Skip to main content

குண்டர்களை ஏவி விவசாயி உயிரைக் கொன்ற எஸ்பிஐ வங்கி!

Published on 07/11/2017 | Edited on 07/11/2017
குண்டர்களை ஏவி விவசாயி உயிரைக் கொன்ற எஸ்பிஐ வங்கி! 

 ல கோடிக்கணக்கான கடன் பாக்கி வைத்துள்ள விஜய் மல்லையா  கைது செய்யப்பட்டு உடனே விடுவிக்கப்படும்பொழுது, மூன்று லட்சம் ரூபாய்க்காக ஒரு விவசாயி உயிரை பறிப்பது எந்த விதத்தில் நியாயம்... மேலும், தனியார் வங்கிகளைப்போல தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும் அடியாட்களை வைத்து வசூல் செய்யலாமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், போந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஞானசேகரன். வயது 56. இந்திரா என்ற மனைவியும், மங்கையர்க்கரசி,  மணிமேகலை என்ற  மகள்களும், சுதாகர் என்ற மகனும் உள்ளனர். இவருக்கு சொந்தமாக 20 ஏக்கர் நிலம் போந்தை கிராமத்தில் உள்ளது. தனது நிலத்தில் ஒரு பகுதியை சாத்தனூர் எஸ்.பி.ஐ. வங்கியில் அடகு வைத்து 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் டிராக்டர் கடன் வாங்கினார். இந்த கடனில் ஒன்றே முக்கால் லட்சம் செலுத்தியுள்ளார். மீதி தவணைக்கான தொகை நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக சரியாக மழை இல்லாத காரணத்தினால் தவணையை ஞானசேகரனால் செலுத்த முடியவில்லை. வங்கியில் இருந்து இவரை அழைத்து கடனை கட்டச் சொல்லி கேட்டுள்ளனர். இவரும், தற்போதுதான் மழை பெய்துள்ளது. நெல் அறுவடை செய்த பின்னர் கடனை செலுத்துகிறேன் அல்லது பன்னாரி சர்க்கரை ஆலையில் கரும்பு பாக்கித் தொகை ரூபாய் 3,50,000 வர வேண்டியுள்ளது. அதற்கான காசோலை வந்தாலும், உங்கள் வங்கியில்தான் எடுக்க முடியும். ஆகவே உங்கள் கடனை செலுத்தி விடுகிறேன் என்று வங்கி மேலாளரிடம் தெரிவித்துள்ளார்.


ஞானசேகரன் 

இந்த நிலையில் 4ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு போந்தையில் உள்ள ஞானசேகரனின் வீட்டுக்கு இருவர் TN09 DF4903 என்ற இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் வீட்டில் இருந்த ஞானசேகரனின் மகன் சுதாகரிடம், நாங்கள் வங்கியில் இருந்து வருகிறோம். வங்கிக்கு கடனை செலுத்தாததால் டிராக்கடரை பறிமுதல் செய்ய வந்துள்ளோம் என கூறியுள்ளனர். அவரும் இந்த தகவலை தனது தகப்பனார் ஞானசேகரனிடம் செல்போன் மூலம் கூறியுள்ளார்.

வெளியூரில் இருந்த ஞானசேகரன், தனது நண்பர் மூர்த்தியுடன் உடனடியாக வீட்டுக்கு வந்துள்ளார். வந்தவர் வங்கியில் இருந்து வந்தவர்களிடம் அவர்களது பெயரை கேட்டுள்ளார். ராஜா, வேங்கடபதி என பெயரை கூறியவர்களின் அடையாள அட்டையை கேட்டபோது, டிரைவிங் லைசென்ஸ்ஸை காட்டியுள்ளனர். ட்ராக்டர் பறிமுதல் செய்ய வந்ததற்கான ஆதாரத்தை  கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆதாரங்களை அவர்கள் காட்டாததால், உங்களை வங்கி ஆட்கள் என எப்படி நம்புவது என ஞானசேகரன் கேட்க, இருதரப்புக்கும் வாக்குவாதம் ஆகியுள்ளது. நீங்கள் வண்டியை எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் வங்கியில் இருந்தோ, காவல் நிலையத்தில் இருந்தோ அதிகாரிகளை வரவழைத்து வண்டியை எடுத்துச் செல்லுங்கள், இல்லையேல் வண்டியை எடுக்க அனுமதிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.



கடனில் வாங்கப்பட்ட ட்ராக்டர்

உடனே கோபமான வங்கி ஏஜெண்டுகள் இருவரும், ட்ராக்டர் மீது ஏறி அமர்ந்தனர். ட்ராக்டரை எடுத்துச் செல்வோம் உன்னால் முடிந்ததை பார் என கூறியுள்ளனர். என் ட்ராக்டர் மேலே ஏறக்கூடாது என அவர்களின் கையை பிடித்து கீழே இறக்கினார் ஞானசேகரன். இதில் இருதரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. உடனே வங்கி ஏஜெண்டுகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

மதியம் வாக்கில் ஞானசேகரன் தனது நண்பருடன் வாணியம்பாடி செல்லப் புறப்பட்டபோது, அவரையும் நண்பரையும் இடைமறித்த வங்கி ஏஜெண்டுகள் ஞானசேகரனை கடுமையாக தாக்கினர். இதில் வலி தாங்காமல் அலறிய ஞானசேகரன் கீழே விழுந்தார். அவருடைய கூச்சல் கேட்டு மகன் சுதாகர் ஓடிவந்தார். பின்னர் ஞானசேகரன் வாணியம்பாடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இரவு 9 மணி அளவில் சிகிச்சை பலனின்றி ஞானசேகரன் உயிரிழந்தார்.

4 ஆம் தேதி ஞானசேகரன் இறந்த நிலையில், தாணிப்பாடி காவல்நிலையத்தில் மறுநாள் 5 ஆம் தேதி காலை ஞானசேகரன் மற்றும் அவரது மகன் சுதாகர் உள்ளிட்ட சிலர்மீது வசூல் ஏஜெண்டு ராஜா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் ராஜா, தன்னை ஞானசேகரன் தாக்கியதாக கூறி உள்நோயாளியாக சேர்ந்துள்ளார். வேங்கடபதியோ தலைமறைவாக இருக்கிறார்.



ஞானசேகரனின் வீடு

இந்த சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் மதியரசனிடம் கேட்டபோது, நான் பிறகு பேசுகிறேன் என கூறிவிட்டார். 

வங்கி மேலாளர் ஜெயராஜை தொடர்பு கொண்டபோது, உங்களுக்கு தேவையான விவரங்களை வங்கி தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மற்றபடி எந்த பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுக்க எனக்கு அனுமதியில்லை என்றார்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் மாநில கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர். பாண்டியனிடம் கேட்டபோது...,

"எஸ்.பி.ஐ. நேரடியாக வசூல் செய்யும் பொறுப்பை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் கொடுத்துள்ளது. அந்த நிறுவனம் வசூல் என்ற பெயரில் அடியாட்களை அனுப்புகிறது. சென்ற ஆண்டு வறட்சி, இந்த ஆண்டு வறட்சி. தற்போது விவசாயப் பணி நடக்கும் நேரத்தில் ட்ராக்டரை எப்படி பறிமுதல் செய்ய போகலாம். திட்டமிட்டு விவசாயிகளை அரசாங்கம் பழி வாங்குகிறது. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் கொள்கை முடிவில் இருந்து வருவதுதான். தமிழக அரசு எப்போதோ செயலிழந்துவிட்டது. யாரை அடித்தாலும், யாரை கொன்றாலும் தமிழக முதல் அமைச்சர் கவலைப்படபோவதில்லை. முதல் அமைச்சரை நேரில் சந்தித்து கடன் வசூலை நிறுத்தி வையுங்கள் என்று சொல்லியிருக்கிறோம். ஆனால் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



ஞானசேகரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் பி.ஆர்.பாண்டியன்

கரும்பு நிலுவைத் தொகையையே விவசாயிகளுக்கு வழங்கவில்லை. அப்படி வழங்கியிருந்தால்கூட ஞானசேகரன் டிராக்டருக்கான கடனை அடைத்திருப்பார். கடன் வசூல் என்ற பெயரில் அச்சுறுத்தியுள்ளனர். ஞானசேகரன் உயிரிழப்புக்கு காரணம் மத்திய, மாநில அரசுகள் மற்றும் எஸ்.பி.ஐ. மூன்றும்தான். வங்கி மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஞானசேகரன் இறந்த பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது காவல்துறை. காவல்துறை மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். இந்த விசயத்தில் கோர்ட் தலையிட்டு சொன்னபிறகுதான் வழக்கில் இருந்து ஞானசேகரன் பெயரை நீக்க முடியும் என்று கலெக்டர் கூறுகிறார். ஞானசேகரன் மகன் மீது எதற்காக வழக்கு போட வேண்டும். கடனை வசூலிக்க இவர்கள் யார். விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினால் குண்டர் சட்டம் பாய்கிறது வளர்மதி மீது. பிணத்தின் மீது வழக்கு போடுவது உலகத்தில் எங்கும் கிடையாது. பிணம் தின்னி காவல்துறையாக உள்ளது. அடாவடியாக வங்கிக் கடன் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆர்பிஐயிடம் மனு கொடுத்தும் இந்த செயல் நீடிக்கிறது" என்றார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலகிருஷ்ணன் நம்மிடம் பேசும்போது,

"வங்கியிடம் வாங்கிய கடனை முறையாக திரும்ப செலுத்த வேண்டும் என்றுதான் விவசாயிகள் நினைக்கின்றனர். எந்த ஒரு விவசாயியும் வங்கி கடனை ஏமாற்ற வேண்டும் என்று நினைப்பது கிடையாது. இறந்துபோன ஞானசேகரன் ஒன்றே முக்கால் லட்சம் திருப்பி செலுத்தியிருக்கிறார். மீதிப் பணத்தை கட்டுவதற்குள் கடந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பொய்த்துப்போனது. விவசாயமே பொய்த்துப்போனதால் ட்ராக்டர் வைத்து எந்த வருமானமும் இல்லை. அதை புரிந்து கொண்டு வங்கி அதிகாரிகள் கடனை செலுத்த அவகாசம் அளித்திருக்கலாம். 

அதற்கு மாறாக வசூல் ஏஜெண்ட் என்கிற பெயரில் அடியாட்களை அனுப்பி ட்ராக்டரை எடுத்து வர சொல்கிறார்கள். கடன் பாக்கிக்காக எந்த விவசாயியையும் மிரட்டக் கூடாது, சட்டத்திற்கு புறம்பான வழிகளை கடைப்பிடிக்கக் கூடாது, வசூல் ஏஜெண்ட் என்ற பெயரில் விவசாயிகளை மிரட்டக் கூடாது, சட்டப்படி கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்கலாம் என்று மிகத் தெளிவாக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதையும் மீறி வங்கி அதிகாரிகள் இப்படி செய்வது சரியில்லை.



ஞானசேகரனின் குடும்பத்தினர் மற்றும் விவசாயிகளிடம் சமாதானப் 
பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறை உயர் அதிகாரிகள்

ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது இந்த பிரச்சனைகளை சட்டமன்றத்தில் எழுப்பினோம். அப்போது ஜெயலலிதா, இதுபோன்ற நடவடிக்கைகளை அனுமதிக்க மாட்டோம் என்று வாக்குறுதி அளித்தார். சுப்ரீம் கோர்ட், மாநில அரசு சொல்லியும் வங்கி அதிகாரிகள் இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் ஞானசேகரன் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்று ட்ராக்டரை எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர். 

இந்த விவகாரத்தில் ஞானசேகரனை தாக்கியதால்தான் அவர் உயிரிழந்தார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஆகையால் கொலை வழக்காக மாற்றக்கோரி கேட்டோம். சரி மாத்துகிறோம் என மாவட்ட எஸ்.பி. கூறினார். 3 லட்சம் ரூபாய்க்காக ஒரு விவசாயின் உயிரை பறிப்பது எந்த விதத்தில் நியாயம். வங்கி மேலாளரையும் வழக்கில் சேர்க்கக் கோரினோம். சேர்ப்பதாக எஸ்.பி. வாக்குறுதி அளித்துள்ளார். 

பொதுவாக தனியார் வங்கிகள்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். ஆனால் இந்த முறை எஸ்,பி.ஐ. வங்கியே இதுபோன்ற செயலில் ஈடுபடுவது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு அரசு அதிகாரியே அடியாட்களை வைத்து கடன் வசூல் செய்வது நியாயமில்லை. தமிழ்நாட்டில் இதுவே கடைசி சம்பவமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டோம். விவசாயி கடன் வைத்துள்ளதற்காக வீடு தேடி போய் மிரட்டும் சம்பவம் இனி நடக்கக் கூடாது. இனி எந்த ஒரு இடத்திலேயும் இதுபோன்று நடக்காமல் அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி நடந்தால் சட்டம் - ஓழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும்." என்றார்.

-ராஜா 
வே.ராஜவேல்

சார்ந்த செய்திகள்