Skip to main content

குடும்பத்தோட போய் 'சர்கார்' படம் பார்க்கப்போறோம்! - தங்க தமிழ்ச்செல்வனின் தீபாவளி பிளான்

Published on 05/11/2018 | Edited on 06/11/2018

18 எம்.எல்.ஏக்களும் பதவியிழந்த சூழ்நிலை... இடைத்தேர்தல் இப்போ வருமோ எப்போ வருமோ என்ற டென்ஷன்... தொலைக்காட்சி விவாதங்கள், பத்திரிகை பேட்டிகள் என பரபரப்பாகவே இருக்கும் அ.ம.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனை சில தீபாவளி ஸ்பெஷல் ஜாலி கேள்விகள் கேட்கலாம் என்று தொடர்பு கொண்டோம். இந்த சூழ்நிலையில் இதைக் கேட்டால் கோபத்தில் பட்டாசாக வெடிப்பார் என்று பயந்தால், அவரோ மத்தாப்பாக சிரிக்கிறார். தங்க தமிழ்ச்செல்வனிடம் ஒரு ஜாலி பேட்டி...

 

thanga thamil selvan



உங்கள் கட்சியின் 18 எம்.எல்.ஏக்களும் பதவியிழந்திருக்கிறார்கள், இடைத்தேர்தல் வரவிருக்கிறது. இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இந்த தீபாவளியை எப்படி கொண்டாட திட்டமிட்டிருக்கிறீர்கள்?

நானும், என் குடும்பமும் தீபாவளியை பெரும்பாலும் விமர்சையாகக் கொண்டாடுவது இல்லை. மனைவி காலையில் எழுப்புவாங்க, காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடை அணிந்து குடும்பத்துடன் செலவிடும் ஒரு விடுமுறை நாளாகவே பெரும்பாலும் தீபாவளி இருக்கும். அதுவும் தேர்தலில் போட்டியிட்டு வென்ற எம்.எல்.ஏ பதவி பறிபோய் இருக்கும் இந்த நேரத்தில் குடும்பத்துடன் இருந்து சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்.(சிரிக்கிறார்)

சென்னையில்தான் இருக்கேன். குடும்பத்தில் எல்லோரும் இங்கதான் தீபாவளிக்கு இருக்கோம்.
பொங்கல் என்றால்தான் எங்க வீட்டில் சிறப்பாக இருக்கும். ஊர்ல தோட்டம், மாடுகள் எல்லாம் இருப்பதால அங்க போயிடுவோம். குடும்பத்தோட, தோட்டத்துல வேலை செய்றவங்க எல்லோருக்கும் புதுத்துணி எடுத்து ரொம்ப சிறப்பா கொண்டாடுவோம். 

தீபாவளி ஷாப்பிங்குக்காக குடும்பத்தோடு கடைகளுக்குப் போவது, தீபாவளி அன்று படத்துக்குப் போவது போன்ற வழக்கங்கள் இருக்கா?

தீபாவளிக்குத் துணி எடுக்கக் கூட நான் போக மாட்டேன். என் மனைவிதான் கடைகளுக்குச் செல்வார். என் உடைகளையும் அவரே தேர்வு செய்வார். பொதுவாக படங்களுக்குச் செல்லும் பழக்கம் இல்லை. ஆனால் இந்த முறை குடும்பத்தோடு 'சர்கார்' படத்துக்குச்  செல்லும் திட்டம் உள்ளது. விஜய் அப்படி என்னதான் சொல்லுவாருன்னு பாப்போமே... அரசியல் படம்னு சொல்றாங்க. இந்த ஆட்சி பற்றியெல்லாம் இருக்குன்னு சொல்றாங்க. பாப்போம் என்ன பேசியிருக்கார்னு. முன்னாடி தலைவர் எம்.ஜி.ஆர் படங்களை விரும்பிப் பார்ப்பேன். அதைத் தவிர 'பூவே பூச்சூடவா' படத்தை அஞ்சு, ஆறு தடவை தியேட்டரில் போய் பார்த்தேன். நதியாவின் நடிப்பு, பாசம், பாடல்கள், இப்படி அந்தப் படம் ரொம்பப் பிடிக்கும்.

 

thanga tamilselvan with jeyalalitha



ஜெயலலிதா இருந்த பொழுது தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் பொழுது அவரை சந்தித்து வாழ்த்து சொல்லியிருக்கீங்களா?

தீபாவளி, பொங்கல் அன்னைக்கு சந்திச்சதில்ல. அம்மா இருந்த பொழுது தீபாவளி, பொங்கல் சமயங்களில் அவரும் எங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் சொல்வார். நாங்களும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு முன்பு அவரை சந்தித்து வாழ்த்துகள் சொல்லுவோம். இப்போ சின்னம்மா சிறையில் இருப்பதால பண்டிகைகள் எதையும் பெருசா கொண்டாடுறது இல்ல.

முதன்முதலாக ஜெயலலிதாவை எப்போது சந்தித்தீர்கள்?

96’ல  சந்திச்சேன். மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பதவி வழங்குனாங்க. அதுக்குப் பிறகு 2000த்துல சந்திச்சேன், மாநில மாணவரணி செயலாளர் பதவி வாங்குனேன். 2001இல் கூப்பிட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தந்தாங்க. போட்டியிட்டு ஜெயிச்சேன். அப்புறம் ராஜினாமா பண்ண சொன்னாங்க, பண்ணேன். பிறகு எம்.பி ஆக்குனாங்க, 2 தடவ எம்.எல்.ஏ ஆக்குனாங்க.

ஜெயலலிதா மனதில் நீங்கள் நம்பிக்கையையும், நற்பெயரையும் பெற்றது எப்படி?

ரெண்டாவது முறை ஆண்டிப்பட்டி தொகுதில அம்மா பிரச்சாரம் பண்ண வந்தப்ப தொகுதியில் யாரும் ஒரு குறை கூட சொல்லல. இதனால அம்மாக்கு என்மேல நம்பிக்கை வந்துச்சு. தொகுதியில் ரொம்ப எளிமையா இருப்பேன். பெரும்பாலும் மக்களுடன் ஒன்றி இருப்பேன். அந்தத் தேர்தலில் எளிதா ஜெயிக்க முடிஞ்சது. அதனால அம்மாக்கு என் மேல பாசம் உண்டு. 

 

thanga tamil selvan



பேட்டிகளில் ரொம்ப, ஆவேசமா, கோபமா பேசுறீங்க. நிஜ வாழ்க்கையில் எப்படி?

எல்லாரும் எங்களையே துருவித் துருவி கேள்வி கேக்குறீங்க, பேட்டி எடுக்குறீங்க. யாராவது அமைச்சர்களை, ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களை இப்படி கேக்குறீங்களா? அதான் அப்படி. ஆனா நிஜ வாழ்க்கையில நல்லாதான் இருப்பேன். அப்பதான இவ்ளோ பெரிய இடத்துக்கு வர முடியும்!

தினகரன் கூட எப்படி நெருக்கம் ஏற்பட்டது? தனிப்பட்ட முறையில் உங்கள் உறவு எப்படி?

1999ல அவரு எம்.பி ஆனார். வந்து தேனியில தங்குனார், அப்ப நானும், ஓ.பி.எஸ்ஸும் நெருக்கம் ஆனோம். ஓ.பி.எஸ் கொஞ்சம் பணிவ அதிகமா காட்டி முதலமைச்சர் வரைக்கும் வந்துட்டாரு, நான் கொஞ்சம் நிமிர்ந்தேன், வர முடியல.தினகரன் ஆண்டிபட்டிக்கு வரும்போது வீட்டுக்கு வருவாரு, சாப்பிடுவாரு. நானும் சென்னையில் அவர் வீட்டுக்குப் போவேன், சாப்பிடச் சொல்வார், சாப்பிடுவேன். குடும்ப அளவுல எங்களுக்குள் நல்ல உறவு இருக்கு.

தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிச்சு இருக்காங்களே, அதைப் பற்றி உங்க கருத்து என்ன?

இதெல்லாம் தேவை இல்லாத தீர்ப்பு. 3 லட்சம் குடும்பங்கள் இதை நம்பி இருக்கு. எப்பவோ ஒரு தடவ வெடிக்குறதுதான? இந்தத்  தீர்ப்புக்கு மாநில அரசு மேல்முறையீடு வேற பண்ணுது, எந்த நேரத்துல வெடிக்குறதுனு.

இடைத்தேர்தல் வருமா? வந்தால் உங்க நிலைப்பாடு என்ன?

இடைத்தேர்தல் வந்தால் கண்டிப்பாக எதிர்கொள்வோம். கண்டிப்பா ஜெயிப்போம். ஆனால், எனக்குத் தெரிஞ்சு இப்ப இருக்கும் நிலைமையில இடைத்தேர்தல் உடனே வராது. பாராளுமன்ற தேர்தலோடுதான் வரும்.

'8 தொகுதிகளில் மட்டுமல்ல, 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்' என ஓ.பி.எஸ் கூறியுள்ளது பற்றி?

ஆர்.கே நகர்ல 32 அமைச்சர்கள் வந்து பல்டி அடிச்சு தோத்துத்தான போனாங்க? இப்ப அந்தர் பல்டி அடிச்சுத்தான் போவாங்க. 32 பேரும் இப்போ இருபது தொகுதிக்குப் பிரிஞ்சு போகணுமே... 32 இல்ல தொகுதிக்கு 300 பொறுப்பாளர்கள் போட்டு, ஓட்டுக்குப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாலும் ஜெயிக்க
முடியாது.

அவ்வாறு பணப்பட்டுவாடா நடந்தால் நீங்கள் பிடித்துக் கொடுப்பீர்களா?

தேர்தல் ஆணையம், காவல்துறை, நீதிமன்றம் எல்லாத்தையும் இவுங்க கையில் வச்சு ஆட்டிப்படைச்சுகிட்டு இருக்காங்க. பிடிச்சுக்  கொடுத்தா மட்டும் என்ன கேஸா போட போறாங்க? ஏற்கனவே ஆர்.கே.நகர்ல வண்டி வண்டியா புடிச்சுக் கொடுத்ததுக்கே இன்னும் நடவடிக்கை எடுக்கல. பணம் கொடுப்பாங்க, ஆனால் மக்கள் அவங்களுக்கு ஓட்டு போட மாட்டாங்க.

ஜாலியாக ஆரம்பித்த பேட்டியில் அரசியலும் கலந்துவிட்டது... சரி, ஜாலியாக முடிப்போமென்று ''சர்கார்' படத்தில் விஜய் பேசும் அரசியல் சரியாக இருந்தால் அதை ஆதரிப்பீர்களா?' என்று கேட்டோம். வெடித்துச் சிரித்தவர், "படம் பாத்துட்டு சொல்றேங்க" என்றார்.

 

 

 

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.

Next Story

“ஓ.பி.எஸ்-ஐயும், தினகரனையும் பாஜக மிரட்டி போட்டியிட வைத்துள்ளது” - முதல்வர் ஸ்டாலின்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
mk stalin BJP has threatened OPS and Dinakaran to contest

தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன்,  திண்டுக்கல் வேட்பாளர் சச்சிதானந்தம் இருவரையும் அறிமுகப்படுத்தி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்தப் பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “அ.தி.மு.க.வும் - பா.ம.க.வும் அன்றைக்குக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சட்டமே நிறைவேறி இருக்காது. அதுதான் உண்மை. இந்த இரண்டு துரோகத்தையும் மனதாரச் செய்த கட்சிகள்தான் அ.தி.மு.க.வும், பா.ம.க.வும். இந்தச் சட்டங்களை ஆதரித்து, ஓட்டுப் போட்ட பா.ம.க. இப்போது பா.ஜ.க.வுடன் அமைத்திருப்பது சந்தர்ப்பவாதக் கூட்டணி. மருத்துவர் அய்யா ராமதாசு நிலைமையைப் பார்த்து அவர்கள் கட்சிக்காரர்களே தலைகுனிந்து நிற்கிறார்கள். இதற்கு மேல் அவரை நான் விமர்சிக்க விரும்பவில்லை. அடுத்து, தேனி தொகுதியில் பா.ஜ.க. ஆதரவு பெற்ற வேட்பாளராக ஒருவர் நிற்கிறார். யார்? தினகரன். இதே பா.ஜ.க.வைப் பற்றி அவர் என்ன சொல்லி இருந்தார்? “பா.ஜ.க. கூட்டணியில் சேர்வது தற்கொலை செய்வதற்குச் சமம். யாராவது தெரிந்தே கிணற்றில் விழுவார்களா?” என்று கேட்டவர். இப்போது என்ன தெரிந்தே கிணற்றில் விழ வந்திருக்கிறாரா? என்பதுதான் தேனிக்காரர்கள் கேட்க வேண்டிய கேள்வி.

அதுமட்டுமல்ல, இன்னும் பேசியிருக்கிறார். 'டெல்லியில் வேண்டும் என்றால் பெரிய கட்சியாக, ஆளும் கட்சியாக பா.ஜ.க. இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் அதற்கு என்ன இருக்கிறது? நோட்டாவுடன் போட்டி போடக் கூடிய கட்சிதான் பா.ஜ.க.” என்று சொன்னவர்தான் இந்தத் தினகரன். அவரைப் பார்த்து நீங்கள் கேட்க வேண்டும். இன்று நோட்டாவுடன் போட்டி போடத் தேனிக்கு வந்திருக்கிறீர்களா? இல்லை உங்களை வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வந்திருக்கிறீர்களா? நான் சென்ற கூட்டங்களில் சொன்னது போன்று, மோடி வாரண்டியுடன் ஒரு வாஷிங் மெஷின் வைத்திருக்கிறார். அதில் ஊழல்வாதிகளை உள்ளே அனுப்பினால், அவர்கள் சுத்தமாகி வெளியே வந்துவிடுவார்கள்.

“மேட் இன் பி.ஜே.பி.” வாசிங் மெஷின் அது. மேட் இன் ஜப்பான், மேட் இன் அமரிக்கா, மேட் இன் இங்கிலாந்து மெஷின் இது. அந்தக் கட்சியில் கூட்டணி வைத்துக் கொண்டால், அந்த வாஷிங் மெஷின் வெளுத்துவிடும். அப்படி வெளுக்கப்பட்டு பா.ஜ.க. கூட்டணி சார்பில் நிற்கின்றவர்தான் தினகரன்.1995-96ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து 62 இலட்சத்து 61 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அங்கீகாரம் அற்ற முகவர் மூலமாகப் பெற்று, இங்கிலாந்தில் இருக்கும் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாகக் கொடுத்ததாக, அந்நியச் செலாவணி மோசடியில் சிக்கியவர்தான் இந்த தினகரன். ‘ஃபெரா’ போன்ற சொற்களைத், தமிழ்நாட்டில் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை தினகரனுக்குத்தான் உண்டு. இந்த வழக்கை 30 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டு இருக்கிறார். இந்த வழக்கில் அவருக்கு 28 கோடி ரூபாயை அமலாக்கத்துறை அபராதமாக விதித்தது. இப்போது புரிகிறதா? ஏன் இவர் பா.ஜ.க.வுக்குச் சென்றார் என்று.

mk stalin BJP has threatened OPS and Dinakaran to contest

அதுமட்டுமல்ல, அம்மையார் மறையும்வரை, போயஸ் கார்டனுக்குள் நுழைய முடியாமல் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இருந்தவர் தினகரன். காரணம் என்ன? அம்மையார் சொத்துக் குவிப்பு வழக்கோடு தன்னுடைய வழக்கைச் சேர்த்தால், தனக்கும் தண்டனை கிடைத்துவிடும். அதனால் இரண்டு வழக்கையும் தனியாக நடத்த வேண்டும் என்று அம்மையார் ஜெயலலிதாவின் வக்கீலையே மிரட்டியதால் விரட்டப்பட்டவர். கடைசியாக, ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, சசிகலாவால் கட்சிக்குள் சேர்க்கப்பட்ட தினகரன்தான், இப்போது வழக்குகளுக்கு பயந்து, சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து, மோடி வாஷிங் மெஷின் மூலமாகத் தேனிக்குள் நுழைந்து இருக்கிறார்.

இப்படிப்பட்ட சந்தர்ப்பவாதிகளைத் தோற்கடிக்க வேண்டும். தேனி மக்களே ஏமாந்துவிடாதீர்கள். கடந்த முறை பன்னீர்செல்வம் மகனிடம் ஏமாந்துவிட்டீர்கள். இந்த முறை, சசிகலா குடும்பத்திடம் ஏமாந்துவிடாதீர்கள். ஓ.பி.எஸ் நிலைமை என்ன? இரண்டு முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரை இப்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பவரை அவமானப்படுத்த, அவரை மிரட்டி இராமநாதபுரத்தில் நிற்க வைத்திருக்கிறது பா.ஜ.க. தலைமை. தினகரனை மிரட்டித் தேனியில் நிற்க வைத்திருக்கிறார்கள். இப்படி, பா.ஜ.க.வின் தொங்கு சதைகளான பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன் என்று யாராக இருந்தாலும், பா.ஜ.க.வுக்குக் கொடுக்கும் அதே தண்டனையைக் கொடுங்கள். பா.ஜ.க.வுக்கு சொந்த செல்வாக்கு இல்லாததால் பன்னீர்செல்வம், தினகரன் போன்ற வாடகை மனிதர்களை வைத்து, தேர்தலைச் சந்திக்கிறது. ‘B-டீம்’-ஆகப் பழனிசாமியின் அ.தி.மு.க.வைக் குத்தகைக்கு எடுத்து, தனியாக நிற்க வைத்திருக்கிறது. சொந்தமாக முடிவெடுக்க முடியாமல், கீ கொடுத்த பொம்மைபோல் அ.தி.மு.க.வை ஆட்டுவிக்கிறது பா.ஜ.க.

இவர்களை மொத்தமாகத் தோற்கடிக்க வேண்டாமா? தமிழுக்கும், தமிழினத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் வஞ்சகம் செய்யும் பா.ஜ.க. கூட்டத்திற்கும் துரோகம் இழைக்கும் பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன் மற்றும் பா.ம.க. ஆகிய அடிமைக் கூட்டத்திற்கும், திண்டுக்கல், தேனி மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். அதற்கு, தேனி நாடாளுமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் சச்சிதானந்தம் அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் அளிக்கும் வாக்கு இந்தியாவைக் காக்கட்டும். தமிழ்நாட்டைக் காக்கட்டும். நம்முடைய எதிர்காலத் தலைமுறையைக் காக்கட்டும். பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவைக் காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்” என்று கூறினார்.