Skip to main content

சசிகலாவின் விடுதலை சாத்தியமா? சந்தேகம் கிளப்பும் வழக்கறிஞர்கள்! 

Published on 07/08/2020 | Edited on 08/08/2020

 

sasikala

 

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா முன்விடுதலை ஆவார் எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், கர்நாடக அரசின் உள்துறைச் செயலாளராக ரூபா ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டிருக்கும் விவகாரம் சசிகலா குடும்பத்தினரை கவலையடைய வைத்திருக்கிறது. சசிகலாவிடம் பேசுவதற்காக அவரது குடும்பத்தினர் எடுத்த முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்துள்ளன.

                                

சிறையில் சொகுசாக இருப்பதற்காகவும், தேவைப்படும் நேரத்தில் ரகசியமாக ஷாப்பிங் சென்று வருவதற்கும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கர்நாடக சிறைத்துறையின் டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா ஐ.பி.எஸ். அதிரடி குற்றச்சாட்டுகளைக் கிளப்பியிருந்தார். இதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட, சசிகலாவின் 2 கோடி விவகாரம் தேசிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது.

                              

இது குறித்து விசாரணைக் கமிஷனை அமைத்தது கர்நாடக அரசு. அதேசமயம், ரூபாவுக்கு ஐ.ஜி. பதவி உயர்வு அளிக்கப்பட்டு ரயில்வே துறைக்கு மாற்றப்பட்டார். இதனால் சசிகலா மீதான குற்றச்சாட்டு அமுங்கி கிடந்தது. இதற்கிடையே விசாரணை கமிசனின் ரிப்போர்ட் சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக அரசிடம் ஒபடைக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

           

sasikala release issue - Lawyers - Bengaluru

               

இந்த நிலையில், கர்நாடக அரசின் உள்துறைச் செயலாளராக ரூபாவை கடந்த வாரம் நியமித்திருக்கிறார் முதல்வர் எடியூரப்பா. டெல்லியில் இருந்து வந்த உத்தரவின் படியே ரூபாவின் நியமனம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. சசிகலா முன்விடுதலை ஆவார் என அவரது வழக்கறிஞர்களும், குடும்பத்தினரும் சொல்லி வந்த நிலையில், ரூபாவின் நியமனம் சசியின் விடுதலைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

                       

சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை காலம் 2021, பிப்ரவரி 14-ஆம் தேதி முடிவடைகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் 21 நாட்கள் சிறையில் இருந்துள்ளதால் அந்த நாட்கள் மட்டும் கழிக்கப்பட்டு ஜனவரி 26-இல் அவர் விடுதலை ஆகலாம் எனச் சொல்லப்பட்டது. ஆனால், அவர் மீதுள்ள லஞ்ச குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நன்னடத்தை மீறியதற்காக சில மாதங்கள் அவருக்கு தண்டனை கூடுதலாக்கப்படும் என்கிறார்கள்.

                     

சசிகலாவின் மீது லஞ்ச குற்றசாட்டினை கூறியவர் ரூபா. காவல் துறையையும் சிறைத்துறையையும் உள்துறையின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அந்த உள்துறையின் உயரதிகாரியாக ரூபாவே இருப்பதால், சசிகலாவுக்கு எதிரான தனது முந்தைய குற்றச்சாட்டை இல்லை என மறுத்துப்பேசிட முடியாது. அதனால் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப்படும் வகையில்தான் விசாரணை கமிசனின் அறிக்கை இருக்கும் எனச் சந்தேகம் கிளப்புகிறார்கள் அ.தி.மு.க. வழக்கறிஞர்கள். மேலும், சசிகலாவின் விடுதலையை முடக்க நிறைய அரசியல் விவகாரங்கள் மறைமுகமாக நடப்பதாகவும், இதனால் சசிகலாவின் சட்டரீதியிலான விடுதலை கூட கேள்விக்குறியாகும் என்றும் வழக்கறிஞர்ககள் மத்தியில் எதிரொலிக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்