Skip to main content

பாஜகவின் பிரச்சார பீரங்கி ஆனார் ஆளுநர் ரவி; அரசியல் மேடை ஆனது பெரியார் பல்கலை!!    

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

 RN Ravi spoke  support of BJP at Periyar University graduation ceremony

 

'ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்திற்கு ஆளுநரும் எதற்கு' என சுயாட்சி பேசும் மாநிலங்கள் முழங்கி வரும் வேளையில், சேலம்  பெரியார் பல்கலைக்கழகத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மக்களவை தேர்தலையொட்டி பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தை  மறைமுகமாகத் தொடங்கி விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.     

 

புது டில்லியில் கடந்த செப்டம்பர் திங்களில், 18வது ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தியது. அந்த மாநாட்டில் பேசப்பட்ட  சங்கதிகள் குறித்து, 'ஜி20 முன்னோக்கு பகுப்பாய்வு' என்ற தலைப்பில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நவம்பர் 23 ஆம் தேதி கருத்தரங்கம்  நடந்தது. ஏற்கனவே, துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் உள்ள நிர்வாகிகள் சங்கப்பரிவாரங்களுக்கு ஆதரவு மனநிலையில், பல்கலைக்கழகத்தையே மாற்றி வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. 

 

இந்நிலையில்தான் ஆளுநர் வருகையையொட்டி,  அனைத்து ஆசிரியர்கள், மாணவர்களும் கண்டிப்பாக கருத்தரங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளது பல்கலை  நிர்வாகம். இதனால் பல்கலையில் பணியாற்றி வரும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கருத்தரங்கில் வேறு வழியின்றி கலந்து கொண்டனர். பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் நடந்த இந்த கருத்தரங்கில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்புரை ஆற்றினார். 

 

 RN Ravi spoke  support of BJP at Periyar University graduation ceremony

 

அவர் பேசுகையில், “வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசிக்கும் பெண்களுக்கு மத்திய அரசு, உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு  வழங்கியுள்ளது. அதேபோல், பெண்களை தொழில்முனைவோராக்கும் நோக்கில்  முத்ரா திட்டத்தில் கடனுதவி வழங்கி வருகிறது. இத்திட்டங்களால் பெண்கள் பொருளாதாரம் மேம்படுகிறது. அவர்கள் அதிகாரம் பெற்றவர்களாக ஆகிறார்கள்” என்றார் ஆளுநர். மேலும் அவர் பேசுகையில், “இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. 2040 ஆம் ஆண்டுக்குள் உலகளவில் இந்தியா மூன்றாவது  பெரிய பொருளாதார சக்தி மிக்க நாடு என்ற உயரத்தை எட்டும். வங்கிக் கணக்கு இல்லாத அனைவருக்கும் 'ஜீரோ பேலன்ஸ்' கணக்கில் 'ஜன் தன்' திட்டத்தின் கீழ், மத்திய அரசு வங்கிக் கணக்கு தொடங்கி  உள்ளது. 'பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ' எனப்படும் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், 'ஸ்வச் பாரத்' என்ற தூய்மை இந்தியா திட்டம் ஆகிய திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது,'' என்ற ஆர்.என்.ரவி, முத்ரா திட்டத்தில் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை சிறு கடன் பெற்று, சின்னதாக தேநீர் கடையோ அல்லது சமோசா கடையோ போட்டால்கூட தொழில்முனைவோராகி விடலாம் என்றதுதான் பார்வையாளர்களையே கதிகலங்க வைத்தது. பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற குணம் இந்தியர்களின் டி.என்.ஏ.விலேயே இருக்கிறது. அதனால்தான் கொரோனா நோய்த்தொற்று  காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள், பிற நாடுகளுக்கு இலவசமாக வழங்கி உதவ முடிந்தது என்றும் கூறினார் ஆர்.என்.ரவி.     

 

கடந்த 2021ம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று உச்சத்தில் இருந்தபோது, தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் பல இடங்களில்  தடுப்பூசி முகாம்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இந்திய அரசு, பிற நாடுகளுக்கு உதவி செய்த அதேவேளையில், உள்நாட்டிலேயே  கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள் பேராசிரியர்கள். இதையெல்லாம் ஆளுநர் பெரிய சாதனை போல பேசுகிறார் என்ற விமர்சனமும் கிளம்பியது.     சமோசா கடையும், தேநீர் கடையும் போடலாம் என்ற ஆளுநர், ஏனோ பானி பூரி கடையும், பான் பீடா கடையும் போடலாம் என்று சொல்ல  மறந்துவிட்டதாக கிண்டல் பேச்சுகளும் மாணவர்கள் மத்தியில் ஒலித்தன. 

 

ஆளுநர் ரவி, வரும் தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டுப் போடுங்க என்றுதான் பச்சையாக சொல்லவில்லையே தவிர, அக்கட்சிக்கு முழுநேர பிரச்சார  பீரங்கியாகி விட்டதாகவே சொல்கிறார்கள் பெரியார் பல்கலை பேராசிரியர்கள். கருத்தரங்கில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி இறுதியாக, மத்திய அரசின் திட்டங்களை மாணவ, மாணவிகள் மக்களிடம் எடுத்துச் சொல்ல  வேண்டும் என்று அன்பாக வேண்டுகோளும் விடுத்துள்ளார். ஆளுநரே பாஜ கட்சியின் நட்சத்திர பேச்சாளர் போல மாறி வருவது, அந்தப் பதவிக்கு அழகல்ல என பல தரப்பிலும் கண்டனங்களும்  எழுந்துள்ளன. இது ஒருபுறம் இருக்க, நவம்பர் 24ம் தேதி, பெரியார் பல்கலையில் இருபத்தி இரண்டாவது பட்டமளிப்பு விழாவை காலை 9 மணிக்கே  தொடங்கியது பல்கலை நிர்வாகம். இதுவும் பல தரப்பிலும் அதிருப்தியைக் கிளப்பி இருக்கிறது. பட்டமளிப்பு விழா என்பது பகல் 11 மணியளவில் நடத்தப்படுவதுதான் காலங்காலமாக இருந்து வரும் நடைமுறை. இந்த மரபுக்கு முரணாக  காலை 9 மணிக்கே பட்டமளிப்பு விழாவை நடத்தியுள்ளனர்.     

 

மேலும், பதிவாளர் நேர்காணலில் வெளிப்படைத்தன்மை இன்மை மற்றும் விதிமீறல், துணைவேந்தரின் தன்னிச்சையான செயல்பாடு  உள்ளிட்ட நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து, செனட் உறுப்பினர்களும், கல்லூரி ஆசிரியர் கழகத்தினரும் மொத்தமாக புறக்கணித்தனர். அதேபோல் சிண்டிகேட் உறுப்பினர்களில் அரசுப் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ள நிலையில், தமிழக அரசின் பல்கலைக்குள் புகுந்து  பாஜகவுக்கு ஆதரவாக மறைமுகமாக பரப்புரை செய்துவிட்டுச் சென்றது ஆளுங்கட்சித் தரப்பிலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு உள்ளது.     

 

'சந்திரமுகி' படத்தில், கங்கா பாத்திரத்தில் நடித்த ஜோதிகா, மெல்ல மெல்ல சந்திரமுகியாக மாறியதுபோல், ஆளுநர் என்ற அந்தஸ்தில் இருந்து  ஆர்.என்.ரவி, மெல்ல மெல்ல தாமரைக் கட்சியின் பிரச்சார பீரங்கியாகவே மாறிவிட்டதாக அதிருப்தி கிளம்பியுள்ளது. கருத்தரங்கில் கலந்து கொண்ட முனைவர் பட்ட மாணவர்கள், 'என்ன கொடுமை ஆர்.என்.ரவி சார்?' என கிண்டலாக பேசியபடியே அந்த அரங்கத்தை விட்டு  வெளியேறினர். ஆளுநரின் கருத்தரங்கு பேச்சை ரகசியமாக பதிவு செய்த நுண்ணறிவுப்பிரிவு மற்றும் எஸ்பிசிஐடி ஆகிய உளவுப்பிரிவு காவல்துறையினர்,  தமிழக காவல்துறை மேலிடத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர்.  

 

 

Next Story

பாஜகவை அதிரவைத்த இளைஞன்; தடம் மாறும் தேர்தல் களம் - யார் இந்த பாலைவன புயல்?

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan
பாஜக மத்திய அமைச்சர் ரூபாலா

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி 12 தொகுதிகளுக்கு முதற்கட்டத்தில் வாக்குப்பதிவும், மீதம் உள்ள 13 தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்து முடிந்தது. இதில், ராஜஸ்தானின் பார்மர் தொகுதி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தின் பெரிய தொகுதியான பார்மர் மக்களவைத் தொகுதியில் இந்த முறை பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சரான கைலாஷ் சௌத்ரி மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் உமேதராம் போட்டியிடுகிறார். இப்படி, இருமுனை போட்டி தொடக்கத்தில் நிலவி வந்த நிலையில், பாஜக மத்திய அமைச்சர் ரூபாலாவின் சர்ச்சை பேச்சை களத்தையே புரட்டிப் போட்டுள்ளது. முன்னதாக கூட்டத்தில் பேசிய ரூபாலா, ராஜ்புத் சமூக ராஜாக்கள், பிரிட்டிஷாருக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு ஆங்கிலேயர்களிடம் நெருக்கமாக இருந்ததாக வார்த்தையை விட்டு அதன்பின் மன்னிப்பும் கேட்டார். ஆனால், ராஜ்புத் சமூக மக்களோ ரூபாலாவை நிறுத்தினால் நிச்சயம் தேர்தலில் பாஜகவிற்கு பதிலடி கொடுப்போம் என பிரமாண்ட கூட்டத்தை கூட்டி முடிவு எடுத்தனர்.

Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan

அதன் பிறகும் பாஜக ரூபாலாவை திரும்ப பெறவில்லை. இதனால், ராஜ்புத் சமூகமே பாஜகவின் மீது கொதித்துப் போய் உள்ளது. அதன் வெளிப்பாடே ராஜஸ்தானின் பார்மரின் தொகுதியில் 27 வயதான 'ரவீந்திர சிங் பதி தன்' சுயேட்சையாக போட்டியிடுகிறார். இரு தேசிய கட்சிகள் மோதும் களத்தில் ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு பிரச்சாரத்தில் அமோக ஆதரவு மக்கள் வழங்கியது தேசய அளவில் கவனம் பெற்றது. இளம் வேட்பாளரான ரவீந்திர சிங் ராஜ்புத் சமூகத்தின் தலைவராக உள்ளார். பாஜகவின் மாணவர் அமைப்பில் உறுப்பினராக இருந்த ரவீந்திர சிங், தனது கல்லூரி காலத்தில் ஒரு முறை சுயேட்சையாக கல்லூரி தேர்தலில் போட்டியிட்டார்.

அப்போது, வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அந்த முறை சுயேட்சையாக போட்டியிட்ட ரவீந்திர சிங் 57 வருட கல்லூரி தேர்தல் வரலாற்றை மாற்றி தலைவராக வெற்றிப் பெற்றார். அதன் பிறகு பாஜவில் இணைந்த ரவீந்திர சிங்கிற்கு கடந்த ராஜஸ்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், மீண்டும் சுயேட்சையாக போட்டியிட்டே தனது 26 வயதில் சட்ட மன்றத்தில் நுழைந்தார்.

Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan
ரவீந்திர சிங் பதி தன்'

இத்தகைய சூழலில் நாடு முழுவதும் பாஜகவின் வாக்கு வங்கியாக இருந்த ராஜ்புத் சமூகம், நடைபெரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு பாடம் புகட்ட முடிவு எடுத்த நிலையில், மீண்டும் சுயேட்சையாக பார்மரின் மக்களவையில் களம் இறங்கியுள்ளார். அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. தேசிய வேட்பாளர்களுக்கு போட்டியாக கூட்டம் கூடியது. அதனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ரவீந்திர சிங் பாஜகவிற்கு கடும் போட்டியாக இருப்பார் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பாலைவனப் புயல் என்று அவரது பகுதி மக்களால் அழைக்கப்படும் ரவீந்திர சிங் மக்களவைத் தேர்தலிலும் சுயேச்சை புயாலாக வீசுவார என்ற கேள்விக்கு ஜூன் 4தான் பதில் சொல்லும்.   

நாடு முழுக்க இந்தியா கூட்டணி - பாஜக கூட்டணி இடையே கடுமையான மோதல் நிலவி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.