Skip to main content

இந்த அதிகாரம்தான் வலிமையானது..! - உறுதியாக இருக்கும் ஓ.பி.எஸ்.! 

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

ddd

 

சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 4 ஆண்டு சிறைத் தண்டனை முடித்து திரும்பிய சசிகலாவுக்கு அலப்பறையான வரவேற்புகள் கொடுத்து அசத்தியது தினகரன் தரப்பு. ஆனாலும், சசிகலாவுக்கு இதில் முழுதிருப்தி இல்லை. எதிர்பார்த்த நிகழ்வுகள் நடக்கவில்லை என்பதே இதற்குக் காரணம்.

 

இதுகுறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்ட அ.ம.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர், "உங்களை வரவேற்க தமிழக எல்லைக்கு ஓ.பி.எஸ். வருவார். அங்கு வர முடியாமல் போனாலும் நீங்கள் தங்கும் தி.நகர் இல்லத்திற்கு வருவார்' என சசிகலாவிடம் நம்பிக்கைத் தெரிவித்திருந்தார் தினகரன். அது நடக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியால் பழிவாங்கப்பட்ட மற்றும் அவர் மீது அதிருப்தியிலிருக்கும் அ.தி.மு.க. பிரமுகர்களை அழைத்து வருவதாக தினகரன் சொன்னதும் நடக்கவில்லை.

 

எடப்பாடி பழனிசாமியால் பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் பேசிய தினகரன், "நம்முடைய சமூகத்தினரெல்லாம் ஒற்றுமையாகவும் வலிமையாகவும் இருக்க வேண்டிய தருணம் இது. நம் வலிமையைக் காட்டினால்தான் எடப்பாடி பழனிசாமி பயப்படுவார். அதனால் நீங்கள், உடனடியாக சின்னம்மாவை வந்து பாருங்கள்'' என வலியுறுத்தியிருக்கிறார். ஆனால், மணிகண்டனோ, "அம்மாவால் (ஜெ.) பாதுகாக்கப்பட்ட நம் கட்சி பலகீனமாகும் பிரச்சனைக்கு நான் காரணமாக இருக்கமாட்டேன்'' என சொல்லி மறுத்துள்ளார். தினகரன் வீசிய வலையில், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் என சிலர் சிக்கியிருந்தாலும் தற்போது வெளிப்படையாக வருவதற்குத் தயங்குகின்றனர். சசிகலா வருகையை ஒட்டி அவருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி காட்டிய கெடுபிடிகள், நடவடிக்கைகளில் இவர்களுக்கு உடன்பாடில்லைதான். என்றாலும், "சசிகலாவை வைத்து அ.தி.மு.க.வில் மீண்டும் ஒரு பிளவு உருவாக நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம்'' என பலரும் தினகரனிடம் தெரிவித்துள்ளனர். சசிகலாவின் வியூகங்கள் அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் பொறுத்தே இவர்களின் முடிவு இருக்கும்'' என்கின்றனர் நம்மிடம்.

 

சசிகலா வருகைக்கு தடுப்பு முயற்சிகளை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, சசிக்கு அமர்க்கள வரவேற்பு கொடுக்கப்பட்ட பிறகு, தனது தேர்தல் சுற்றுப் பயணத்தை மீண்டும் துவக்கிவிட்டார். "10சி செலவு செய்து திரட்டிய கூட்டத்தால் உருவாக்கப்பட்ட வரவேற்பு' என உளவுத்துறையினர் எடப்பாடி பழனிசாமியிடம் ரிப்போர்ட் கொடுத்துள்ளனர்.

 

இதுகுறித்து அ.தி.மு.க.வில் விசாரித்தபோது, "ஓ.பி.எஸ். உட்பட கட்சியின் மிக முக்கிய சீனியர்கள் சிலர் சசிகலா பக்கம் சாய்ந்துவிடக்கூடாது என நினைத்த எடப்பாடி பழனிசாமி, அவர்கள் போக மாட்டார்கள் என உறுதிப்படுத்திக்கொண்டதும்தான் சசிகலாவுக்கு எதிரான அஸ்திரங்களை எடுத்தார். இன்னும் 25 நாட்களுக்குள் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துவிடும். தேதி அறிவித்துவிட்டால் ஆட்சி அதிகாரம் எதுவும் ஆட்சியாளர்களிடம் வலிமையாக இருக்கப்போவதில்லை. அப்போது கட்சிதான் வலிமையானது. கட்சியின் சின்னமான இரட்டை இலையை அ.தி.மு.க.வின் வேட்பாளர்களுக்கு வழங்கும் அதிகாரம் ஓ.பி.எஸ்.சுக்கும் இ.பி.எஸ்.சுக்கும் இருக்கிறது. அதனை இழக்க ஓ.பி.எஸ். விரும்பவில்லை.

 

வேட்பாளர்கள் தேர்வில் இருவரும் இணைந்துதான் முடிவெடுக்க வேண்டும். அப்போது, அ.தி.மு.க. போட்டியிடும் இடங்களை சரிபாதியாக பிரித்துக்கொள்ள கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ். கோரிக்கை வைப்பார். எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லையெனில், 40 சதவீத இடங்களுக்கு குறைவாக ஓ.பி.எஸ். ஒப்புக்கொள்ள மாட்டார். 40 சதவீத வேட்பாளர்கள் ஓபிஎஸ்சின் ஆட்களாகவும், 60 சதவீத வேட்பாளர்கள் எடப்பாடி பழனிசாமியின் ஆட்களாகவும் இருப்பார்கள். இதில் அமைச்சர்களின் சிபாரிசுகளுக்கு இரு தரப்புமே கணிசமான இடங்களை விட்டுத்தர சம்மதித்துள்ளனர்.

 

அதனால், ‘சசிகலாவின் பின்னால் செல்வது எந்தவிதத்திலும் எதிர்கால அரசியலுக்கு உதவாது' என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் ஓ.பி.எஸ். மேலும், சசிகலா தொடர்பாக டெல்லியிடமிருந்தும் தெளிவான தகவல்கள் அவருக்கு எதுவும் தரப்படாததால், அங்கிருந்து கிடைக்கும் அட்வைஸைப் பொறுத்தே, முடிவெடுக்கலாம் என்பதிலும் ஓ.பி.எஸ். உறுதியாக இருக்கிறார். இதனை சீனியர்கள் மூலம் அறிந்ததையடுத்தே, சசிகலாவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வேகமாக இயங்குகிறார்'' என்று விவரிக்கிறார்கள் அழுத்தமாக.

 

இதற்கிடையே, "22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளில் ஆட்சிக்கான பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அதுவரை எம்.எல்.ஏ.க்களுக்கு செய்துகொண்டிருந்த மாத நன்மைகளை நிறுத்திவிட்டார். இதனால் எம்.எல்.ஏ.க்களிடம் ஏற்பட்ட அதிருப்தியை சரிசெய்யும் முயற்சிகளை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். வெகுமதிகள் விரைவில் கிடைக்கும்” என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

 

சசி - இ.பி.எஸ். இடையிலான முரண்பாடுகளை வைத்து சீட் ஷேரிங்கில் காய் நகர்த்துகிறது பா.ஜ.க. தலைமை. குறிப்பாக, இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க. கட்சியில் திருத்தப்பட்ட விதிகள் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கில் சசிகலா மூலம் எடப்பாடி பழனிசாமிக்குப் பாதகமான முடிவை தேர்தல் ஆணையத்தில் எடுக்க வைக்க மத்திய அரசால் முடியும். இதனைச் சுட்டிக்காட்டி சில காய்களை நகர்த்தத் துவங்கியுள்ளது பா.ஜ.க. 

 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.