Skip to main content

சேலம்: இரண்டு ஆண்டாக இருளில் மூழ்கிக் கிடக்கும் குள்ளம்பட்டி கிராமம்! ஊரைவிட்டு ஓடும் மக்கள்!!

Published on 06/10/2018 | Edited on 06/10/2018
kullampatti village


 

சேலம் அருகே, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தெருவிளக்கு வசதி இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடக்கிறது குள்ளம்பட்டி கிராமம். 
 

சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது குள்ளம்பட்டி குக்கிராமம். நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. பெரும்பாலும் விவசாயக்கூலிகளும், கட்டடத் தொழிலாளர்களும் வசிக்கின்றனர். சேலம் மாநகரில் பல இடங்களில், பல நேரங்களில் காலை 10 மணி ஆனாலும் அணைக்கப்படாமல் காட்சி அளிக்கும் தெருவிளக்குகள் இருக்கும் நிலையில், குள்ளம்பட்டி கிராமமோ இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தெருவிளக்கு வசதியின்றி இருளில் மூழ்கிக் கிடக்கிறது.
 

தெருவிளக்கு வசதி செய்து தரும்படி அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அந்த கிராம மக்கள் படையெடுக்காத நாளில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஊஹூம்.... இதுவரை தீர்வு கிடைத்தபாடில்லை. இதுமட்டுமே பிரச்னை அல்ல என்கிறார்கள், அந்த கிராம மக்கள். 

 

kullampatti village


 

ரமேஷ், மணிகண்டன், செல்வராஜ், மணி ஆகியோர் கூறுகையில், ''இந்த ஊருக்குள் எட்டு இடங்களில் தெருவிளக்கு மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் இப்போது ஒரே ஒரு கம்பத்தில்தான் மின்விளக்கு எரியும். மற்ற  கம்பங்களில் தெருவிளக்கு போடப்படாததால், நாங்கள் இருளில்தான் இருக்கிறோம். இருட்டுக்குள் எத்தனை நாள்கள்தான் அவஸ்தைப்பட முடியும்? அதனால்தான் பல குடும்பங்கள் இங்கிருந்து வெளிச்சத்தை தேடி நகரப்பகுதிக்கும், சில குடும்பங்கள் அவர்களின் தோட்டங்களிலும் வீடு கட்டிக்கொண்டு இடம்பெயர்ந்துவிட்டன.
 

தெருவிளக்கு வசதி கேட்டு பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் புகார் மனு அளித்தும், ஒன்றிய அலுவலகத்தில் நேரில் போய் சொல்லியும்கூட இதுவரை தீர்வு காணப்படவில்லை. கடைசியாக ஆகஸ்ட் 15, 2018ம் தேதி நடந்த கிராமசபைக் கூட்டத்திலும் இதுகுறித்து தீர்மானம் கொண்டு வந்தோம். இப்போது அக்டோபர் 2ம் தேதியன்று கிராமசபைக் கூட்டத்திலும் அதே பிரச்னையைப் பேசினோம். அரசுப்பார்வையாளராக கலந்து கொண்ட அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய உதவியாளர் வடிவேல், எங்கள் பிரச்னையை காது கொடுத்துக் கேட்காமலேயே ஓட்டம் பிடித்து விட்டார். 
 

ஊருக்கு மத்தியில் பொதுக்கழிப்பறை கட்டிக் கொடுத்திருக்கின்றனர். தூய்மை இந்தியா என்றும், திறந்தவெளியில் மலம் கழிக்கக்கூடாது என்றும் கலெக்டரம்மாவும் பிரச்சாரம் செய்கிறார். ஆனால், பல ஆண்டுகளாக இந்தக் கழிப்பறை பூட்டியே கிடக்கிறது. மற்றோர் இடத்தில் உள்ள பொதுக்கழிப்பறை பயன்படுத்தாமலேயே போனதால் இப்போது புதர் மண்டிக்கிடக்கிறது. அந்த இடத்தில் சமூக விரோதிகள் மது அருந்துகின்றனர். 


 

kullampatti village


 

தண்ணீர் வசதிக்காக மேல்நிலை நீர்த்தொட்டி கட்டிக்கொடுத்தனர். ஆனால் மேடான பகுதியில் குடியிருப்புகள் இருப்பதால் தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டாலும், குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. காற்று மட்டும்தான் வருகிறது. அதனால் அந்த தண்ணீர் தொட்டியும் இப்போது சும்மாதான் இருக்கிறது. நாங்கள் குடிநீருக்காக தினமும் நாலஞ்சு தெரு கடந்து சென்று அங்குள்ள பொதுக்குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் பிடித்துக் கொள்கிறோம். எந்தவித முன்யோசனையுமின்றி தண்ணீர் தொட்டி கட்டப்பட்டதால் மக்களின் வரிப்பணம்தான் விரயமானது,'' என்கிறார்கள்.
 

தெருவிளக்கு வசதி இல்லாததால், குள்ளம்பட்டி கிராம மக்கள் தெருக்களில் தீப்பந்தம் ஏற்றி வைத்து பயன்படுத்துகின்றனர். அதாவது கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய மனிதர்களைப்போல அவர்களின் வாழ்க்கைமுறை மாறிக்கிடக்கிறது. அதேநேரம் வீடுகளில் மின்வசதி இருக்கிறது. தெருக்களில் கும்மிருட்டு நிலவுவதால் இரவு ஆறு மணி ஆனாலே எல்லோரும் வீடுகளில் அடைந்து கொள்கின்றனர்.
 

பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் இருப்பதால் இரவில் தெருவில் நடக்கவே அச்சப்படுகின்றனர். அதனாலேயே அவர்கள் தீப்பந்தம் கொளுத்தி பயன்படுத்தி வருவதாகவும் கூறினர்.

 

kullampatti village


 

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, கந்தசாமி மனைவி முத்தம்மா என்ற மூதாட்டியிடம் சிலர், அவர் வீட்டில் தனிநபர் கழிப்பறை கட்டுவதற்காக அரசு வழங்கும் மானியத்தொகை 12 ஆயிரம் ரூபாய் பெற்றுத்தருவதாகக் கூறி, அவரிடம் இருந்து 2500 ரூபாய் வசூலித்துவிட்டு ஏமாற்றியுள்ளனர். அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கிளர்க் ஒருவர் தன்னிடம் பணம் பெற்றதாகச் சொன்னார்.
 

இதற்காக அவர் தான் அணிந்திருந்த தோட்டை அடகு வைத்து, அந்தப் பணத்தைக் கொடுத்துள்ளார். தன் வீட்டில் கழிப்பறை வந்து விடும் என்ற நம்பிக்கையில் குழி தோண்டி வைத்ததுதான் மிச்சம். இன்னும் கழிப்பறையைத்தான் காணவில்லை என்றும் புலம்பினார். 
 

தெருவிளக்கு பிரச்னை குறித்து அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தரப்பில் விசாரித்தபோது, ''குள்ளம்பட்டி கிராமத்தில் மின்கம்பங்களில் பல்புகளை பொருத்தினால், மர்ம நபர்கள் கல்லால் அடித்து உடைத்து வி டுகின்றனர். இதுபோல் பலமுறை நடந்துள்ளது. அதனால்தான் அந்த கிராமத்தை அப்படியே விட்டுவிட்டோம்,'' என்றார் கொஞ்சமும் குற்ற உணர்வின்றி.
 

நாமெல்லாம் 21ம் நூற்றாண்டில்தான் இருக்கிறோமா என்பதே சந்தேகம்தான்.

 

 


 

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.