Skip to main content

60 ஆயிரம் ஊழியர்களுக்கு ஆப்பு! தடம் புரளும் ரயில்வே!

Published on 03/08/2020 | Edited on 03/08/2020
 railway

 

மொத்தமாக இந்தியாவுக்கு ஒரு விலையை நிர்ணயித்து ப்ரைஸ் டாக் மட்டும்தான் தொங்கவிடவில்லை. மற்றபடி பொதுத்துறை நிறுவனங்களை விற்றும், அதன் பங்குகளை மற்றவர்களுக்கு விற்பனை செய்தும் தற்போதைய மத்திய அரசு அபூர்வ சாதனை புரிந்துவருகிறது. ஏற்கெனவே இருக்கும் பொருளாதார மந்தத்துடன், கரோனா கால வேலை முடக்கமும் சேர்ந்துகொள்ள மத்திய அரசு ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் பணிகளில் எக்ஸ்பிரஸ் வேகம் காட்டி வருகிறது.

 

கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் ரயில்வே பயணிகள் ரயில் சேவையை நிறுத்தியது. சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கி வருகிறது. கடந்த ஆண்டைவிட 40 சதவீதம் சரக்கு வருவாய் குறைந்திருக்கிறது. கரானோவால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை ரயில்வே வாரியம் துவக்கியது.

 

அதன் ஒருபகுதியாக ஜூலை 2-ஆம் தேதி பாதுகாப்பு சம்பந்தப்படாத பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களில் 50 சதவீதம் நிரப்பப்படாமல் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படும் என அறிவித்தது. இதற்கு முதல்நாள், ஜூலை 1-ம் தேதி 224 ரயில்கள் விற்பனைக்கான ஏல அறிவிப்பை வாரியம் வெளியிட்டது. இந்த அறிவிப்பை இதனோடு சேர்த்து பார்க்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

 

இந்த உத்தரவையடுத்து அனைத்து ரயில்வே மண்டலங்களும் பாதுகாப்பு அல்லாத பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க துவங்கின. தெற்கு ரயில்வே கணக்கெடுப்புபடி 7192 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 50 சதவீதம் பணியிடங்கள் குறைக்கப்படுவதால் தெற்கு ரயில்வேயில் 3596 ஊழியர்கள் எண்ணிக்கை குறையும்.

 

இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரனிடம் பேசியபோது, "60 ஆயிரம் ஊழியர்களை ரயில்வே குறைக்கிறது. கரோனா வருவாய் இழப்பு தற்காலிகமானதுதான். இதனைக் காரணம் காட்டி நிரந்தரமாக ரயில்வே ஊழியர்கள் எண்ணிக்கையை குறைப்பது தவறான நடவடிக்கை. ரயில்கள் விற்பனைக்காக ஊழியர்கள் குறைக்கப்படுகிறார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது'' என்றார்.

 

இந்த நடவடிக்கையால் பாதுகாப்பில்லாத ரயில்வே பணித்துறைகளில் 50 சதவீத பணியாளர்கள் வேலையிழப்பார்கள் எனவும், தென்னக ரயில்வேயில் மட்டும் 4000 பணியிடங்கள் நிரப்பாமல் விடப்படுமெனவும் தெரிகிறது.

 

ஊழியர்கள் குறைப்பு நிர்வாக பணிகளைத் தேக்கமடையச் செய்வதோடு, கடும் வேலைப்பளு ஊழியர்களை மன உளைச்சலுக்கு தள்ளும். மேலும் இளைஞர்களுக்கு ரயில்வேயில் கிடைக்கவேண்டிய 60 ஆயிரம் அரசுத்துறை வேலைவாய்ப்புகளைப் பறிக்கும். ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கும் நடவடிக்கையை ரயில்வே அமைச்சகம் கைவிடவேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் இரயிலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
young debate woman speaker rail issue

காரைக்காலில் இருந்து கடலூர் வழியாக பெங்களூர் சென்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலில் பட்டிமன்ற இளம் பெண் பேச்சாளரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று காலை காரைக்காலில் இருந்து புறப்பட்டு நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விருத்தாசலம் வழியாக பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த ரெயிலில் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த  இளம் பட்டிமன்ற பெண் பேச்சாளர் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ரயில் கடலூர் துறைமுகம்,  குறிஞ்சிப்பாடி நெய்வேலி இடையில் காலை சுமார் 10 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அந்தப் பெண் பயணம் செய்த பெட்டியில் ஒரு சிலர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது முழு மது போதையில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசாமி அந்த இளம் பெண் எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தார்.

அப்படி அமர்ந்த அவர், அடிக்கடி அந்த இளம் பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததோடு, திடீரென தனது ஆடையை விலக்கி இளம்பெண்ணை பார்த்து ஆபாசமாக, அருவருப்பான வகையில் செய்கை செய்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், அந்த மனிதனை கண்டித்ததோடு அவரது செய்கையை செல்போனில் படம் பிடித்துள்ளார். இளம் பெண் கண்டித்தும் அந்த போதை ஆசாமி, தனது ஆபாச செய்கையை நிறுத்தவில்லை. இதனால் கோபமடைந்த அந்த பெண், அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். ரயில் நெய்வேலி அருகே நிறுத்தப்பட்டது. 

பிறகு அதே ரயிலில் பயணிகள் பாதுகாப்புக்காக பயணம் செய்து கொண்டிருந்த ரயில்வே காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் சம்பவம் நடந்த பெட்டிக்கு விரைந்து சென்றார். அவரிடம் அந்த இளம் போதை ஆசாமி குறித்து புகார் தெரிவித்தார். அவரது புகாரின் பேரில் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அந்த நபரை கைது செய்து விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

பிப்.14 ல் ரயில் மறியல்:கூடிய அனைத்து கட்சி நிர்வாகிகள்

Published on 11/02/2024 | Edited on 11/02/2024
Rail strike on February 14: All party leaders present

சிதம்பரம் தேரடி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், சிதம்பரம் ரயில் நிலையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 14- ல் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

கோவை-மயிலாடுதுறை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். மைசூர்-மயிலாடுதுறை ரயில் சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். செங்கோட்டை- தாம்பரம் ரயில் , சாரதா சேது ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், காரைக்கால்-எழும்பூர் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய ரயில்கள் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி வருகிற பிப்.14ம் தேதி சிதம்பரம் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் அரங்க தமிழ் ஒளி தலைமை வகித்தார். கூட்டத்தில்  முன்னாள் எம்எல்ஏ அப்துல்நாசர், நகர் மன்ற துணைத் தலைவர் எம் முத்துக்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் சேரலாதன், நகர செயலாளர் குமார், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பூ.சி. இளங்கோவன், இந்திய கம்யூ கட்சி மாவட்ட குழு உறுப்பினர் வி.எம்.சேகர், நகர செயலாளர் தமிமுன் அன்சாரி, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி நகர செயலாளர் ராஜா, காங்கிரஸ் கட்சி நகர தலைவர் தில்லை ஆர்.மக்கின், செயல் தலைவர் தில்லை கோ.குமார், மாவட்ட துணைத்தலைவர் ராஜா சம்பத்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர் பால அறவாழி, கோ.நீதிவளவன், ரயில் பயணிகள் நலச் சங்க தலைவர் அப்துல் ரியாஸ், நிர்வாகி வழக்கறிஞர் ஸ்ரீதர், நிர்வாக செயலாளர் ஜெ.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திட்டமிட்டபடி பிப்ரவரி 14 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்பி தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தை நடத்துவது, அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் செல்ல மறுப்பது, சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் இருதய சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட மருத்துவர்களை நியமிக்க வேண்டும், இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட உயர் மருத்துவ சிகிச்சைகளை செயல்படுத்த வேண்டும்உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.