Skip to main content

டிக் டாக்- ஒரு மாதிரியான மனநோய்... - டாக்டர் ஷாலினி

Published on 06/02/2019 | Edited on 09/02/2019

 

இந்த நூற்றாண்டின் சமூக வலைதளங்களின் வளர்ச்சி பல புரட்சிகளை நிகழ்த்திக்காட்டியுள்ளது. கருத்து சுதந்திரத்தையும் விவாதங்களுக்கான சூழலையும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் உலகையே கையில் வைத்திருக்கும் முனைப்புடன் இளைஞர் பட்டாளம் முன்னேறும் நிலையில் அப்பாதையில் பல புதைகுழிகள் இருப்பதும் நிதர்சன உண்மையே. கைபேசி செயலிகள் வங்கி கணக்கு முதல் வாசல் தேடி வரும் உணவுகள் வரை வசதிகளை வாரி  வழங்கினாலும்,  மறுபுறம் கேலிக்கை தொடர்பான பல செயலிகளான டிக் டாக், மியூசிக்கலி போன்றவற்றால் கலாச்சார சீரழிவுகளும், பாலியல் குற்றங்களும் அரங்கேறுவதை தொடர்ந்து பார்க்க முடிகிறது. இதற்கான காரணம் என்ன? விளையாட்டு வீடியோக்கள் விபரீதத்தில் முடிவது ஏன்? இது குறித்து பிரபல மனநல மருத்துவர் டாக்டர்.ஷாலினி அவர்களிடம் பேசிய போது கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்...

 

tic tok

 

டிக் டாக், மியூசிக்கலி விடியோஸ் மூலம் தொடர்புகள் ஏற்பட்டு பல பிரச்சனைகள் நடப்பதை பார்க்கிறோம். அதே நேரம் இதன் மூலம் பிரபலமாகி பயன் பெற்றவரும் உள்ளனர். இது சரியா தவறா ? உங்களின் கருத்து என்ன ?
 

இதற்கு விளக்கம் சொல்வதற்கு முன்பு மனநலம் பற்றியும் பேசவேண்டியுள்ளது. எல்லா மனிதர்களும் சமமானவர்கள் என்றபோதும் சிலருக்கு தன் மீது எல்லோரின் கவனமும் இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதை ஆளுமை கோளாறு எனலாம். இந்த மாதிரியான மனநோய் உள்ளவர்கள் தன்னை பிறரிடம் இருந்து சிறந்தவனாக காட்டிக்கொள்வார்கள். அனைத்தையும்விட நான் பெரியவன் என்ற எண்ணத்தில் அதே போல் பாவனைகளை பின்பற்றுவார்கள். இதுபோன்ற மனிதர்கள் எல்லா காலங்களிலும் இருந்திருக்கிறார்கள்.  சமூக வலைத்தளங்கள் இல்லாத காலத்திலும் சில பெண்கள் கை நிறைய வளையல் அணிவதும், இறக்கமான பிளவுஸ் போட்டுக்கொள்வதுமாக இருப்பார்கள். இது போன்ற மனநிலை உள்ளவர்களிடம் டிக் டாக் போன்ற செயலி கிடைக்கும் போது அதை மிக அதிகமாக பயன்படுத்துகிறார்கள். நிறைய வீடியோ எடுப்பது, அடிக்கடி செல்ஃபி எடுத்து அப்லோடு செய்வது, என இதற்கு அடிமையாகிறார்கள். மனநோய் இல்லாத நபர்களும் இவர்களது வீடியோ பார்க்கும் போது இதற்கு இவ்வளவு லைக் வந்திருக்கிறது, நாம் இன்னும் கவர்ச்சியாக வீடியோ எடுத்தால் நிறைய லைக் வாங்கலாம் என்ற போட்டி மனப்பான்மையும் ஏற்படுகிற வாய்ப்பு இருக்கிறது.

 

நீங்கள் சொல்கிற மனநிலை நமது கிராம புறங்களிலும் இருக்கும் என நினைக்கிறீர்களா? குழந்தைகள் கூட இதை செய்கிறார்களே ?
 

நோய்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லை. கிராமம், நகரம், ஏழை, பணக்காரன் என்றெல்லாம் நோய்க்கு தெரியாது.  சென்னையில் நூறில் நான்கு பேருக்கு இந்த நோய் இருக்கிறதென்றால் எல்லாஊர்களிலும் அதே நிலைதான்.  தன்னை எல்லோரும் விரும்ப வேண்டும், ஆஹா ஓஹோ  என சொல்ல வேண்டும், என்றெல்லாம் நினைப்பவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். நிறைய பேர் இந்த வீடியோவை பார்ப்பார்கள் இது எங்கும் பரவும் என்று தெரிந்தே  இதுபோல வீடியோ எடுக்கபடுகிறது. இது இயல்பானதும், ஆரோக்கியமானதும் அல்ல. எனவேதான் இதை மனநோய் என்று சொல்கிறோம்.  அதுபோக குழந்தைகளுக்கு இது என்னவென்றே தெரியாது. அந்த வீட்டில் இருப்பவர்களில் யாருக்காவது இந்த மனபிறழ்வு இருக்கலாம். அவர் குழந்தையை வீடியோ எடுக்கும்போது குழந்தை அதையே பின்பற்றுகிறது. இது ஒரு மனபிறழ்வு தான் ஒழிய சாதாரண மனிதர்கள் இதை செய்துகொண்டிருக்க மாட்டார்கள்.

     

டான்ஸ், டப்பிங், பாட்டு பாடுவது இதெல்லாம் டிக் டாக்கில் அப்லோடு செய்வது திறமையை வெளிப்படுத்தும் ஒரு விஷயம் இல்லையா ? இதை நோய் என்று எப்படி சொல்லுவது.?
 

இப்போது நிறைய ‘ரியாலிட்டி ஷோக்கள்’திறமையை தேட போகிறோம், டேலண்ட் ஹண்ட், சிறந்த குரல் தேடல் என்பது போல விளம்பரம் செய்கின்றன. அந்த கதையை எல்லோரும் நம்பி இவ்வாறு செய்கிறார்கள்.  உண்மையில் பாட்டு பாடுவது, நடனம் ஆடுவதெல்லாம் எல்லோருக்கும் இயல்பானது. ஒரு சூழலில் அதை வெளிப்படுத்தும் போது அப்போதைக்கு அவர் சிறந்தவர். அடுத்த வருடமே வேறொருவர் சிறந்தவர் ஆவதில்லையா. அதனால், யாரையும் சிறந்தவர் என சொல்வதற்கில்லை . ஆனால் இளைஞர்கள், எல்லோரும் செய்கிறார்களே, எனவே நானும் செய்கிறேன் என்றுதான் டிக் டாக்கில் வீடியோ எடுக்கிறார்கள். இவ்வாறு செய்வது பெரிய ஆபத்து.

 

இதை விரும்பி பார்க்கிறவர்களில்கூட  பெரிய குறிக்கோள் உள்ளவர்கள், பொறுப்புள்ளவர்கள் யாரும் இல்லை. பொழுது போகாமல் ஏதாவது செய்யவேண்டும் என்றுதான் பார்க்கிறார்கள். மேலும், வீடியோ எடுப்பதே தவறு எனும்போது பார்ப்பது இரண்டாவது தவறுதானே. நிறைய இளைஞர்களுக்கும் பெண்களுக்கும்  இது ஆபத்து, அநாகரிகம், ஆபாசமனது, என்றெல்லாம்கூட தெரிவதில்லை. நான் ஏதோ பாட்டு பாடினேன், டான்ஸ் ஆடினேன், நான் அழகாயிருக்கிறேன் அதனால் வீடியோ எடுக்கிறேன், அதை மற்றவர் பாராட்டுவதில் என்ன தவறு, என்று கேட்கும் பெண்களை நான் பார்த்திருக்கிறேன்.  நாம் அழகா இருப்பதை வெளிப்படுவதில் என்ன அவசியம்.  தன் அழகை காட்டி பாராட்டு பெறநினைப்பது எல்லா ஜீவராசிகளுக்கும் இயல்பான உணர்வுதான். ஆனால்  இதையே ஒரு முதன்மை குறிக்கோலாய் வைப்பது தவறு.

 

எந்த தொழில்நுட்ப வளர்ச்சியானலும் நன்மையும் தீய்மையும் இருக்கும். அதுபோல டிக் டாக் செயலியில் நன்மை இருக்க வாய்ப்பில்லையா?
 

அப்படி எதுவும் இதுவரையில் நடந்ததாக தெரியவில்லை. மேலும், நீங்கள் கூறுவது போல் புரட்சியெல்லாம் தினமும் நடைபெறாது. பத்து வருடத்திற்கு ஒரு முறை யாரேனும் அதை சரியாக பயன்படுத்தி சமூக மாற்றம் வந்தால் அதை பாராட்டலாம்.  அனால் இப்போதோ அவ்வாறு நடக்கவில்லை.  இப்போது இதை பயன் படுத்துகிறவர்கள் பொழுதுப்போக்காகத்தான் பயன்படுத்துகிறார்கள். இதில் ஆபத்தானது என்னவென்றால்.  யார் கவர்ச்சியாக உடை அணிந்திருகிறாரோ அவர்களை குறிவைத்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்துவதும் நடக்கிறது.

 

இதெல்லாம் தெரிந்துதான் இந்த பெண்கள் செய்கிறார்களா அல்லது தெரியாமல்போய் மாட்டிக் கொள்கிறார்களா என்ற சந்தேகமும் வருகிறது. தெரியாமல் நடக்கிறது எனில் அவர்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு நம்முடையது.

 

இது மாதிரியான பாலியல் குற்றங்கள் நடக்க வாய்ப்புகள் இருக்கு, என்பதை உணர்த்திவிட்டால் டிக் டாக்  பயன்பாடு குறைவது சாத்தியமா?
 

இப்டி நடக்கிறது என்ற விழிப்புணர்ச்சி கொடுக்க வேண்டியது நமது கடமை. தெரிந்தெ செய்தால் அது அவரவர் சவுகரியம். சில பெண்களுக்கு பாலியல் தொழில் அவங்களுக்கே பிடிக்கலாம். இது பணம் சம்பாதிக்க எளிய வழி என கருதும் பெண்களை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ‘இப்படி நடக்கும்னே தெரியாது. என் தோழி செஞ்சாணு நானும் செஞ்ச. இப்ப இப்டிலாம் பிரச்னை வந்துடுச்சி’னு  சொல்கிற இளம் பெண்ணுக்கு நாம் என்ன பதில் சொல்லப்போகிறோம். இப்டி வெகுளி பொண்ணுக்கு ஆரம்பத்தில் எதுவும் தெரியாது. ஒரு உந்துசக்தியில் செய்து விடுவார்கள். இதன் சிக்கலை அந்த பெண் புரிந்துகொள்வதற்குள் அது பெரிய பாதிப்பாக மாறியிருக்கும்.

 

 

 

Next Story

மம்தா பானர்ஜி உடல்நிலை குறித்து மருத்துவர் விளக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Doctor explains Mamata Banerjee's health

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டு 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நெற்றியில் இருந்து முகத்தின் வழியாக ரத்தம் வழியும் புகைப்படத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டது.

Doctor explains Mamata Banerjee's health

அந்த பதிவில், “மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து அவரை உங்களின் பிரார்த்தனை மூலம் நல்ல நிலைக்கு வர வையுங்கள்” எனப் பதிவிடப்பட்டிருந்தது. மம்தா பானர்ஜி கொல்கத்தா வூட்பர்ன் பிளாக்கில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலவேறு தலைவர்களும் தங்களது ஆறுதலை தெரிவித்துள்ளனர்.

Doctor explains Mamata Banerjee's health!

இந்நிலையில் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் இயக்குநரும், மருத்துவருமான மணிமோய் பந்தோபாத்யாய் கூறும்போது, “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (14.03.2024) இரவு 07:30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னால் இருந்து ஏற்பட்ட அதிர்வு காரணமாக வீட்டில் அவர் விழுந்த தடயம் உள்ளது. இதனால் அவரது பெருமூளை அதிர்ச்சி ஏற்பட்டு நெற்றியிலும் மூக்கிலும் கூர்மையான வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ஆரம்பத்தில் முதலில் மூளை மற்றும் நரம்பியல், மருந்தவியல் மற்றும் இதயவியல் ஆகிய துறையின் தலைமை மருத்துவர்கள் குழுவினரை கொண்டு, உடல் நிலை குறித்து பரிசோதித்து உறுதிபடுத்தப்பட்டது.

Doctor explains Mamata Banerjee's health!
மருத்துவர் மணிமோய் பந்தோபாத்யாய்

நெற்றியில் மூன்று தையல்கள் போடப்பட்டன. ஈ.சி.ஜி., சி.டி. ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மம்தா பானர்ஜி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் வீட்டிற்கு செல்ல விரும்பினார். இதனால் அவரை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன் மருத்துவர் குழுவின் ஆலோசனையின்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். அவருக்கு நாளை (15.03.2024) மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார். 

Next Story

மருத்துவ சீட்டு தராத கவுன்சில்; சாதனை படைத்த உலகில் உயரம் குறைவான மருத்துவர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
The world's shortest man holds the record to become doctor

3 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட 23 வயது இளைஞர், பல தடைகளை தாண்டி உலகில் உயரம் குறைவான மருத்துவர் என்ற சாதனை படைத்திருக்கிறார். இவரது சாதனைக்கு பலதரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. 

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பாரய்யா (23). விவசாய குடும்பத்தைச் சேர்ந்த கணேஷ் பாராய்யாவுக்கு சிறு வயதில் இருந்தே மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. அதற்காக பள்ளிப்படிப்பை முடித்த கணேஷ் பாராய்யா, மருத்துவ படிப்பை மேற்கொள்வதற்காக நீட் தேர்விற்கு தயாராகினார். அதன் பிறகு, நீட் தேர்வில் 233 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.

அந்த மதிப்பெண் எடுத்தும் கூட, கணேஷின் உயரத்தை காரணமாக காட்டி இந்திய மருத்துவ கவுன்சில், அவர் மருத்துவராக தகுதி இல்லை என மருத்துவ சீட்டு கொடுக்க மறுத்துவிட்டது. அதன் பிறகு அவர், தான் படித்த பள்ளியின் முதல்வரின் உதவியோடு, மாவட்ட ஆட்சியர், மாநிலக் கல்வி அமைச்சரை அணுகியுள்ளார். அதன் பின்னர், அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், அந்த வழக்கு குஜராத் நீதிமன்றத்தில் தோல்வி அடைந்த பிறகும் கூட கணேஷ் நம்பிக்கை இழக்காமல் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். 

The world's shortest man holds the record to become doctor

பல மாதங்களாக போராடிய கணேஷ், கடந்த 2018ஆம் ஆண்டில் வெற்றி பெற்று 2019ஆம் ஆண்டில் மருத்துவ சீட்டை பெற்றார். இப்போது அவர், மருத்துவ படிப்பை முடித்த பிறகு பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். 

இது தொடர்பாக கணேஷ் பாராய்யா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “எனது உயரம் 3 அடி என்றும், அவசரகால வழக்குகளை என்னால் கையாள முடியாது என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் குழு என்னை நிராகரித்துவிட்டது. பாவ்நகர் கலெக்டரின் வழிகாட்டுதலின் பேரில், நான் குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றேன். 2 மாதங்களுக்குப் பிறகு, நாங்கள் வழக்கில் தோல்வி அடைந்தோம். அதன் பிறகு, உச்ச நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு தொடுத்தோம். நான் மருத்துவ சீட்டு பெறலாம் என்று கடந்த 2019ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது. 

The world's shortest man holds the record to become doctor

அதன் பின்னர், எனக்கு பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் கிடைத்தது. எனது மருத்துவ பயணமும் தொடங்கியது. நோயாளிகள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் முதலில் திடுக்கிட்டார்கள். சிறிது நேரத்தில், அவர்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களின் ஆரம்ப நடத்தையையும் நானும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அவர்கள் என்னுடன் அன்பாகவும் நேர்மறையாகவும் நடந்து கொள்கிறார்கள்” என்று கூறினார்.