Skip to main content

ஆளுகிறான் தமிழன்! - உலகெங்கும் அதிகாரத்தில் இருக்கும் தமிழர்கள்  

Published on 13/01/2019 | Edited on 13/01/2019

 

இந்த வருடம் தமிழர் திருநாளை கொண்டாட இருக்கிறோம். வருடா வருடம் தமிழர்கள் அதிகமாக உள்ள நாட்டு பிரதமர்கள் உலகம் முழுவதும் இருக்கிற தமிழர்களுக்கு தை பொங்கல் வாழ்த்து தெரிவிக்கின்றனர். கடந்த வருடம் கனடா பிரதமர் பொங்கல் கொண்டாடி, தமிழர்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தை பெற்றுக்கொண்டார். தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆளவேண்டும் என்று ஒருபுறமும், தமிழரென்பதன் வரையறை என்ன என்பதைப் பற்றி ஒருபுறமும் விவாதங்கள் சென்றுகொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் தமிழனென்றால் இதை பகிருங்கள் என்று 'வாட்ஸ்-அப்' செய்திகள் பரவிக்கொண்டேயிருக்கின்றன. இப்படி தமிழ்நாட்டில் தமிழராட்சி பற்றிய பேச்சுகள் நிலவும் நிலையில், உலகத்தின் பல நாடுகளிலும் வாழும் தமிழர்கள் கல்வியிலும் சிறந்து, அங்குள்ள அதிகாரமிக்க பதவிகளிலும் இருக்கின்றனர். உலக நாடுகளில்  தமிழின்  அடையாளமாகவும்  பெருமையாகவும் இவர்கள் திகழ்கிறார்கள். அப்படியிருப்பவர்களில் சிலரைப் பற்றி பார்ப்போம்....     

 

ராஜ ராஜேஸ்வரி - நியூயார்க், அமெரிக்கா  
 

raja rajeswari


தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலிருந்தும்  அமெரிக்காவுக்கு  ஐ.டி பணிக்கு  சென்றிருக்கிறார்கள். சென்னையைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி நியூயார்க் நகர குற்றவியல்  நீதிபதியாக உள்ளார் 2015ஆம் ஆண்டு இவர் பதவியேற்ற போது,  அப்பதவியை வகிக்கும் முதல் இந்தியப் பெண்மணியாக திகழ்ந்தார். தனது 16 வயதில் அமெரிக்காவிற்கு குடியேறினார். பின்னர் ரிச்மாண்ட் மாகான மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய  இவரின் வாதாடும் திறமையால் குழந்தைகளுக்கு எதிரான  வன்முறை மற்றும் குடும்ப வன்முறை  பிரச்சனைகளில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வாங்கி தந்துள்ளார். இவரின் திறமை வழக்கறிஞராக மட்டும் இல்லாமல் அமெரிக்காவில் நடைபெறும் இந்தியா கலாச்சார நிகழ்வுகளில் பரத நாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடன கலைஞராகவும் வெளிப்படுகிறது. தன் குழுவினரிடம் இவர் செய்யும் நடன  அரங்கேற்றம் அங்கு புகழ் பெற்றது. 

 

மோசஸ்  வீராசாமி நாகமுத்து - கயானா 
 

moses


தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டவர் மோசஸ்  வீராசாமி நாகமுத்து. கயானாவில் பெர்பிஸ் பகுதியில் பிறந்தவர் ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 1962 ஆம் ஆண்டு அங்குள்ள  மக்கள் முன்னேற்றக் கட்சியில் இணைந்து 1992ஆம் ஆண்டு அக்கட்சியின் சார்பாக போட்டியிட்டு கயானா நாடாளுமன்றத்துக்குத் தேர்த்தேடுக்கப்பட்டார். பின்னர்  அமைச்சராகவும் பதவிவகித்த இவர், பின்னர் இந்த கட்சியிலிருந்து விலகி வேறொரு கட்சியில்  இணைந்தபோதும், மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தேடுக்கப்பட்டார். 2015ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று கயானாவின் பிரதமராகவும் ஆனார். 

 

செல்லப்பன் ராமநாதன் - சிங்கப்பூர் 
 

sellapan


எஸ்.ஆர்.நாதன் என்று அழைக்கப்படும்  செல்லப்பன் ராமநாதன் சிங்கப்பூரில், ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தவர். இவருக்குப்  பள்ளியில் நண்பர்கள் அதிகம். அதில் சீனர்களும், மலாய்க்காரர்களும் தான் அதிகம் அவர்களுக்காக தன் பெயரை எஸ்.ஆர்.நாதன் என்று சுருக்கிக்கொண்டார். 1954 ஆம் ஆண்டு மலாயா பல்கலைகழகத்தில் சமூகவியல் படித்த இவர், சிங்கப்பூரின் பல உயரிய பதவிகளை வகித்தார். அமெரிக்காவுக்கான  சிங்கப்பூரின்  தூதராகவும் இருந்தார். 1999 முதல் ஆகஸ்ட் 2011 வரை 12 ஆண்டுகள் சிங்கப்பூர் ஜனாதிபதியாக இருந்துள்ளார். தொடர்ந்து  இருமுறை ஜனாதிபதியாக இருந்த பெருமைக்குரியவர். 2012ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பிரவாசி பாரதீய சம்மான் (வெளிநாட்டு இந்தியருக்கான விருது) விருதை வழங்கி கௌரவித்தது. 2016ஆம் ஆண்டு சிங்கப்பூர் அரசு மருத்துவமனையில் உயிர் பிரிந்தது. இன்றும் சிங்கப்பூர் மக்களின் மனதில் நல்ல தலைவராக வாழ்ந்து  வருகிறார். 

 

ராதிகா சிற்பேசன் - கனடா 

 

radhika


இலங்கை யாழ்ப்பாணத்தில்  பிறந்த இவருக்கு ஐந்து வயதான போது இவர்களின் குடும்பம் கனடாவுக்கு  குடிபெயர்ந்தது. 2004ஆம் ஆண்டு ராதிகா புதிய ஜனநாயகக்  கட்சியில் இணைந்து அரசியலை ஆரம்பித்தார். பின்னர் ஸ்கார்பரோ தொகுதியில் நின்று கனடா பாராளுமன்ற உறுப்பினராக தேர்தந்தேடுக்கப்பட்டார். 2011 முதல் 2015 வரை பதவி வகித்த இவர், தனது பதவிகாலத்தில் ஒரு முறை இலங்கை சென்ற போது, அங்கு தன்னை இலங்கை அதிகாரிகள் பின்தொடர்ந்ததாகவும், அங்கு தனக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியதாகவும் கூறியதால், பரபரப்பேற்பட்டது. இலங்கையின் போர்க்குற்றத்தை விசாரிக்க வலியுறுத்த கனடாவின் முக்கிய அரசியல்வாதிகளை ஒருங்கிணைக்க முயன்றார் ராதிகா. தற்போது இவர் பதவியில் இல்லையென்றாலும் சமூக பணிகளைத் தொடர்கிறார்.   

 

இவர்களைப் போல உலகம் முழுவதும் பல நாடுகளில் தமிழர்கள் அதிகாரமிக்க பதவிகளிலும் அரசியலிலும் இருக்கின்றனர். தமிழர்களின் பெருமை யாரும் மறுக்க முடியாதது, ஆனால், அது தொடர்வது சாதிகளில் இல்லை, சாதனைகளில் தான் இருக்கிறது, சமூக ஊடகங்களில் பேசுவதில் மட்டுமில்லை, சமூக செயல்பாடுகளில் தான் இருக்கிறது.

 

 

Next Story

“அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா?” - ராமதாஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Ramadoss questioned Will Tamil ascend the throne?

தமிழ்நாடு அரசின் சார்பில் 2வது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக, ராமதாஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது. அதற்குள்ளாகத் தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்று மொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கி  அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு?” என்று தெரிவித்துள்ளார்.

Next Story

எழுத்துப் பிழையுடன் அரசு பெயர்ப் பலகைகள்; கவனிக்குமா தமிழ் வளர்ச்சித்துறை?

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Spelling mistake on government office name boards

தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதுவரை நடைமுறையில் இருந்து வந்த வீட்டுவசதித் துறையை, 'வீட்டுவசதி  மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை' என்று பெயர் மாற்றியது. அதேபோல, குடிசை மாற்று வாரியத் துறையை, 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' என்று பெயர்களை மாற்றி அமைத்தது. ஆனால் இந்த இரு துறைகளின் பெயர்களிலும் இடம்பெற்றுள்ள, 'நகர்ப்புறம்' என்ற சொல்லை, 'நகர்ப்புரம்' என்று குறிப்பிட்டுள்ளனர். அரசின் இணையதளத்திலும் அவ்வாறே பிழையுடன் 'நகர்ப்புரம்' என்றே பதிவு செய்துள்ளனர். அதாவது, வல்லின 'றகரம்' வர வேண்டிய இடத்தில்,  இடையின 'ரகர' எழுத்தைக் குறிப்பிட்டு, 'நகர்ப்புரம்' என்று பிழையுடன் குறிப்பிடப்பட்டு இருந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 11.12.2021 ஆம் தேதி சேலத்தில் கலந்து கொண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும்கூட, 'நகர்ப்புரம்'  என்று குறிப்பிட்டே பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன. செய்தி மக்கள் தொடர்புத் துறை அச்சிட்டு இருந்த அழைப்பிதழிலும் 'நகர்ப்புரம்'  என்று பிழையுடனே குறிப்பிட்டு இருந்தனர். இதுகுறித்து நக்கீரன் இணைய ஊடகத்தில் 20.12.2021ஆம் தேதி செய்தி வெளியிட்ட பிறகு, அரசு இணையதளத்தில் இருந்து பிழையான சொல்  திருத்தம் செய்யப்பட்டு 'நகர்ப்புறம்' என்று மாற்றப்பட்டது.

இது இப்படி இருக்க, சேலம் குமாரசாமிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டட முகப்பின் இடப்பக்கத்தில், 'நகர்புர' சமுதாய சுகாதார மையம் என்றும், வலப்பக்கத்தில் 'நகர்ப்புர' ஆரம்ப சுகாதார நிலையம் என்றும், நுழைவு வாயில் முன்பு உள்ள முகப்பு  சுவரில் உள்ள கருப்பு நிற பளிங்கு கல்வெட்டில், 'நகர்புற' சமுதாய சுகாதார மையம் என்றும் எழுத்துப் பிழைகளுடன் பெயர்ப் பலகை வைத்துள்ளனர். வல்லின றகர எழுத்துடன் குறிப்பிடப்படும் புறம் என்ற சொல்லுக்கு திசை, பக்கம், வெளியே, காலம், வீரம், புறநானூறு என பல பொருள்கள்  உள்ளன. இங்கே நகர்ப்புறம் என்பது அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்ற நிலப்பரப்பைக் குறிக்கும். அதாவது, இடவாகுபெயராக  வருவது, புறம் ஆகும். நகர் + புறம் = நகர்ப்புறம் எனலாம். ஆகையால், நகர்ப்புறம் என்றே பெயர்ப் பலகையில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

அதேபோல, இடையின 'ரகற' எழுத்துடன் குறிப்பிடப்படும் புரம் என்ற சொல்லுக்கு நகரம், ஊர் என்று பொருள்கள் உள்ளன. இது ஒரு  பெயர்ச்சொல்லாகும். வணிகர்கள் வாழும் பகுதியை நகர் என்கிறார்கள் மொழியியல் ஆய்வாளர்கள். காஞ்சிபுரம் என்றால் காஞ்சி நகர் என்றும், விழுப்புரம் என்றால் விழுமிய நகர், பல்லவபுரம் என்றால் பல்லவ நகர் என்றும் பொருள்படும்.  எனில், நகர்ப்புரம் என்று குறிப்பிட்டால் அதன் பொருள் 'நகர்நகர்' என்றாகி விடும். ஆக, நகர்ப்புரம் என்று குறிப்பிடுவது முற்றிலும் பிழையானது.

Spelling mistake on government office name boards

இது ஒருபுறம் இருக்க, சேலம் குமாரசாமிப்பட்டியில் நகர்ப்புற சுகாதார மையத்தில் பெயர்ப்பலகை எழுதுகையில், அதிகாரிகள் நகர்ப்புறம்  அல்லது நகர்ப்புரம் என்பதில் கடைசி வரை பெரும் குழப்பத்துடன் இருந்திருக்கக்கூடும். ஓரிடத்தில் 'நகர்புரம்' என்றும், மற்றொரு இடத்தில் 'நகர்ப்புரம்' என்றும், நுழைவு வாயில் பகுதியில் 'நகர்புறம்' என்றும் விதவிதமாக  எழுதியுள்ளனர். நகர் + புறம் என்றாலும் சரி; நகர்+புரம் என்றாலும் சரி; சேர்த்து எழுதும்போது இரண்டு சொல்லுக்கும் இடையில் 'ப்' என்ற  ஒற்றெழுத்து மிகும். இலக்கண விதிப்படி சொல்வதெனில், வருமொழியில் ககரம், சகரம், தகரம், பகரம் ஆகிய எழுத்துகளில் தொடங்கும் சொற்கள் இருந்தால், அவ்விரண்டு சொற்களுக்கும் இடையில் க், ச், த், ப் ஆகியவற்றுக்கு இனமான ஏதேனும் ஓர் ஒற்றெழுத்துத் தோன்றும்.

இது மட்டுமின்றி, சேலம் பெரமனூர் நாராயணசாமி தெருவில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாகப் பொறியாளர்  அலுவலக பெயர் பலகையிலும் நகர்ப்புறம் என்பதை 'நகர்ப்புரம்' என்று எழுத்துப் பிழையுடன் வைத்துள்ளனர். இப்படி பிழையான பெயர்ப் பலகைகளை அன்றாடம் காண்போருக்கு, ஒரு கட்டத்தில் அந்தச் சொல்தான் சரியாக இருக்குமோ என்ற முடிவுக்கும் வந்து விடும் அபாயம் இருக்கிறது. இது தொடர்பாக நாம் சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஜோதியிடம் கேட்டபோது, ''இடையின ரகர எழுத்துடன்  'நகர்ப்புரம்' என்று எழுதுவது பிழையானதுதான். சேலம் குமாரசாமிப்பட்டி சுகாதார நிலைய பெயர்ப்பலகையில் நகர்ப்புறம் என்றுதான் எழுத  வேண்டும். இது தொடர்பாக நீங்கள் ஒரு கடிதம் எழுதினால் எங்கெங்கு பிழைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் திருத்தி எழுதி விடுகிறோம்,'' என்றார்.     

Spelling mistake on government office name boards

அவரை தொடர்பு கொண்டபோது, 'ஐயா' என்றே அழைத்தவர், முழு உரையாடலையும் மொழி கலப்பின்றி பேசினார். பதவிக்குத் தகுந்த அணுகுமுறை சரிதான் என்றாலும் கூட, இதற்கெல்லாம் அரசுக்குக் கடிதம் எழுதினால்தான் பிழைகள் திருத்தப்படும் என்பது சற்று முரணாக இருந்தது. ஒரு தவற்றைச் சுட்டிக்காட்டிய பிறகு அரசு அலுவலர்கள் அதை சரிசெய்வதே சிறந்தது. நகர்ப்புறமா? அல்லது நகர்ப்புரமா? என்ற குழப்பம் இன்னும் தமிழக அரசுக்கே தீர்ந்தபாடில்லை போலிருக்கிறது. நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை  அறிக்கையிலும் நகர்ப்புறம் என்று வர வேண்டிய எல்லா இடங்களிலும் நகர்ப்புரம் என்றே பிழையுடன் குறிப்பிட்டு இருந்தனர்.

செவ்வியல் செறிவுடன் கூடிய தமிழ் மொழி, ஏற்கெனவே வேகமாகச் சிதைந்து வருகிறது. அதை அழிந்து விடாமல் காப்பதே நம் கடமை.  நாடாளுமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, காலம் தாழ்த்தாமல் மேற்படி பிழைகளைத் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் சேலம் மாநகராட்சி  அலுவலர்கள் விரைந்து சரிசெய்திட வேண்டும்.