Skip to main content

பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் தொடர்ந்து முதலிடம்! முன்னோர் ஆசிபெற்ற விருதுநகர் மாவட்டம்!

Published on 16/05/2018 | Edited on 16/05/2018
yearly


கடந்த (2017) கல்வி ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் (2018) பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது விருதுநகர் மாவட்டம். 2013-14 மற்றும் 2015-16 ஆகிய இரண்டு கல்வியாண்டுகளில் மட்டுமே 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்ட விருதுநகர் மாவட்டம், இந்த ஆண்டும் முதலிடம் பெற்றிருக்கிறது.

இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் 10797 மாணவர்கள் 13500 மாணவிகள் என, மொத்தம் 24297 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினார்கள். இவர்களில் மாணவர்கள் 10285 பேர் (95.26%), மாணவிகள் 13295 பேர் (98.48%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் 97.05% தேர்ச்சி விகிதம் பெற்று, முதலிடத்தை தக்கவைத்திருக்கிறது விருதுநகர் மாவட்டம்.

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், சிறப்பு பயிற்சி வகுப்புக்களை அர்ப்பணிப்பு உணர்வுடன் நடத்தியதும், அதற்கு பெற்றோர் தரப்பில் முழு ஒத்துழைப்பு அளித்து வந்ததும், மாணவர்களின் ஆர்வமும் உழைப்புமே, இப்படி ஒரு வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஆனாலும், இந்தத் தொடர் வெற்றிக்கு அழுத்தமான ஒரு பின்னணி உண்டு.
 

kam


அப்போது விருதுபட்டியாக இருந்தது. ஏதேனும் அவசரத் தகவலைத் தாங்கிய தந்தி வீடுகளுக்கு வரும். தந்தியில் உள்ள வாசகங்களை விருதுபட்டி மக்களுக்கு படிக்கத் தெரியாது. தந்தியை டெலிவரி செய்பவர், படித்து விபரங்களைக் கூறுவார் என்று எதிர்பார்க்க முடியாது. அந்தத் தந்தியை பெற்றுக்கொள்பவர், விருதுபட்டியில் படித்த பிராமணர் வீட்டை நோக்கி ஓடுவார். பார்த்தாலே தீட்டு என்றிருந்த காலம் என்பதால், பயத்தால் நடுங்கியபடியே, பிராமணர் வீட்டு வாசலில் நிற்பார். ‘சாமீ’ என்றெல்லாம் குரலெழுப்ப முடியாது. அந்த வீட்டிலிருந்து யாராவது வெளியே வரும் வரை காத்திருக்க வேண்டும். அப்படி வருபவரின் பக்கவாட்டில், உடம்பை வளைத்துப் பணிவு காட்டி நின்று, பவ்யமாக தந்தியை நீட்ட வேண்டும். அவர் படித்துப்பார்த்துவிட்டு, ‘சாவுத் தந்திடா’ என்று இறந்தவர் பெயரையும் ஊர் விபரத்தையும் கூறுவார். அந்த இடத்திலேயே ‘போயிட்டியா.. எங்கள விட்டுட்டுப் போயிட்டியா..’ என்று தலையில் அடித்துக்கொண்டு அழுவார் தந்தியைக் கொண்டுவந்தவர். பிராமணரோ ‘என் வீட்டு முன்னால எதுக்குடா ஒப்பாரி வைக்கிற? உன் வீட்டுல போயி அழு’ என்று விரட்டியடிப்பார்.

தந்தி மூலம் வரும் ஒரு துக்க விஷயத்தைக்கூட தெரிந்துகொள்ள முடியாத தற்குறிகளாக இருக்கிறோமே என்ற ஆதங்கம் வெளிப்பட்டபோதெல்லாம் கல்வியின் அவசியத்தை உணர்ந்தார்கள். ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு வீடு ஒரு பிடி அரிசியை கலயங்களில் சேகரித்தனர். அந்தப் பிடி அரிசி வீடுதோறும் மகமையாக வசூலிக்கப்பட்டது. அந்த அரிசி விற்று கிடைத்த தொகையில், 1888-இல் சத்திரிய வித்யாசாலா என்ற பள்ளியை விருதுநகரில் தொடங்கினார்கள். வியாபாரிகள் மகமை என்ற பெயரிலும் குறிப்பிட்ட ஒரு தொகையை சங்கத்தில் சேர்த்து, அந்த நிதியைக் கல்விக்குப் பயன்படுத்தி வந்தார்கள். வியாபாரிகளும் மகமை என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு தொகையை சங்கத்தில் சேர்த்தனர். அந்த நிதியையும் கல்விக்கே பயன்படுத்தினார்கள்.

தமிழகத்தில் கல்விக்கண் திறந்தவர் என்று போற்றப்படும் காமராஜர் படித்தது இந்த விருதுநகர் பள்ளியில்தான். தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோது, ‘கோவில் எதுக்குண்ணே? மொதல்ல பள்ளிக்கூடம் கட்டு’ என்று, நகரம், கிராமம் என்ற பாரபட்சமின்றி, பள்ளிகளை உருவாக்கி, கல்விப் புரட்சிக்கு வித்திட்ட அவர் பிறந்த ஊரும் விருதுநகர்தான்.

விருதுநகர் கல்வி மாவட்டம், மாவட்ட அளவில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவதும், 31-வது முறையாக இந்த ஆண்டும் முதலிடம் பெற்றிருப்பதும், முன்னோர்களின் தியாகத்துக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.

Next Story

சி.பி.எஸ்.சி 12-ம் வகுப்பு தேர்வு முடிவு; மாநில அளவில் வேலூர் மாணவி முதலிடம்

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

Vellore student topper in Tamil Nadu with 497 marks out of 500 in CBSE 12th exam

 

நடந்து முடிந்த 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பள்ளிகளின் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. இதில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள ஷிருஷ்டி என்கிற தனியார் பள்ளியை சேர்ந்த ரேஹா சுந்தரேசன் ராஜ் என்ற மாணவி 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இதில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவுகளில் 100க்கு 100 மதிப்பெண்களும் ஆங்கிலம், கணிதம், உயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளில் 100க்கு தலா 99 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். 

 

மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டு ஷிருஷ்டி பள்ளி குழும தலைவர் சரவணன் உட்பட ஆசிரியர்கள் மாணவிக்கு பாராட்டு தெரிவித்தனர். தனது உயர்வுக்கு காரணமான ஆசிரியர்களுக்கு மாணவி நன்றி தெரிவித்துக்கொண்டார். மாநில அளவில் 2வது இடத்தில் சென்னை பத்ம ஷேஷாத்ரி பள்ளியியும், 3வது இடத்தில் கோபாலபுரம் DAV பள்ளியும் வந்துள்ளன.

 

 

Next Story

''தமிழ்நாட்டிலேயே மூன்று பேர்தான்; இது ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது'' - மாணவி நந்தினியை நேரில் பாராட்டிய தமிழக டிஜிபி

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

"There are only three people in Tamil Nadu; This is not an ordinary thing'' - DGP of Tamil Nadu praised the student Nandini in person

 

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்தது. இதற்கான முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியான நிலையில் திண்டுக்கல் மாவட்டம் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொருளியல் பாடப்பிரிவில் படித்து தேர்வு எழுதிய நந்தினி என்ற மாணவி 600க்கு 600 எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.

 

தச்சுத் தொழிலாளியின் மகளான நந்தினி 600க்கு 600 எடுத்திருப்பது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் மாணவிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்களும் மாணவியை அழைத்து தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வந்தனர். கடந்த 9 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவியை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் நந்தினியின் உயர்கல்விக்கு உதவுவதாகவும் அதற்கேற்ற கல்வி நிறுவனங்களை விசாரித்து பரிந்துரை செய்வதாகவும் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் மாணவி நந்தினி நேரில் அழைத்துப் பாராட்டிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் பேசிய சைலேந்திரபாபு, ''பன்னிரண்டாம் வகுப்பில் தமிழில் 600 மதிப்பெண் வாங்கி இருக்கிறார். இது ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது. தமிழில் தமிழ்நாட்டிலேயே மூன்று பேர் தான் நூற்றுக்கு நூறு வாங்கி இருக்காங்க. அதில் நீங்களும் 100க்கு 100 மதிப்பெண் வாங்கி இருக்கீங்க. இது மாதிரி சிறப்பாக படிக்க வேண்டும். அதிகமான மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது'' என்று கேட்டார்.

 

அதற்கு மாணவி நந்தினி, ''எனக்கு நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது சிறுவயதிலேயே இருந்ததுதான். என்னுடைய குடும்பச் சூழல் அதற்கு முக்கியமான காரணமாக இருந்தது என நினைக்கிறேன். பெற்றோரின் நிலைமை துவண்டுபோற மாதிரியான விஷயமாக இல்லாமல் அதை நான் தூண்டுதலாக எடுத்துக் கொண்டது படிப்பதற்கு தூண்டுதலாக இருந்தது. இதனால் இவ்வளவு தூரம் இன்று படிக்க முடிந்தது. பெற்றோர், ஆசிரியர்கள் எல்லோருடைய சப்போர்ட் இருந்ததால் என்னால் படிக்க முடிந்தது'' என்றார்.

 

தொடர்ந்து பேசிய  டிஜிபி, ''சிலர் அவர்களது குடும்பச் சூழ்நிலையை நினைத்து வருத்தப்படுவார்கள். படிக்க முடியாது என்று நினைப்பார்கள். வீட்டினுடைய சூழ்நிலை சரியில்லை. பெரிய வருமானம் இல்லை என்பதே படிக்க மோட்டிவேஷன் என்று நந்தினி சொல்லி உள்ளார். வாழ்த்துக்கள்'' என்றார்.