Skip to main content

விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு!

Published on 04/12/2017 | Edited on 04/12/2017
விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு! 
ஆளும் கட்சி இயக்குகிறதா?



நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது தங்களுடைய பிணத்தின் மீது நடந்து செல்வதற்கு ஒப்பானது என்று தயாரிப்பாளர் சேரன், நிருபர்களிடம் தெரிவித்தார். அரசு தரும் மானியத்திற்கு வேட்டு வைத்து எங்களை இன்னொரு அசோக்குமார் ஆக்குவதற்கு விஷால் தயாராகிவிட்டாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நடிகர் விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்தவுடன் தயாரிப்பாளர் சங்கத்தில் எதிர்ப்பு உருவானது. தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 8 மாதங்கள் ஆன நிலையில் அவர் சங்கத்திற்குள் அரசியலை புகுத்துவதாக தயாரிப்பாளர்கள் கருதினார்கள். இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தின் கூட்டம்  இன்று நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தின் முடிவில், நடிகரும், தயாரிப்பாளருமான சேரன் செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேசினார். அப்போது, அவர் கூறியது...

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு இந்த எட்டு மாதங்களில் விஷால் தனது வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. வெறும் அறிக்கைகள், பேட்டிகள், சவால்கள் என்று தன்னை விளம்பரப்படுத்திக்கொள்வதில் கவனமாக இருக்கிறார். கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேல் தயாரிப்பாளர்களுக்கு அரசு மானியம் எதுவும் கிடைக்கவில்லை. சிறு தயாரிப்பாளர்கள் கடனில் தத்தளிக்க நேர்ந்தது. இப்போதுதான் சிறு தயாரிப்பாளர்களுக்கு மானியம் வழங்க அரசு முன் வந்துள்ளது. 



இந்த நிலையில் விஷாலின் முடிவு தயாரிப்பாளர்களான எங்களை வெகுவாக பாதிக்கும். அவர் தேர்தலில் நிற்பதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஆனால், அவருடைய முடிவு ஒட்டுமொத்த தயாரிப்பாளர்களை பாதிக்கிறது என்பதால்தான் நாங்கள் எதிர்க்கிறோம். அவர் தனது வேட்புமனு தாக்கல் செய்யும் முடிவை வாபஸ் பெற வேண்டும் அல்லது தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதுவரை நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று சேரன் தெரிவித்தார்.

தயாரிப்பாளர்களின் இந்த திடீர் போராட்டத்திற்கு பின்னணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆளும் அரசு இருப்பதாக ஒருசாரார் கூறுகிறார்கள். விஷாலை வாபஸ் பெற செய்ய வேண்டும் அல்லது அவரது முடிவை பகிரங்கமாக விமர்சனம் செய்ய வேண்டும். இதன் மூலம் விஷாலின் இமேஜை சிதைக்க வேண்டும் என்று ஆளும் தரப்பில் கூறப்பட்டதாகவும், அதையே சிறு தயாரிப்பாளர்கள் என்ற பெயரில் சேரன் உள்ளிட்டோர் நடைமுறைப்படுத்துவதாகவும் இன்னொரு பிரிவினர் கூறுகிறார்கள். 

-ஆதனூர் சோழன்
வே.ராஜவேல்.

சார்ந்த செய்திகள்