Skip to main content

“இப்போது தடுமாற்றத்தில் அவர் அரசியல் முடியப்போகிறது...” -தமிமுன் அன்சாரி

Published on 25/03/2019 | Edited on 26/03/2019

அதிமுக கூட்டணியில் இணைந்து வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சி, நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில், ராகுல் காந்தியை பிரமராக்குவோம் என்ற முழக்கத்தோடு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 
 

நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி சந்தித்தார். 

 

thamimun ansari


இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்துகொண்டார் தமிமுன் அன்சாரி, 
 

மனிதநேய ஜனநாயக கட்சி வளரும் கட்சிகளில் செல்வாக்கு மிக்க கட்சியாக இருக்கிறது. தற்போதைய அரசியல் சூழலில் நாங்கள் எடுத்திருக்கக் கூடிய கொள்கை முடிவு மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. எங்களின் மக்கள் செல்வாக்கை இதன் மூலம் கூடுதலாக பெருக்கியிருக்கிறோம் என்று நம்புகிறோம். 
 

எங்களின் நிபந்தனையற்ற ஆதரவை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தெரிவித்துவிட்டு, ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை அறிவித்துவிட்டு எங்களது தொண்டர்கள் களத்தில் இறங்கி பணியாற்ற தொடங்கிவிட்டனர். 
 

மிகுந்த எதிர்பார்ப்போடு பல்வேறு கட்சிகளை சார்ந்த தலைவர்களும், வேட்பாளர்களும் எங்களது அலுவலகத்திற்கு வர தொடங்கினர். இந்த நிலையில் தான் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தலைமை ஏற்றிருக்கக்கூடிய திமுக தலைவர் அண்ணன் ஸ்டாலினை சந்தித்து எங்களது அன்பையும், ஆதரவையும் வெளிப்படுத்துவதுடன், சில கோரிக்கைகளையும்  கொடுக்கலாம் என்று எங்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு முடிவு எடுத்தது. 
 

அதன்படி ஐந்து அம்ச கோரிக்கையுடன் திமுக தலைவரை சந்தித்தோம். 
 

நீதிபதி சச்சார் கமிட்டி பரிந்துரைகளையும் மற்றும் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின்  பரிந்துரைகளையும்  அமல்படுத்துவது, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது, பேரறிவாளன் உள்ளிட்ட சிறைக் கைதிகளை விடுதலை செய்வது, நாடு முழுக்க உள்ள விசாரணை சிறைவாசிகளை விடுவிப்பது  உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை  அவரிடம் கொடுத்தோம்.
 

thamimun ansari


எங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர்களோடு நடந்த சந்திப்பில் எங்களை வரவழைத்து, அவர்களோடும் எங்களை உரையாட செய்து சிறப்பு செய்தார். இது எங்கள் மீது அவர் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் காட்டக்கூடியதாக இருக்கிறது. 
 

மேலும், திமுக தலைவரின்  முன்பாக நாங்களும் காங்கிரஸ் தலைவர்களும் உரையாடியபோது நிபந்தனையற்ற முறையில் மனிதநேய ஜனநாயக கட்சி அவர்களுக்கு அளித்த ஆதரவை துணிச்சலான மற்றும்  சிறப்பான முடிவு என்று பாராட்டினார்கள். 
 

தமிழகமெங்கும் மஜகவினர் கொடிகளோடு களத்தில் இறங்கி பணியாற்றி வருவதாக திமுக தலைவர் கூறியபோது, கள நிலவரத்தை அவர் எவ்வாறு கூர்ந்து கவனிக்கிறார் என்பதை உணர முடிந்தது.
 

புதுச்சேரி உட்பட, தேர்தல் நடைபெறும்40 தொகுதிகளில் 30 தொகுதிகளில் வெற்றி உறுதி என்று கூறி வந்தோம். நாளுக்கு நாள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பிரச்சார கூட்டங்களில் மக்கள் அலை வீசுவதை பார்க்கிறபோது 40 தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என்பது  உறுதியாகியிருக்கிறது. 
 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளின் வெற்றிதான் இந்தியாவின் அரசியலை தீர்மானிக்கப்போகிறது. 
 

நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்கினால் நாட்டின் ஜனநாயகம் நாசமாகிவிடும் என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுவிட்டது. 
 

நாட்டின் எல்லா துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்களை புகுத்தி தேர்தல் ஆணையம், நீதிமன்றம், மத்திய புலனாய்வு துறை , ரிசர்வ் வங்கி உள்ளிட்ட சுதந்திரமான அமைப்புகளையெல்லாம் நாசப்படுத்திவிட்டார்.
 

இதையெல்லாம் நாட்டு மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். 
 

இந்த தேர்தலில் ராகுல்காந்தி தேசிய அளவில் ஒரு அரசியல் சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கிறார். அவரது கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் பாஜகவினர் திணறுவதை பார்க்க முடிகிறது. 
 

300 இடங்களில் மதசார்பற்ற மற்றும் , சமூக நீதி சார்ந்த கட்சிகளின் வெற்றி உறுதிப்படும் என்று தெரிகிறது. இந்த எண்ணிக்கை நாட்கள் செல்ல செல்ல இன்னும் உயரலாம்.
 

இவ்வாறு கூறிய அவரிடம் கீழ்கண்ட கேள்விகளை தொடுத்தோம்.

 

kamal haasan


நிலையான ஆட்சிக்கும், இந்திய பாதுகாப்புக்கும் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறாரே? 
 

எடப்பாடி யாரை நினைத்து நான் உண்மையிலேயே பரிதாபப்படுகிறேன். அவருடைய் உள்மனம் ஒன்று பேசுகிறது. அவருடைய வெளிப்பேச்சு வேறு மாதிரியாக இருக்கிறது. மோடியால் தாங்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டோம் என்பதை முழுமையாக உணர்ந்தவர் அவர். இப்போது அவர் பேசுவதெல்லாம், தன் மனசாட்சிக்கு விரோதமாகத்தான் என்பதை அவரோடு இருப்பவர்களே அறிவார்கள். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை பலமுறை நாங்கள் சுட்டிக்காட்டினோம். கேட்கவில்லை. இப்போது தேர்தல் பரப்புரைகளில் அவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பரிதாபமான  நிலையை நினைத்து  உண்மையிலேயே வருத்தப்படுகிறோம். 
 

40 தொகுதிகளில் வேட்பாளரை அறிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்த தேர்தலில் போட்டியிடவில்லையே? 

கமல்ஹாசனுடைய கலைத்துறை பயணம் தொடர வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். அதே சமயம் இந்த தேர்தலோடு அவருடைய அரசியல் பயணம் நிறைவுறும் என்றும் எதிர்பார்க்கிறோம்.

எதையோ பெரிதாக எதிர்பார்த்து  வந்து, இப்போது ஏமாற்றத்தில் அவர் இருப்பது புரிகிறது.

கருப்புக்குள் காவி எனப் பேசி, தடம் மாற்றத்தில் தொடங்கி இப்போது தடுமாற்றத்தில் அவர் அரசியல் முடியப்போகிறது.