Skip to main content

சச்சினுக்கு கிரிக்கெட்டின் ABCD சொல்லி தந்தவர்!

Published on 03/01/2019 | Edited on 03/01/2019
achrekar


உலக கிரிக்கெட் வரலாற்றில் பேட்டிங் சாதனைகளை புரட்டிப் பார்த்தால் அதில்சச்சின்.. சச்சின்.. சச்சின்.. என்ற மந்திரப் பெயரே ஆதிக்கம் செலுத்தும். இன்று விராத் கோலி பல சாதனைகளை படைக்கலாம். அதற்கான விதைகளை விதைத்தவர் சச்சின்தான். அன்றைய காலகட்டங்களில் ஒரு அணி 300 ரன்கள் எடுப்பதும்,வீரர்கள் சதம் அடிப்பதும் அரிதான நிகழ்வுகள். ஆனால் அப்படிப்பட்ட காலங்களில் ஒரு வீரர் மட்டும் சர்வ சாதாரணமாக சதங்களை விளாசுவார். அவர் கிரிக்கெட் விளையாட்டை உலகம் முழுவதும் அதிகம் பிரபலபடுத்தியவர். ஆம்,  சந்தேகத்திற்கு இடமில்லாமல் சச்சின் டெண்டுல்கர்தான் கிரிக்கெட் விளையாடியவர்களில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். இது பலராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. ஆனால் அவருடைய அதிசய, மாய திறமையைப் பற்றி பலரும் அறியப்படாமல் இருந்தபோது, அதை வெளிக்கொண்டு வந்த பெருமை ராமாகந்த் அச்ரேகரையே சேரும்.
 

சச்சினின் சகோதரர் அஜித் டெண்டுல்கர் 11 வயதில் மும்பையைச் சேர்ந்த அச்ரேகரிடம் அழைத்து சென்றார். அது அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனை என்று சச்சின் கூறியுள்ளார். சிவாஜி பார்க் மைதானத்தில் அச்ரேகரின் கிரிக்கெட் பயிற்சியின் மூலம் தன் கிரிக்கெட் வாழ்வை உருவாக்கிக் கொண்டார் சச்சின். 1980-களில் அச்ரேகர், டெண்டுல்கருக்கு பயிற்சி அளித்தார். பள்ளி முடிந்த பிறகு, அச்சிரேக்கரின் ஸ்கூட்டரில் சச்சின் செல்வார். இந்த ஜோடி முடிந்தவரை பல போட்டிகளில் விளையாடுவதற்கு மும்பை முழுவதும் பயணம் செய்யும்.

 


அச்சரேகர், சச்சின் டெண்டுல்கரின் திறமையை அடையாளம் கண்டு, வரலாற்றில் மிக பிரபலமான கிரிக்கெட் விளையாட்டு நட்சத்திரத்தை இந்தியாவுக்குக் கொடுத்தார். சச்சின் டெண்டுல்கர் என்ன செய்ய முடியும் என்பதை அறிந்த அச்ரேகர், 1993-ல் வினோத் காம்ப்ளி மற்றும் பிரவீன் அம்ரே ஆகியோரை விட சச்சின் மிகவும் திறமை வாய்ந்தவர் என்று கூறினார்.
 

டெண்டுல்கர் எப்போதுமே தனது பயிற்சியாளருக்கு மிகுந்த மரியாதை காட்டியுள்ளார். அவரை புகழ்வதற்கு கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் மிகவும் சரியாக பயன்படுத்திக் கொள்வார். அச்சரேகர் சார் சில நேரங்களில் கடுமையானவராகவும், மிகவும் கண்டிப்பானவராகவும் இருந்தார். ஆனால் அக்கறையுடனும், அன்புடனும் இருந்தார். 
 

sachin achrekar


பயிற்சியாளர்கள் பெற்றோரைப் போலவே இருக்கிறார்கள். ஏனெனில் அவர்களுடன் அதிக நேரம் செலவழிப்பதால், அவர்களிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறோம். அச்சரேகர் சார் நான் நன்றாக விளையாடினேன் என்று சொல்லியது இல்லை. ஆனால், சார் எப்போதெல்லாம் என்னை பாணிப்பூரி சாப்பிட அழைத்து செல்கிறாரோ, அப்போது அன்று நான் நன்றாக விளையாடி இருக்கிறேன் என்று அர்த்தம் என இந்த வருடம் நடந்த ஒரு விழாவில் சச்சின் தனது பயிற்சியாளரை பற்றி பெருமையாக கூறியிருந்தார்.
 

"சொர்க்கத்தில் கிரிக்கெட் தனது இருப்பைச் செம்மைப்படுத்தி, அச்ரேகர் சாரின் முன்னிலையில் கிரிக்கெட் தன்னை செதுக்கிக் கொள்ளும். அவரது பல மாணவர்களைப் போலவே, கிரிக்கெட்டின் ABCD-களைநான் அவரிடம் கற்றுக் கொண்டேன். என் வாழ்வில் அவரது பங்களிப்பு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அவர் ஏற்படுத்திகொடுத்த அடித்தளத்தில்தான் இன்று நான் நிற்கிறேன்." என்று சச்சின் குறிப்பிட்டுள்ளார்.
 

பத்ம ஸ்ரீ மற்றும் துரோணாச்சார்யா விருதுகளை ராமாகந்த் அச்ரேகர் பெற்றுள்ளார்.டெண்டுல்கர் தவிர, வினோத் காம்ப்ளி, அஜித் அகர்கர், பிரவின் அம்ரே, சமீர் டிஹே, பல்விந்தர் சிங் சந்து உள்ளிட்ட முக்கிய இந்திய வீரர்களுக்கு பயிற்சியளித்துள்ளார் ராமாகந்த் அச்ரேகர்.
 

அவரின் மறைவு பெரிய இழப்பாக கருதப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடி வருகின்றனர். நேரிலும், சமூகவலைதளங்களிலும் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 

 

 

Next Story

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய அணி அறிவிப்பு!

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Test series against England; Indian team announcement

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இதில் முதல் 2 போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி ரோஹித் ஷர்மா தலைமையிலான டெஸ்ட் அணியில் சுப்மன் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Next Story

தோனியின் அடையாளம் இனி யாருக்கும் கிடையாது.. என்ன செய்திருக்கிறது பி.சி.சி.ஐ?

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
No one knows Dhoni's identity anymore.. What has BCCI done?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 1998ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். தொடக்க காலத்தில் ரயில்வேயில் டிடிஆர் ஆக பணியாற்றிய தோனி, பிறகு கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். ஆரம்பத்தில் தோல்வியை மட்டும் சந்தித்த தோனி, அடுத்தடுத்த ஆட்டங்களில் விளையாடி தனது கடும் உழைப்பால் இந்திய அணியின் கேப்டன் வரை வளர்ந்தார். 

கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு, 28 ஆண்டுகளுக்கு பிறகு, தோனி தலைமையிலான இந்திய அணி 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்றியது. அதுமட்டுமின்றி, 2007 டி20 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய உலகக்கோப்பைகளையும் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றிருக்கிறது. அதன் காரணமாகவே, தோனிக்கு இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், ‘கூல் கேப்டன்’, ‘பெஸ்ட் ஃபினிஸர்’ எனவும் ரசிகர்கள் மத்தியில் இவர் அழைக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடிய தோனி, கேப்டனாக தலைமையேற்று 4 கோப்பைகளை பெற்று கொடுத்துள்ளார். மேலும், பல தொடர்களில் இந்திய அணிக்காக வெற்றிகளை வாரி வழங்கியுள்ளார். கிரிக்கெட்டில் அறிமுகமான நாள் முதலே தோனி ஜெர்ஸி எண் 7ஐ அணிந்து விளையாடி வந்தார். தோனி பிரபலமடைந்ததைப் போல, அவருடைய ஜெர்ஸி எண்ணும் பிரபலமடைந்தது. தோனியின் ஜெர்ஸி நம்பரான ‘7’ ரசிகர்களிடையே உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் கொண்டிருந்தது. இதனையடுத்து, பல சாதனைகளை படைத்த தோனி, கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

சர்வதேச போட்டிகளில் தோனி ஓய்வு பெற்றிருந்த போதிலும், அவருடைய ஜெர்ஸி நம்பரான 7 இதுவரை எந்த வீரருக்கு அளிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், தோனியின் ஜெர்ஸி நம்பர் ‘7’க்கு ஓய்வு அளித்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட்டிற்கு, முன்னாள் கேப்டன் தோனி அளித்துள்ள பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த அறிவிப்பின் மூலம், ‘7’ஆம் நம்பர் பொறித்த ஜெர்ஸியை இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் இனி பயன்படுத்த முடியாது. இதற்கு முன்னதாக முன்னாள், கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில், அவரது 10ஆம் நம்பர் ஜெர்ஸிக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பிசிசிஐ ஓய்வு அளிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.