Skip to main content

அரசு அதிகாரியைப்போல் கம்ப்யூட்டரில் உட்கார்ந்திருக்கும் புரோக்கர்கள்! -அதிர்ச்சி வீடியோ ஆதாரம்!

Published on 11/02/2019 | Edited on 11/02/2019

                                     
 

sub registrar office neelankarai


வி.ஏ.ஓ. அலுவலகத்தில் ஆரம்பித்து தாசில்தார், கலெக்டர் அலுவலகங்கள்வரை லஞ்சம் வாங்குவதற்காகவே நியமிக்கப்பட்ட புரோக்கர்கள் உலாவுவது சர்வசாதாரணம். பத்திரப்பதிவுத்துறை பதிவாளர் அலுவலங்களிலும் இதேநிலைமைதான். ஆனால், அதிகாரியைப்போலவே அரசு அலுவலக கணிப்பொறியில் புரோக்கர்கள் உட்கார்ந்து வேலை பார்ப்பதாக நமக்கு கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை உண்டாக்க விசாரிக்க ஆரம்பித்தோம்.    
 

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத சார் பதிவாளர் ஒருவர் நம்மிடம், “லஞ்சம் வாங்கினால் மாட்டிக்கொள்வோம் என்பதற்காக அரசு அதிகாரிகள் தங்களுக்கு பதிலாக லஞ்சம் வாங்குவதற்காகவே வைத்திருக்கும் புரோக்கர்கள் அரசு அலுவலகங்களில் இருப்பது காலங்காலமான ஒன்றுதான். ஆனால், பதிவுத்துறை அலுவலங்களில் புரோக்கர்களை அரசு ஊழியர்களைப்போலவே உட்காரவைத்து லஞ்சம் வாங்கவைத்துக்கொண்டிருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. ஒரு ஆவணத்தை பதிவுசெய்வதா? வேண்டாமா? என்பதை இந்த புரோக்கர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். ஸ்டார் 2.0 என்ற ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்திக்கொண்டிருக்கிறது தமிழகம். இதனால், அலுவலகப்பணிகள் எளிதாக்கப்பட்டுவிட்டன.

 

sub registrar office

ஆன்லைனில் செய்ய வேண்டிய பணிகளை அலுவலகத்தில் செய்யும் உதவியாளர் முத்து அழகேசன்
 

இருந்தாலும், ஒருசில சார் பதிவாளர்களுக்கு கம்ப்யூட்டரோ, ஆன்லைன் தொடர்பான புரிதலோ இல்லாததாலும் லஞ்சப்பணத்தை பெற்றுத்தரும் புரோக்கர்களை அரசு அலுவலகத்தில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இதனால், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள். உதாரணத்துக்கு, நீலாங்கரை சார்பதிவாளரை எடுத்துக்கொண்டால் சொத்து தொடர்பான வில்லங்கம், மதிப்பு நிர்ணயம் உள்ளிட்ட விவரங்களை புரோக்கர் கமலக்கண்ணன் என்பவர்தான் தெரிவிக்கிறார். அதுவும், அந்த அலுவலகத்திலுள்ள கம்ப்யூட்டரில் அமர்ந்துகொண்டு பரிசோதிப்பதே இவர்தான்.

சார் பதிவாளர் ஆறுமுக நவராஜோ கம்யூட்டரை பயன்படுத்துவதே கிடையாது. ஒரு அக்கவுண்ட் நோட்டை வைத்து எழுத்திக்கொண்டிருக்கிறார். மனைமதிப்பு நிர்ணயம், இட ஆய்வு போன்ற பணிகளை கேமரா ஆபரேட்டராக பணிபுரியும் பழனிவேல்தான் செய்கிறார். ஒவ்வொரு இட ஆய்வுக்கும் 2,000 ரூபாய்க்குமேல் கைமாறுகிறது. அதேபோல் பணம் வாங்கிக்கொடுக்கும் புரோக்கராக இருப்பவர்கள் கண்ணன், பிரபு, ராஜா ஆகியோர். இதில், பிரபுவும் ராஜாவும் வெளியில் டீ வாங்கிக்கொடுப்பவர்கள்போல நின்றுகொண்டு சந்தேகப்படக்கூடிய நபர்களோ அல்லது லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்தோ அரசு அலுவலத்துக்குள் வருகிறார்களா? என்பதை கண்காணிப்பதுதான் வேலை.

 

sub registrar office

                                                       சார்பதிவாளர் ஆறுமுகநவராஜ்

ஆன்லைன் வில்லங்கச் சான்று, நகல் மற்றும் திருமணச்சான்று போன்றவை ஆன்லைனில் விண்ணப்பம் செய்திருந்தாலும் உதவியாளர் முத்து அழகேசனிடம்  சென்று பணம் கொடுத்தால்தான் அதற்கான பணிகள் நடக்கும் என்ற நிலை உள்ளது. அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழலை கட்டுப்படுத்தடுத்தான் ஆன்லைன் முறையை கொண்டுவந்தது அரசு. அதிலும், இவர்கள் லஞ்ச வேட்டை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்று குற்றஞ்சாட்டுகிறார்.
 

இது, உண்மைதானா? என்பதை ஆராய பதிவுத்துறை தொடர்பான ஆவணத்தை தயார் செய்துகொண்டு நீலாங்கரை சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் நுழைந்தோம். சார் பதிவாளரிடம் கூட்டம் அதிகமாக இருந்ததால் உதவியாளர் முத்து அழகேசனின் டேபிளுக்கு சென்றோம். திருமணப்பதிவுகள் ஆன்லைனில் வந்துவிட்ட நிலையிலும் அவரிடம் பலர் நேரில் வந்து பதிவுசெய்துகொண்டிருந்தார்கள். நாம் தயாரித்த ஆவணத்தை காண்பித்து  ‘இந்த ஆவணத்தில் தடங்கல் இருக்கிறதா? இதன் கெய்டுலைன் வேல்யூ என்ன? என்று நாம் கேட்டபோது, “உதவியாளரை போய் பாருங்க” என்கிறார் ஒரிஜினல் உதவியாளர் முத்து அழகேசன். அதுவும் நாம், அவர் பெயர் என்ன? என்று கேட்டபோது, ‘கமல்’ என்றார். பக்கத்தில் வந்த பொதுமக்களில் ஒருவரோ,  “கமலக்கண்ணனை போயி பாருங்க” என்று தெள்ளத்தெளிவாக கூறி அனுப்புகிறார்கள்.
 

நாம், தேடிச்சென்றபோது அதே அலுவலகத்தில் கம்ப்யூட்டர்கள் புடைசூழ உட்கார்ந்திருக்கும் கமலக்கண்ணனை கை காட்டுகிறார்கள். அவரிடம், நமது ஆவணத்தைக் காண்பித்து அதேக்கேள்விகளை கேட்டபோது கம்ப்யூட்டரில் பரிசோதித்து பதில் சொல்கிறார். நாம், அதிர்ச்சியாகிப்போய், நம்மிடம் தகவல் சொன்னவரிடம் சொன்னபோது, “புரோக்கர்கள் திருந்திட்டாங்களா? லஞ்சம் கேட்கலையேன்னு நினைக்கிறீங்களா? இப்போ, உங்கக்கிட்ட காசு கேட்கமாட்டாங்க. ஒரிஜினல் டாக்குமெண்டோட போகும்போதுதான் கேட்பாங்க. அதுவும், அலுவலகத்துக்குள்ள வாங்கமாட்டாங்க. வெளியிலயே வாங்கிடுவாங்க” என்று அதிர்ச்சியூட்டுகிறார்.

 

sub registrar office

                                              பதிவுத்துறை துணைத் தலைவர் ஜனார்த்தனன்
 

கமலகண்ணன் என்பவர் அலுவலகத்திற்குள்ளேயே உட்கார்ந்திருக்கிறாரே யார்? என்று நாம் சார் பதிவாளர் ஆறுமுக நவராஜிடம் கேட்டபோது, “ஆள் பற்றாக்குறை சார். சும்மா வெளியில உட்கார்ந்து எடுபுடி வேலை செய்வான் சார்” என்றார். அதே, கேள்வியை உதவியாளர் முத்து அழகேசனிடம் கேட்டபோது, “கமலக்கண்ணன் டி.இ.ஓ.( டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்) வாக உள்ளார்” என்று சொல்லி அதிர்ச்சியடைய வைத்தார். காரணம், பாபு, பிரியா என்ற இரண்டு டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்கள் உள்ளனர். கமக்கண்ணனுக்கு ஒப்பந்த அடிப்படையில் கூட எந்தப்பணியும் அலுவலகத்தில் வழங்கப்படவில்லை.

 

rrrr

                               அரசு அலுவலக கணிப்பொறியில் புரோக்கர் கமலக்கண்ணன்
 

ஒரு அரசு அலுவலகத்தில் இப்படி அரசு ஊழியரைப்போலவே உட்கார்ந்திருக்கிறார் என்றால் எத்தனை எத்தனை பேர் அரசு அலுவலங்களில் உட்கார்ந்திருப்பார்கள்? இதுகுறித்து, பதிவுத்துறைத்தலைவர் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ். மற்றும் சென்னை மாவட்ட துணை பதிவுத்துறைத்தலைவர் ஜனார்த்தனனின் கவனத்துக்கு கொண்டுசென்றபோது,  உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார்கள்.
 

நக்கீரனின் சீக்ரெட் கேமராவில் சிக்கியவர்கள் இவர்கள்… இன்னும் சிக்காதவர்கள் தமிழகத்திலுள்ள அனைத்து வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் உலாவிக்கொண்டிருக்கிறார்கள் மக்களிடம் லஞ்சம் வாங்க!!!
 

 

 

Next Story

பத்திரப்பதிவு செய்ய மறுப்பு; இரவு நேரத்திலும் தர்ணாவில் ஈடுபட்ட குடும்பத்தினர் 

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
 registrar refused to register the deed,victims sat on struggle at night.

திருப்பத்தூர் மாவட்டம்  வாணியம்பாடி அடுத்த லாலா ஏரி பகுதியை சேர்ந்தவர் விவசாயி கண்ணன். இவருக்கு சொந்தமான 1.75 ஏக்கர் விவசாய நிலம் இந்திரா நகர் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை தன்னுடைய மகன் ஞானவேல் மற்றும் இறந்த மகன் மாது என்பவரின் மகள்களான தீபிகா, கோபிகா, இந்துமதி, தனிஷ்கா ஆகியோருக்குகான செட்டில்மென்ட் கொடுக்க பிப்ரவரி  மதியம் 12 மணி அளவில் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வருகை தந்து பத்திரப்பதிவு செய்ய அனைத்து ஆவணங்களை பதிவு அதிகாரியிடம் வழங்கியுள்ளார். பத்திரப்பதிவு செய்ய டோக்கனும் வழங்கப்பட்டு இருந்தது.

இரவு 9 மணி கடந்தும் பதிவு அதிகாரி பத்திரப்பதிவு செய்ய மறுத்தும் மீண்டும் நாளை வர சொல்லியதால் ஆத்திரமடைந்த கண்ணன் மற்றும் அவரது உறவினர்கள் சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு நேரத்தில் சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நகர போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் சார் பதிவாளர் ஆவணங்களை சரி பார்த்து பத்திரப்பதிவு செய்ய சம்மதம் தெரிவித்ததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

லஞ்சம் தந்தால் உடனடியாக பத்திரப்பதிவு செய்வதும் லஞ்சம் குறைவாக தருபவர்களின் பத்திரத்தை தாமதப்படுத்துவதும் மறுநாள் பத்திரப்பதிவு செய்வதாகவும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் தொடர்ச்சியாக மக்களை அலைய விடுகின்றனர். பேரத்தை அதிகப்படுத்தி லஞ்சம் வாங்குவதற்கான வழியாக இதை செய்கின்றனர் எனக் குற்றம் சாட்டப்படுகிறது. பசியோடு சுமார் பத்து மணி நேரம் காத்திருந்து குடும்பத்தார் பதிவு செய்ய மீண்டும் நாளை வரச் சொன்னதால் அதிருப்தி அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய பின்பு சமாதானம் செய்து பின்னர் பத்திரப்பதிவு செய்துள்ளனர்

Next Story

ஒரே நாளில் ரூ.168.83 கோடி வருவாய் ஈட்டிய பதிவுத்துறை!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
The registration department earned a revenue of Rs.168.83 crore in a single day

பொங்கலை ஒட்டிய விடுமுறை நாட்கள் முடிந்து அடுத்த வேலை நாளான 18.01.2024 முதல் 31.01.2024 வரையிலான காலத்தில் அனைத்து வேலை நாட்களிலும் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதலாகப் பதிவு டோக்கன்கள் வழங்குமாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 டோக்கன்களும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 டோக்கன்களும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் 12 தட்கல் டோக்கன்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்பட்டும்  ஆவணப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பதிவுத்துறையின் ஆவணப் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ தை பொங்கலுக்கு பின்வரும் நாட்களில் பதிவுத்துறையில் அதிக பதிவுகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் 31.01.2024 வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதலான டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் நேற்றைய தினம் மட்டும் அதாவது 22.01.2024 அன்று மட்டும் 21,004 ஆவணங்கள் பதியப்பட்டது.

அதன் மூலம் அரசுக்கு 168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. புதிய கூட்டு மதிப்பின் அடிப்படையின் கீழ் 22.01.2024 அன்று சென்னையில் பதியப்பட்ட 137 அடுக்குமாடி குடியிருப்பு பதிவுகளும் அதன்மூலம் பெறப்பட்ட ரூபாய் 12 கோடி வருவாயும் இதில் அடங்கும். இனி வரும் நாட்களிலும் பதிவுகள் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.