அமைச்சர் தொகுதி என்ற தகுதியைப் பெற்றிருந்தும் கூட, மணப்பாறையில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படாதது இப்பகுதி மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. இப்போது ஆளும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.சந்திரசேகர் மணப்பாறை தொகுதியிலிருந்து இருமுறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.

ஆனபோதும், மணப்பாறையில் கல்லூரி கோரிக்கை கிடப்பில் தான் போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கடந்த வாரம் பல்வேறு மாவட்டங்களில் 7 புதிய கல்லூரிகள் அமைக்கப்படும் என்று உத்தரவிட்டது. இதில், மணப்பாறையில் கல்லூரி இல்லை என்ற வருத்தம் மக்களைப் பெரிதும் வாட்டியது. இந்நிலையில் முகநூல், வாட்ச் ஆப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் "வேண்டும்.. வேண்டும்.. மணப்பாறைக்கு அரசு கல்லூரி.. வேண்டும்.. வேண்டும்" என்ற கோரிக்கை வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் இளைஞர்கள், மாணவர்கள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த முழக்கத்தை எழுப்பி அந்தக் காணொளிகளையும் பதிவிட்டனர்.

 

We needs a government college ... Trendy slogans ...!


இதனைத் தொடர்ந்து அவசர, அவசரமாக மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சந்திரசேகர் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அவர்களைச் சந்தித்து மணப்பாறையில் கல்லூரி அமைக்க கோரிக்கை மனு தந்துள்ளார். மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் மணப்பாறையில் அரசு கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீண்ட அறிக்கை தந்து வலியுறுத்தியுள்ளார்.

 

We needs a government college ... Trendy slogans ...!


மணப்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேண்டும் என்று 20 வருடங்களாக கோரிக்கை எழுப்பி வருகிறோம். ஒவ்வொரு தேர்தலின்போதும் பொதுமக்களின் இந்தக் கோரிக்கை கட்டாயம் தேர்தல் வாக்குறுதியாக இருக்கும். ஆனால், கல்லூரி மட்டும் வந்தபாடில்லை. தற்சமயம், தமிழக அரசு வெளியிட்டுள்ள 7 கல்லூரி அறிவிப்பில் மணப்பாறை இல்லாதது கண்டு நாங்கள் பெரிதும் கவலையடைந்தோம். ஏற்கனவே, எங்கள் கட்சி சார்பில் பலமுறை கோரிக்கை மனு அனுப்பியிருக்கிறோம். அவசரம் கருதி 13 -ஆம் தேதி தமிழக முதல்வருக்கு மின்னஞ்சலில் மீண்டும் ஒரு கடிதத்தை நான் அனுப்பினேன்.

 

We needs a government college ... Trendy slogans ...!

 

Nakkheeran

 

இதனைத் தொடர்ந்து "வேண்டும்..வேண்டும் கல்லூரி வேண்டும்" என்ற முழக்கத்தை சமூக வலைத்தளங்களில் அனைவரும் டிரெண்டிங் ஆக்குங்கள் என்று பொதுமக்களின் பாதம் பணிந்து கேட்டுக் கொண்டேன். என்னுடைய வேண்டுகோளுக்கு கட்சி கடந்து பல்லாயிரக் கணக்கானவர்கள் ஆதரவு தெரிவித்து முகநூலில் பதிவிட்டிருந்தனர். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மிகுந்த ஆர்வத்துடன் கோரிக்கை அட்டையுடன் முழக்கம் எழுப்பி காணொளி வெளியிட்டனர். மணப்பாறை பகுதி மக்களின் இந்தப் பேரெழுச்சி எங்களுக்குப் புதிய தெம்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அரசு மணப்பாறை தொகுதி மக்களின் கோரிக்கையை அலட்சியம் செய்யாமல் உடனடியாகக் கல்லூரி அமைப்பதற்கான அறிவிக்கையை வெளியிட வேண்டும். நடப்பு கல்வியாண்டிலேயே மாணவர் சேர்க்கையையும் தொடங்க வேண்டும்" என்றார்.

எது எப்படியோ கரோனா ஊரடங்கு காலத்தில் சமூக வலைத்தளங்களின் மூலம் மணப்பாறை மக்கள் தமது கோரிக்கையை அமைதியான முறையில் வெளிப்படுத்தி வருகின்றனர். அம்மக்கள் வீதியில் இறங்கி போராடுவதற்குள் தமிழக அரசு கல்லூரி அமைப்பது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்வது நல்லது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வழக்கறிஞர்களுக்கு வந்த மின்னஞ்சல்; ம.தி.மு.க. எடுத்த முடிவு

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
election commission Email to mdmk

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கிறது. சொந்த சின்னத்தில் மட்டுமே ம.தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பம்பரம் சின்னத்தை  தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த வழக்கில் அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வைகோ தரப்பில், 'தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை. நாளை கடைசி நாள் என்பதால் தாங்கள் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட விட வேண்டும்' என வாதிடப்பட்டது.

இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், 'சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் தான் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். மதிமுக கோரிக்கை மீது இன்று முடிவு எடுக்கப்படும். இது குறித்து சம்பந்தப்பட்ட பகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார்' என்று தெரிவிக்கப்பட்டது.

பம்பரம் சின்னம் தற்போது பொது சின்ன பட்டியலில் உள்ளதா இல்லையா என்பது குறித்து 2.15 மணிக்கு தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 2.15 மணிக்கு ஒத்தி வைத்தனர். பின்னர் நடந்த விசாரணையில், நாளை (27-03-2024) காலை 9 மணிக்குள் பம்பரம் சின்னம் தொடர்பாகப் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் மின்னஞ்சல் மூலம் ம.தி.மு.க. வழக்கறிஞர்களுக்குப் பதில் அளித்துள்ளது. வேண்டுமானால் மதிமுக சார்பில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பம்பரம் இல்லாவிட்டாலும் தனி சின்னத்தில் தான் போட்டி என்ற முடிவில் ம.தி.மு.க. தீர்க்கமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சின்னம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி; திருச்சியில் தயாராகும் பொதுக்கூட்ட ஏற்பாடு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Edappadi who started the campaign; Organized public meeting in Trichy

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இன்று சேலத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதேநேரம் இன்று திருச்சியில் அதிமுக பரப்புரை பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுகவின் முதல் பரப்புரை கூட்டம் என்பதால், திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம், 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்படும் எடப்பாடி பழனிச்சாமி மதியம், 3.30 மணியளவில் திருச்சியை வந்தடைகிறார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மாலை, 4.40 மணி அளவில் வண்ணாங்கோயில் பரப்புரை கூட்ட திடலுக்கு வருகிறார்.

கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்றிரவு, 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட பரப்புரை பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த, 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இந்த மேடையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர்  கிருஷ்ணசாமி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.